Skip to main content

“மீண்டு வருவதே நல்ல விஷயம்” - போட்டி முடிந்த பின் தோனி பேசியது என்ன?

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

What did Dhoni say after the match?

 

16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.

 

போட்டி முடிந்த பின் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, “நான் ஓய்வு பெறுவதற்கு இது தான் சரியான நேரம். ஆனால், இந்த ஆண்டு நான் எங்கு சென்றாலும் என் மீது காட்டப்பட்ட அன்புக்கு என்னால் சொல்ல முடிந்தது நன்றி மட்டும்தான். கடினமான விஷயம் என்ன என்றால் இன்னும் கடினமாக உழைத்து அடுத்து ஒரு சீசனிலாவது விளையாட முயற்சிக்க வேண்டும்.  இது, தான் நான் ரசிகர்களுக்கு கொடுக்கும் பரிசாக இருக்க முடியும். இது சென்னை அணி ரசிகர்கள் தங்கள் அன்பையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்தியதற்காக அவர்களுக்காக செய்ய வேண்டிய ஒன்று. நான் முதல் போட்டியில் விளையாட வந்தபோது ரசிகர்கள் என் பெயரை சொல்லி அழைத்தபோது என் கண்களில் நீர் திரண்டது. அதுபோல் தான் சென்னையில் கடைசி லீக் போட்டியும் இருந்தது. ஆனால் இதில் என்னால் என்ன முடியுமோ அதை செய்து மீண்டும் விளையாட வருவதே நல்ல விஷயமாக இருக்கும்.

 

நான் என்னவாக இருக்கிறேனோ அதற்காக அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். எனது கிரிக்கெட்டில் மரபு ரீதியிலான (ஆர்த்தோடாக்ஸ்) பண்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் அவர்களும் அந்த வழியிலேயே விளையாட முயல்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் என்னுடன் அதிகம் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு கோப்பையும் சிறப்பான ஒன்றுதான். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் தயாராக இருக்க வேண்டும். எங்களது பந்துவீச்சு இன்று சரியாக அமையவில்லை. ஆனால் பேட்ஸ்மேன்கள் அழுத்தத்தை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். ஒவ்வொருவரும் அழுத்தமான சூழ்நிலையை வித்தியாசமாக எதிர்கொண்டார்கள். ரஹானே உட்பட சில வீரர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். எனவே அவர்களைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை.

 

களத்தில் இருக்கும்போது 100% உழைப்பையும் ராயுடு கொடுப்பார். அதுதான் அவரிடம் சிறப்பானதே. அவர் மிகச்சிறந்த வீரர். இந்தியா ஏ சுற்றுப் பயணத்தில் இருந்து நீண்ட காலமாக அவருடன் விளையாடி வருகிறேன். சுழலையும் வேகப்பந்து வீச்சையும் சமமாக எதிர்கொள்ளும் வீரர்களில் அவரும் ஒருவர். உண்மையிலேயே இது மிகச் சிறப்பான ஒன்று. அவரும் என்னைப் போலவே செல்போனை அதிகம் பயன்படுத்துபவர் அல்ல. ராயுடு வாழ்வின் அடுத்தகட்டத்தை மிக சந்தோசமாக வாழ்வார் என நம்புகிறேன்” என்றார்.

 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.