Skip to main content

"புத்திசாலிகள்.. பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தினார்கள்" - சென்னை ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

virat kohli

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னையில் நடைபெற்றது. கரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியில்தான் ரசிகர்களுக்கு அனுமதி (50 சதவீதம்) வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் முதல் நாளிலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

இப்போட்டியில் அஷ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்ததோடு, இரண்டு இன்னிங்க்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டிக்குப் பிறகு பேசிய இந்தியக் கேப்டன் விராட் கோலி, போட்டியைக் காண மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்களைப் புகழ்ந்து தள்ளினார்.

 

இதுதொடர்பாக அவர், "முதல் ஆட்டத்தில், பார்வையாளர்கள் இல்லாமல் சொந்த மண்ணில் விளையாடுவது சற்று வித்தியாசமாக இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் முதல் இரண்டு நாட்கள், என்னையும் சேர்த்து, சோர்வாக இருந்தோம். யாரும் எனர்ஜியோடு இல்லை. முதல் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்க்ஸில் இருந்து நாங்கள் எங்கள் ஆட்டத்தை விளையாடினோம். உடல்மொழியிலும், நாங்கள் களத்தில் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதிலும் சரியாக இருந்தோம். ஆனால் இந்த ஆட்டத்தில், ரசிகர் கூட்டம் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது என நான் நினைக்கிறேன். ரசிகர்கள் உங்களுக்குப் பின்னால் இருக்கும்போது, நீங்கள் ஒரு அணியாக அதிகமாக உந்தப்படுவீர்கள். இந்த ஆட்டம் நாங்கள் வெளிப்படுத்தும் மன உறுதிக்குச் சான்றாகும். நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம். அதில் ரசிகர்களின் ஆதரவுக்குப் பெரும் பங்குண்டு" எனக் கூறினார்.

 

மேலும் விராட் கோலி, “சென்னை ரசிகர்கள் புத்திசாலிகள். அவர்கள் எங்கள் கிரிக்கெட்டை நன்றாக புரிந்துகொள்கிறார்கள். பந்து வீச்சாளருக்கு ரசிகர்களின் ஆதரவு தேவைப்படும் 15 - 20 நிமிட காலகட்டத்தில், அனைவரையும் அதில் ஈடுபடுத்துவது எனது பொறுப்பு. இந்த வெப்பத்தில் நான் பந்துவீச ஓடினால், என்னை ஊக்குவிக்க மக்கள் தேவை. இது எங்களுக்கு சரியான ஆட்டமாக அமைந்தது” எனவும் தெரிவித்தார்.

 

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்