Skip to main content

வந்தாங்க அடிச்சாங்க சூப்பர் ஓவர்.. ரிபீட்டு... த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!

Published on 17/01/2024 | Edited on 19/01/2024
Vandanga Adichanga super over.. repeat... India won the thrill!

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று மூன்றாவது டி20 போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஜெய்ஸ்வால் 4, விராட் 0, சிவம் துபே 1, சாம்சன் 0 என் அடுத்தடுத்து வெளியேறினர். இந்திய அணி 22-4 என்று திணறி வந்தது. பிறகு வந்த ரிங்கு சிங், ரோஹித்துடன் இணைந்து பொறுமையாக ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். பின்னர் இருவரும் விளாசத் தொடங்கினர். பழைய ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் பந்துகளை பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்கவிட்டபடி இருந்தார். அவருக்கு துணை நின்ற ரிங்கு சிங்கும் சிக்சர் மழை பொழிந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் டி20 போட்டிகளில் தனது 5 ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இது உலக டி20 வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாகும். ரிங்கு சிங்கும் தன் பங்கிற்கு அரைசதம் கடந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்தது. அஹமது 3 விக்கெட்டுகளும், அஸ்மத்துல்லா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 213 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க இணை சிறப்பான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜத்ரானும் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஒமர்ஜாய் ரன் எட்தும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நபியும், குலாபதினும் அதிரடி காட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒருவழியாக நபியை வாஷிங்டன் 34 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து வந்த ஜனத் 2 ரன்னிலும், ஜத்ரான் 5 ரன்களிலும் வெளியேறினாலும் மறுபக்கம் குலாப்தின் தனது அதிரடியை குறைக்கவில்லை. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை முகேஷ் வீச வந்தார். கடைசி பந்து வரை ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட 2 ரன்கள் எடுத்து சமன் செய்தனர். இதன் மூலம் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை முதலில் பேட் செய்ய வைத்தார் ரோஹித். குலாபதின் 1 ரன்னில் ரன் அவுட் ஆக நபி சிக்சர் உதவியுடன் ஒரு ஓவரில் 16 ரன்கள் எடுத்தது. பின்னர் 17 ரன்கள் எடுத்தால் வெற்றை என்ற இலக்குடன் ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோஹித் முதல் பந்தில் 1, ஜெய்ஸ்வால் 1, அடுத்த  இரண்டு பந்தில் ரோஹித் சிக்சர் அடிக்க கடைசி இரண்டு பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்ததால் மீண்டும் சமன் ஆனது. 

மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் வீசப்பட்டது. அதில் இந்திய அணிக்கு ரோஹித் மற்றும் ரிங்கு களமிறங்கினர். ரோஹித் முதல் பந்தில் 6, அடுத்த பந்தில் 4 என அதிரடி காட்டினார். அடுத்து சிங்கிள் எடுக்க , அடுத்த பந்தில் ரிங்கு ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் ரோஹித் ரன் அவுட் ஆக 11 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் எடுக்க மு்டிந்தது. பின்னர் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்த முறை ஸ்பின்னர் பிஷ்னோய் வீச வந்தார். முதல் பந்தில் நபியை ஆட்டமிழக்க செய்தார். அடுத்த பந்தில் ஜனத் 1 ரன் எடுக்க, 3 ஆவது பந்தில் குர்பாஸ் ஆட்டமிழக்க இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

-வெ.அருண்குமார் 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.