Skip to main content

இந்திய வீரரானார் தமிழக வீரர் நடராஜன்!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

Natarajan

 

 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் இடம்பிடித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையான முதல் இரு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இந்த நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

 

ஐபிஎல் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் நடராஜனுக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அணியில் இடம் கிடைத்தது. முதலில் இருபது ஓவர் போட்டிகளுக்கான அணிக்கு மட்டும் தேர்தெடுக்கப்பட்ட நிலையில், பின் ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

 

முதல் இரு போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நடராஜனுக்கு இன்றைய போட்டிக்கான ஆடும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்திய அணியின் ஜெர்சியில் நடராஜன் பந்துவீசும் காட்சியைப் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.