Skip to main content

“எனக்கு வருத்தம் அளிக்கிறது” - ஆஸ்திரேலிய வீரரின் செயல் குறித்து முகமது ஷமி கருத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Mohammed Shami comments on the Australian player's action

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமி, மிட்செல் மார்ஷின் செயலுக்கு தனது வேதனையை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முகமது ஷமி, “நான் காயமடைந்திருக்கிறேன். அந்த உலகக் கோப்பைக்காக தான் உலக நாடுகள் அனைத்தும் போட்டியிடுகிறது. அந்த கோப்பையை தலைக்கு மேல் உயர்த்தி தூக்கிக்காட்ட வீரர்கள் விரும்புகின்றனர். அப்படி தலைக்கு மேல் வைக்க வேண்டிய கோப்பையில், காலை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை” என்று கூறினார். ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

முகமது ஷமிக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்; மத்திய அரசு அறிவிப்பு

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Central Govt announced arjuna award for cricket player Mohammed Shami

விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2வது உயரிய விருதாக அர்ஜுனா விருது கருதப்படுகிறது. அந்த விருதை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி அந்த வீரர்களைக் கவுரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தன. அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. மனைவியிடம் விவாகரத்து, சூதாட்ட புகார்கள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய முகமது ஷமி, காயத்தாலும் சில ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார். சூதாட்டப் புகார்களில் குற்றமற்றவர் என நிரூபணம் ஆகி, காயமும் முழுமையாகக் குணமடைந்து புத்துணர்ச்சியுடன் இந்திய அணிக்குத் திரும்பினார். சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில், அனுபவ வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். 

இந்தத் தொடரில், முதல் நான்கு போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பிடிக்காத முகமது ஷமி, நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது லீக் போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக இடம்பிடித்தார். உலகக் கோப்பையில் பங்கு பெற்ற முதல் ஆட்டத்திலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகப் பந்து வீசிய முகமது ஷமி இந்தத் தொடரில் மட்டும் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி, ஒட்டு மொத்தமாக 4 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

முக்கியமாக அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் எனும் புதிய சாதனை படைத்தார். இதனால் இவரை கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டி வந்தனர். அந்த வகையில், இன்று முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முகமது ஷமியின் சாதனைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் சொந்த ஊரான சகஸ்பூர் அலி நகர் கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்திருந்ததாகத் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.