
நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பர்க்கில் இன்று நடந்தது.
டி20 போட்டிக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தினார். ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், பல இளம் வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் தங்களது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியை இன்று விளையாடுகின்றனர். ஆக்லாந்தில் உள்ள ஈடன்பர்க்கில் நடந்த இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் முதலில் களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் நிலையாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை சேர்த்தனர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் வேகமாக ரன்களை சேர்க்க ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தனர். இதன் பின் வந்த சஞ்சு சாம்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அதிரடியில் 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 306 ரன்களை எடுத்தது.
307 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபின் ஆலன் மற்றும் கான்வே சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் இணைந்து வலுவான கூட்டணி அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதி வரை ஆடிய வில்லியம்சன் 94 ரன்களுடனும் டாம் லாதம் 145 ரன்களுடனும் களத்தில் நின்று இலக்கை எட்டினர். ஆட்ட நாயகனாக டாம் லாதம் தேர்வு செய்யப்பட்டார்.