கடந்த மாதம் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றவர் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து. கோமதி தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற பொருட்களை பயன்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதால் அவருக்கு இடைக்கால தடை விதித்து இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.
![indian athlete federation issues inetrim ban on gomathi for failing dope test](http://image.nakkheeran.in/cdn/farfuture/BtzTjWd3nLFAW0hBKyTSKXYcUm_eVatlLYvMb9wi0ZU/1558502675/sites/default/files/inline-images/gomathi-ss_0.jpg)
ஆசிய போட்டியில் போது ஊக்கமருந்து சோதனைக்காக கோமதியின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் நான்ட்ரோலோன் எனும் ஸ்டெராய்ட் மருந்தை அவர் எடுத்துக்கொண்டது உறுதியாகியுள்ளதாகவும் என்று ஆசிய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கோமதிக்கு இடைக்கால தடை விதிப்பதாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தடகள அமைப்பின் தலைவர் அடிலி சுமரிவாலா கூறுகையில், " மார்ச் மாதம் நடந்த பெடரேஷன் கோப்பை, தோஹாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஆகிய இரண்டிலும் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி அடைந்துள்ளார். எனவே உடனடியாக கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அடுத்தகட்ட சோதனைக்காக அவரது பி சாம்பிள் கேட்கப்பட்டுள்ளது. அந்த சோதனையிலும் அவர் தோல்வியடைந்தால், 4 ஆண்டுகள் தடை அவருக்கு விதிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
கோமதி மீதான இந்த புகாரை அவரது குடும்பத்தினர் மறுத்து வந்த நிலையில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.