Skip to main content

தோல்வியடையாத தென் ஆப்பிரிக்காவுடன் வெற்றி முனைப்பில் இந்தியா.. என்ன நடக்கும் இன்று..?

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

India in series win.. South Africa who have not lost so far.. what will happen today

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகளும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.

 

ஆசிய கோப்பை தோல்விக்கு பின் ஆஸியுடனான தொடரிலும் முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த இரு போட்டிகளிலும் வென்று அசத்தியது. இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்திய அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பந்து வீச்சு மட்டுமே. 

 

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட போதில் இருந்து தங்கள் அணி நிர்ணயித்த குறைவான இலக்கையும் எதிரணியை எட்ட விடாமல் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் அதகளம் செய்தவர் ரோஹித் சர்மா. ஆனால் ஆஸியுடனான முதல் போட்டியில் ஏறத்தாழ 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தும் ஆஸியை வெல்ல வைத்து அதிர்ச்சி அளித்தது. இந்த தொடர் உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி தொடர் என்பதால் முயற்சிகள் மற்றும் சோதனைகள் அனைத்தையும் முயன்று பார்க்க இரு அணிகளுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

 

உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகியுள்ள அஷ்வின் ஆஸியுடனான தொடரில் களமிறக்கப் படவில்லை. இந்த தொடரில் கண்டிப்பாக அவர் விளையாடுவது அவசியம் என பார்க்கப்படுகிறது. பும்ரா, ஹர்ஷல் படேல் தங்கள் ஃபார்மிற்கு திரும்பினால் எதிரணி கண்டிப்பாக திணறும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

மறுபுறம் பவுமா தலைமையில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல நிலையில் உள்ளது. பேட்டிங்கில் டி காக், ரோசவ், மார்க்ரம், மில்லர் என ஒரு படை காத்திருந்தால் மறுபுறம் பந்துவீச்சில் ரபாடா, நோர்க்டியா, பிரிட்டோரியஸ், ஜேன்சன் என பட்டாளம் காத்திருக்கிறது. 

 

இரு அணிகளின் பலத்தை ஒப்பிடுகையில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு படி மேலேதான் உள்ளது. இருந்தும் இந்திய அணி புயலாய் எழுந்து நின்று தென் ஆப்பிரிக்காவை தன் சுழலுக்குள் சிக்க வைக்குமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.  மேலும் இந்திய மண்ணில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிட்ரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இதுவரை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

இரு அணிகளும் இதுவரை டி20 போட்டிகளில் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11ல் இந்தியாவும் 8ல் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. திருவனந்தபுரத்தில் கிரீன்பீல்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் போது மழை குறுக்கிடலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

இந்தியா உத்தேச வீரர்கள் : ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், பும்ரா, அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் பட்டேல்.

 

தென்ஆப்பிரிக்கா உத்தேச வீரர்கள் : குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), மார்க்ராம், ரோசவ் அல்லது ரீஜா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பிரிட்டோரியஸ் அல்லது பெலுக்வாயோ, ஷம்சி, ரபடா, அன்ரிச் நோர்டியா, மார்கோ ஜேன்சன்.

 


 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.