Skip to main content

ஜெய்ஸ்வால் அதிரடியால் அதிர்ந்த ராஜ்கோட்; ரன்களை வாரிக் குவித்த இந்திய அணி!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
ind vs eng third test match live score update jaiswal double century

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும்,  சர்பராஸ் கான் 62 ரன்களும் எடுத்தனர்.  இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக  சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை.  கேப்டன் ரோஹித் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த ஜெய்ஸ்வால், கில் இணை சிறப்பாகவும், பொறுப்பாகவும் ஆடியது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது 3 ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.  கில் அரை சதம் கடந்தார். 102 ரன்கள் இருந்தபோது ரிட்டையர்டு ஹர்ட் முறையில் ஜெய்ஸ்வால் 102 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த பட்டிதார் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதனால் நைட் வாட்ச்மேனாக குல்தீப் வந்தார். குல்தீப் 3, கில் 65 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோர் 196-2 என மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்தது.

ind vs eng third test match live score update jaiswal double century

தொடர்ந்து 4ஆவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணிக்கு கில் மற்றும் குல்தீப் சிறப்பாக ஆடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 91 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். பின்னர் ரிட்டையர்டு ஹர்ட் ஆன ஜெய்ஸ்வால் மீண்டும் ஆடக் களமிறங்கினார். சிறப்பாக நைட் வாட்ச்மேன் இன்னிங்ஸ் ஆடிய குல்தீப் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜெய்ஸ்வாலுடன் சர்பிராஸ் கான் இணைந்தார். இந்த இணை அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. சிறப்பாக மற்றும் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் மற்றும் சர்பிராஸ் கான் இணை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களையும் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் சர்பிராஸ் கானும் அரைசதம் கடந்தார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 430 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.  557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. தொடக்க வீரர் க்ராவ்லி 11 ரன்களிலும், டக்கெட் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். தேநீர் இடைவேளையின் போது 8.2 ஓவர்களில் 18-2 என இங்கிலாந்து ஆடி வருகிறது.  

- வெ.அருண்குமார்

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.