Skip to main content

போட்டிக்கு முன் வீரர்களிடம் சொன்ன வார்த்தை; போட்டி முடிந்து தோனி சொன்ன ரகசியம்

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Dhoni's words to the players before the match; Dhoni's secret after the match

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளன. அதன்படி குஜராத், சென்னை, லக்னோ, மும்பை என 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளன.

 

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது. 20 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்து  15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக 60 ரன்களை அடித்த ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டார். இதனால் 10 ஆவது முறையாக சென்னை அணி ஃபைனலுக்கும் நுழைந்தது.

 

போட்டி முடிந்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, “ஐபிஎல் மிகப் பெரியது, இது மற்றொரு இறுதி ஆட்டம் என்று கூற முடியாது. உலகின் முன்னணி வீரர்களுடன் கூடிய 8 அணிகளாக இருந்த ஐபிஎல் தொடர் இப்போது 10 அணிகளுடன் நடக்கிறது. அது இன்னும் கடினமானது. இது மற்றொரு இறுதிப் போட்டி என நான் சொல்லமாட்டேன். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடினமாக உழைத்துள்ளோம். அதன் காரணமாகவே இங்கு நின்று கொண்டுள்ளோம். தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை எங்களின் வீரர்களின் சிறப்பு தன்மைகள் வெளிப்பட்டன. ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்துள்ளனர் என நான் நினைக்கிறேன். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு போதுமான வாய்ப்புகள் கிட்டவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது அதை அவர்கள் அதை முழுமையாக பயன்படுத்தியுள்ளனர். 

 

குஜராத் மிகச் சிறந்த அணி. அவர்கள் சிறப்பாக சேஸ் செய்வார்கள். டாஸ் இழந்தது நல்லது என நினைக்கிறேன். இம்மாதிரியான சூழல் ஜடேஜாவிற்கு உதவுவதாக அமையும். அப்போது அவரது பந்துகளை அடிப்பது கடினம். அந்த நேரத்தில் அவர் பந்து வீசியது ஆட்டத்தை மாற்றியது. அதேபோல் ஜடேஜா - மொயின் அலி அமைத்த பார்ட்னர்ஷிப்பையும் மறக்க முடியாது. குறைவான ரன்களாக இருந்தாலும் இது போன்ற சூழலில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம். நாங்கள் அணிக்குள் நல்ல சூழலை உருவாக்க முயல்கிறோம். பந்துவீச்சாளர்களிடம் உங்களது பந்துவீச்சை மேம்படுத்துங்கள் என கூறுகிறோம். குறிப்பிட்ட பேட்ஸ்மேன் விக்கெட்டை எடுக்க மற்ற அணிகள் எம்மாதிரி திட்டமிடுகின்றன என பார்க்க சொல்கிறோம். அவர்களும் அதை பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஆட்டத்தை மேம்படுத்த பலரும் உதவுகிறார்கள்.

 

ஆடுகளம், சூழல் ஆகியவற்றைப் பார்த்து ஃபீல்டிங்கை மாற்றி அமைக்க வேண்டும். 2 - 3 பந்துகளுக்கு வீரர்களின் பீல்டிங்கை மாற்றி அமைத்துக்கொண்டே இருந்தேன். நீங்கள் ஃபீல்டிங் செய்யும் போது 2- 3 பந்துகளுக்கு இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தால் ஒரு வேளை எரிச்சல் வரலாம். ஆடுகளத்தின் தன்மை போன்றவற்றை பார்க்கும் போது என் உள்ளுணர்வு சொல்வதை நம்பினேன். அதன் காரணமாகவே, நான் வீரர்களிடம் வைத்த கோரிக்கை என் மீது கண் வைத்திருங்கள் என்பதுதான். நீங்கள் கேட்ச் தவறவிட்டால் எதுவும் சொல்லப் போவதில்லை. எப்போதும் என்னைப் பார்த்த வண்ணம் இருங்கள் என கூறினேன். 

 

நான் மீண்டும் சென்னையில் விளையாடுவேனா என்பது குறித்து முடிவெடுக்க இன்னும் 8 முதல் 9 மாதங்கள் இருக்கிறது. அதனால் இப்போது சொல்ல முடியாது. டிசம்பர் மாதம் மினி ஏலம் நடக்கும். அதனால் இந்த தலைவலியை இப்போதே ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும். அது குறித்து முடிவெடுக்க போதுமான நேரம் இருக்கிறது. எப்போதும் சென்னை அணியுடனே இருப்பேன். அது ப்ளேயிங் 11ல் இருந்தாலும் சரி அப்படி இல்லை என்றாலும் சரி” எனக் கூறினார்.

 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.