Skip to main content

விராட் கோலிக்கு ஆபத்து?; பயங்கரவாதிகள் மிரட்டலால் பரபரப்பு!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
Danger for Virat Kohli due to threats

ஐபிஎல் 2024இன் 65ஆவது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் அடித்தது. அதனை தொடர்ந்து, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த அபார வெற்றி மூலம், பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

இதனையடுத்து, முதல் தகுதி சுற்று போட்டி நேற்று (21-05-24) நடைபெற்றது. இதில், ஹைதராபாத் அணியை தோற்கடித்து நேரடியாக இறுதிச்சுற்றுக்கு கொல்கத்தா அணி தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று (22-05-24) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கும், பெங்களூர் அணிக்கும் போட்டி நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளில் வெற்றி பெறும் அணி, அடுத்ததாக ஹைதராபாத் அணியோடு மோதவிருக்கிறது.

இத்தகைய சூழலில், பெங்களூர் அணி வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால், இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த பயிற்சியை பெங்களூர் அணி ரத்து செய்துள்ளது. மேலும், இந்த மிரட்டல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, கடந்த 20ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகள் 4 பேரை குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

குஜராத் கலவரம் பற்றிய பாடப்பகுதி திருத்தத்தால் சர்ச்சை; என்.சி.இ.ஆர்.டி இயக்குநர் விளக்கம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
NCERT Director Explains Why the Gujarat issue Course Removed?

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதன் பின்னர், பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டடப்பணிகள் தொடங்கி கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தரிசனம் நடைபெற்று வருகிறது. 

அதே போல், கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்தனர்.  அதில் பற்றி எரிந்த நெருப்பில் சிக்கிக் கொண்ட பொதுமக்களும்,  கரசேவகர்களும் வெளியே வரமுடியாமல் அலறித் துடித்தார்கள். இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள், 27 பெண்கள் என்று மொத்தம் 59 பேர் பலியானார்கள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்ற செய்தி குஜராத் முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அப்படி அந்த செய்தி பரவியதும் குஜராத் மாநிலம் முழுவதும் ரத்தக் காடாக மாறத் தொடங்கியது. கோத்ராவில் தொடங்கி குஜராத் முழுவதும் நடந்த அந்தக் கலவரம் சுமார் மூன்று மாதம் வரை நீடித்தது. 

இந்த நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரித்த 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தக்கத்தில், குஜராத் கலவரம் பற்றியும், பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்தும், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளன. குஜராத்தில் நடந்த கலவரம் குறித்த பாடத்தில் முன்பு இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்று இருந்ததை பல சமூகத்தைச் சேர்ந்த பலரும் பலியானதாக கூறப்பட்டுள்ளது. அதே போல், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய திருத்தங்கள் கடும் சர்ச்சையாகியுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் வரலாற்றை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  

அதே வேளையில், என்.சி.இ.ஆர்.டி இயக்குநர் தினேஷ் பிரசாத் ஒரு செய்தி நிறுவனனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பள்ளி பாடப்புத்தகங்களில் ஏன் கலவரம் பற்றி கற்பிக்க வேண்டும்? நாங்கள் நேர்மறையான குடிமக்களை உருவாக்க விரும்புகிறோம், வன்முறை மற்றும் மனச்சோர்வடைந்த நபர்களை அல்ல. நம் மாணவர்களுக்கு அவர்கள் புண்படுத்தும் வகையில் கற்பிக்க வேண்டுமா, சமூகத்தில் வெறுப்பை உண்டாக்க வேண்டுமா அல்லது வெறுப்புக்கு ஆளாக வேண்டுமா? அதுதான் கல்வியின் நோக்கமா? 

இப்படிப்பட்ட சிறு குழந்தைகளுக்கு கலவரம் பற்றி சொல்லிக் கொடுப்போமா? அவர்கள் வளர்ந்ததும் அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம், ஆனால் ஏன் பள்ளி பாடப்புத்தகங்கள். அவர்கள் வளரும்போது என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்? ராமர் கோவில், பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தால், அதை நமது பாடப்புத்தகங்களில் சேர்க்கக் கூடாதா, அதில் என்ன பிரச்சனை? புதிய புதுப்பிப்புகளைச் சேர்த்துள்ளோம். புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கினால், பழங்கால வளர்ச்சிகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்களைச் சேர்ப்பது நமது கடமையாகும்” என்று கூறினார். 

Next Story

“நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்” - முதல்வர் வலியுறுத்தல்!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Central govt should stop supporting NEET CM insists 

இளநிலை மருத்து படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் தான் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஒரு மையத்தில் நடைபெற்ற தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி பயிற்சி மையத்தின் தலைவர் உட்பட 5 பேரை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான ஆங்கில செய்தியைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வு தொடர்பாகச் சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தேர்வு தடுக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு (NTA) மத்திய கல்வி அமைச்சர் ஆதரவு தெரிவித்த போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் தேசிய தேர்வு முகமை வித்தியாசமான முகத்தைக் காட்டுகின்றன. 

Central govt should stop supporting NEET CM insists 

பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் எட்டு வெற்று காசோலைகளை உள்ளடக்கிய பணப் பலன்களுக்காக ஓ.எம்.ஆர். தாள்களைத் தேர்வு கண்காணிப்பாளர்கள் திருத்தியதாக குஜராத் காவல்துறை முதல் தகவல் அறிக்கைகை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது. பள்ளியின் முதல்வர், இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி, நீட் தேர்வு தொடர்பாக முறையான மாற்றத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மாணவி அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபகரமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.