Skip to main content

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கருத்தில் கொண்டு இந்திய அணி இன்று செய்யப்போகும் மாற்றம்?

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Considering the Test Championship, the Indian team will makechanges?

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்திய நிலையில், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒன்றில் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

 

இதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நேற்று முன்தினம் சென்னை வந்தன. இரு அணி வீரர்களுக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும். முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய அணி இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி 117 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 

 

மறுமுனையில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் நாலாபுறமும் சிதறடித்தனர். இன்று நடக்கும் போட்டியில் பந்துவீச்சில் மாற்றம் நிகழுமா அல்லது ஷமி, சிராஜ் ஆகியோரே களமிறக்கப்படுவார்களா என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானம் மெதுவானது என்பதால் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். இதனால் ஜடேஜா, அக்ஸர் படேல் ஏற்கனவே அசத்தி வரும் நிலையில் கூடுதலாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்புகள் வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வாய்ப்புகள் கொடுக்கப்படும் பட்சத்தில் சிராஜ் அல்லது ஷமி யாராவது ஒருவர் ட்ராப் செய்யப்படலாம். அதேசமயம் இந்திய அணியின் தற்போதைய முடிவுகள் அனைத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்தே இருக்கும் என்பதால் இன்று ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏனெனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஷமியின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நேற்று உம்ரான் மாலிக் பந்துவீச்சு பயிற்சியில் அதிக நேரம் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.  

 

பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். இன்று அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அதுவே அவருக்கு இறுதியான வாய்ப்பாக அமையும் எனக் கூறப்படுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கே.எல்.ராகுல் இன்றும் அசத்தினால் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.

 

சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆஸி அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஒரு போட்டிகளில் 5000 ரன்களை தொட அவருக்கு இன்னும் 51 ரன்களே தேவை. அதே போல் இன்றைய போட்டியில் அவர் சதம் அடித்தால் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்து சாதனை படைத்த ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்வார்.

 

உத்தேச வீரர்கள் : ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, முகமது ஷமி/ உம்ரான் மாலிக்,  முகமது சிராஜ்/ அர்ஸ்தீப், அக்சர் படேல், குல்தீப் யாதவ்

 


 

Next Story

ஐ.பி.எல். இறுதிப் போட்டி; வெளியான முக்கிய தகவல்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
IPL Finals; Important information released

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதாவது முதலில் ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதன்படி நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட, கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக மே 21ஆம் தேதி முதல் தகுதிச் சுற்று அகமதாபாத்திலும், மே 24 ஆம் தேதி இரண்டாம் தகுதிச் சுற்று சென்னையிலும் நடைபெற உள்ளது. இதற்கிடையே எலிமினேட்டர் சுற்று மே 22ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே சென்னையில் கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றிருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

Ind Vs Aus: மைதானத்திற்கு மின் விநியோகம் நிறுத்தம்! 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Electricity supply to India vs Australia match stadium in Raipur stopped today

 

சத்தீஷ்கர் மாநிலம், ராய்பூரில் உள்ள வீர் நாராயண மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி.20 போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. 

 

ஐந்து டி.20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. அதன்படி தற்போது வரை மூன்று டி.20 போட்டிகளை விளையாடியுள்ளது. அதில் இந்தியா இரு போட்டிகளில் வென்றுள்ளது. இறுதியாக நடந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது. இதன் மூலம், இன்று நடைபெறவிருக்கும் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் ஐந்து போட்டிகளைக் கொண்ட டி.20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிடும். மாறாக ஆஸ்திரேலியா இன்று நடக்கும் போட்டியில் வென்றால் இரு அணிகளும் 2க்கு - 2 வெற்றி என இறுதிப் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக மாறும். 

 

இந்நிலையில், இன்று டி.20 போட்டியின் நான்காவது ஆட்டம் சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள வீர் நாராயண மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. ஆனால், அந்த மைதானத்திற்கு இன்று முதல் மின் விநியோகம் செய்யப்படமாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

இது குறித்து மின் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது; ராய்பூர் வீர் நாராயண மைதான நிர்வாகம் ரூ. 3.16 கோடி மின் கட்டணத்தை இன்னும் கட்டாமல் வைத்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டே அந்த மைதானத்திற்கு மின்சாரம் தடைசெய்யப்பட்டது. இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டதும், இதனை பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறைக்கும், மற்ற செலவுகள் விளையாட்டுத் துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை மின் கட்டணம் தொடர்பாக அணுகும்போதும், பொதுப்பணித்துறையும், விளையாட்டுத்துறையும் ஒருவரை ஒருவர் கைகாட்டுகின்றனர். இருந்தபோதும் இருவருக்கும் முறையாக தெரியப்படுத்தியும் மின் கட்டண நிலுவைத் தொகையைக் கட்டாததால், கடந்த 2009ம் ஆண்டே மின் விநியோகம் தடை செய்யப்பட்டுவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதேசமயம், மின் விநியோகம் நிறுத்தப்பட்டதும் தற்காலிக மின் இணைப்பு மூலம் மின்சார வசதி பெற்று வந்தது. ஆனால் தற்போது அதுவும் தடையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முக்கிய போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், ஜெனரேட்டர் மூலம் மின் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.