Skip to main content

செஸ் ஒலிம்பியாட் : பாகிஸ்தான் திரும்பிய வீரர்கள்; இந்தியா அதிர்ச்சி!     

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

Chess Olympiad!  Pakistan Players returned to their country

 

சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொள்ளவந்த பாகிஸ்தான் வீரர்கள், போட்டிகளில் பங்கேற்காமல் அதிரடியாக பாகிஸ்தான் திரும்பியிருப்பது இந்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 

 

சர்வதேச 44-வது சதுரங்க போட்டிகளை மிக பிரமாண்டமாக நடத்துகிறது தமிழக அரசு. இந்த போட்டிகளை நேற்று (28-ந்தேதி) இந்திய பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்த துவக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழாவை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ள நிலையில், சதுரங்க போட்டிகளின் முதல் சுற்று இன்று சென்னை மாமல்லபுரத்தில் துவங்கியிருக்கிறது. இந்த போட்டிகளில் 168 நாடுகளைச் சேர்ந்த 2,000-த்திற்கும் அதிகமான சதுரங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 

 

மிக பிரமாண்டமாகவும் விமர்சியாகவும் நடக்கும் இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள பாகிஸ்தானில் இருந்து 16 வீரர்கள் சென்னைக்கு வந்தனர். சென்னையில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது. இவர்களின் பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. 

 

இந்த நிலையில், சென்னை ஏர்போர்ட்டிலிருந்து மாமல்லபுரம் சென்றனர் பாகிஸ்தான் வீரர்கள். மதிய உணவும் உண்டு மகிழ்ந்தனர். அப்போது, பாகிஸ்தானிலிருந்து அவர்களுக்கு ஃபோன் வந்துள்ளது. ஃபோனில் பேசிய பாகிஸ்தான் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி, “இன்னும் 24 மணி நேரத்திற்குள் நீங்கள் பாகிஸ்தான் திரும்ப வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவர்களிடம் காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. 


பதட்டமான வீரர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விபரத்தைச் சொல்ல, தமிழக அரசின் உயரதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விசயத்தை கொண்டு சென்றனர். அதிகாரிகள் உடனே அவர்களுக்கான டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தனர். 


விமான நிலையத்தில் பேசிய பாகிஸ்தான் வீரர்கள், “இந்த போட்டிகளில் விளையாட மகிழ்ச்சியாக நாங்கள் வந்தோம். ஆனால், விளையாடக் கூடாது; உடனே நாடு திரும்புங்கள் என எங்கள் அரசாங்கம் (பாகிஸ்தான்) எச்சரிக்கை செய்ததால் உடனே தாயகம் திரும்புகிறோம். எங்கள் அரசாங்கத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே இந்த போட்டிகளில் பங்கேற்க முடியாமல் திரும்புகிறோம். இது மனதளவில் எங்களை வருத்தமடைய வைத்துள்ளது. ஆனால், டெல்லியில் நாங்கள் இருந்த போதும், சென்னைக்கு நாங்கள் வந்த போதும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும், பத்திரிகையாளர்களும் எங்களுக்கு கொடுத்த வரவேற்பும் உற்சாகமும் மன நிறைவைத் தந்தது. அதனை எப்போதும் மறக்கமாட்டோம். எங்கள் நினைவுகளிலிருந்து சென்னையையும் மாமல்லபுரத்தையும் பிரிக்க முடியாது” என்று உணர்ச்சி மேலிட பேசினார்கள். 


பாகிஸ்தான் வீரர்கள் திரும்பிச் சென்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரையும் சோகமாக்கியது. 


இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் ஏர்போர்ட் பாலசுப்பிரமணியம், “பாகிஸ்தான் அரசு விளையாட்டிலும் அரசியல் செய்கிறது. அவர்களின் விளையாட்டு அரசியல் இந்தியாவைச் சிறுமைப்படுத்துகிறது. ஆனால், மத்திய அரசும், தமிழக அரசும் செஸ் ஒலிம்பியாட் குழுவினரும் பாகிஸ்தான் வீரர்களை பத்திரமாக அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

 

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள பாகிஸ்தானில் இருந்து மொத்தம் 16 வீரர்கள் சென்னை வந்தனர். இவர்களுக்கான விசா நடைமுறைகளை மூன்று மாதங்களுக்கு முன்பே துவக்கிவிட்டது இந்திய அரசு. முறையாக இந்தியா வருவதற்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு விசாவும் வழங்கப்பட்டது. இது, பாகிஸ்தான் அரசுக்குத் தெரியும். சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளட்டும் என்றுதான் வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது பாகிஸ்தான். 

 

வீரர்களும் சென்னை வந்து மாமல்லபுரத்தில் தங்கினர். அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு கவனித்துக் கொண்டது. போட்டிகள் துவங்க 12 மணி நேரமே இருந்த நிலையில், திடீரென்று தமது வீரர்களை நாடு திரும்ப நிர்ப்பந்தம் செய்திருக்கிறது பாகிஸ்தான். அவர்களும் சோகத்துடன் பாகிஸ்தான் திரும்பினர். இந்தியாவில் நடக்கும் சதுரங்க போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்க விருப்பமில்லையெனில், ‘இந்த போட்டிகளில் எங்கள் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்’ என்று ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் அரசு சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் யாருக்கும் வருத்தமோ கோபமோ வந்திருக்காது. 


ஆனால், எல்லாம் நடந்து போட்டிகள் துவங்க சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், தங்களின் வீரர்களை திரும்பி வருமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருப்பது அந்த நாட்டின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இந்தியாவை சிறுமைப்படுத்தவே பாகிஸ்தான் இதனை செய்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் செயலால் சிறுமைப்பட்டிருப்பது இந்தியா அல்ல; பாகிஸ்தான் அரசு தான்” என்கிறார் மிக அழுத்தமாக.

 


 

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.