Skip to main content

பின்னுக்குத் தள்ளப்பட்ட ப்ராவோ; முந்திய சஹால்; ராஜஸ்தான் அபாரம்

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

Bravo pushed back; Preceding Chahal; Rajasthan is great

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 56 ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 57 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியில் சாஹல் 4 விக்கெட்களையும் போல்ட் 2 விக்கெட்களையும் சந்தீப் சர்மா, ஆசிப் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 150 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 98 ரன்களையும் சாம்சன் 48 ரன்களையும் எடுத்தனர். 

 

கொல்கத்தா அணி, பவர்ப்ளேவில் அதிக விக்கெட்கள் இழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. கொல்கத்தா மற்றும் டெல்லி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 25 விக்கெட்களை இழந்துள்ளது. சாஹல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை அவர் 184 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இரண்டாவது இடத்தில் ப்ராவோ 183 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். இதுவரை கே.எல்.ராகுல் 14 பந்துகளில் அரை சதம் அடித்ததே அதிவேக அரை சதமாக இருந்தது.

 

 

Next Story

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நம்பிக்கையுடன் போராட வேண்டும் - ராஜஸ்தான் வீரர் புகழாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Dhoni, like Kohli, has to fight till the end with confidence - praises the Rajasthan player

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நின்று  நம்பிக்கையுடன் போராட வேண்டும் என்று ராஜஸ்தான் வீரர் பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் 2024இன் 31ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சால்ட் 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் நரைன், ரகுவன்ஷி இணை கொல்கத்தா ரசிகர்களை குதூகலிக்க வைத்தது. கடந்த சில ஆட்டங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நரைன் இந்த ஆட்டத்தில் அதிரடியின் உச்சம் தொட்டார்.

ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை தனது நேர்த்தியான பேட்டிங்கின் மூலம் நிமிர விடாமல் செய்தார். 56 பந்துகளில் 6 சிக்சர்கள் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்தார். ஐபிஎல்-இல் இது அவருடைய முதலாவது சதமாகும். ரகுவன்ஷி 30, ஷ்ரேயாஸ் 11, ரசல் 13, ரிங்கு 20 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.

224 ரன்கள் என்பது இமாலய இலக்காக இருந்தாலும், பலமான பேட்டிங் உள்ளதால் கொல்கத்தாவில் இதை சேஸ் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக ஜெய்ஸ்வால் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சாம்சனும் 12 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி தாடுமாறியது. இருப்பினும் பட்லருடன் இணைந்த பராக் ஓரளவு அதிரடி காட்டி 14 பந்துகளில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஜுரேல் 2, அஸ்வின் 8 என சீக்கிரமே நடையைக் கட்டினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மையரும் டக் அவுட் ஆக ராஜஸ்தான் திணறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் அரைசதம் கடந்து நங்கூரம் போட்டு நின்றார் பட்லர். ரோமன் பவலின் அதிரடியான 26 ரன்கள் உதவியுடன் 19 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து தனது சதத்தையும் கடந்தார் பட்லர். 5 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட, அடுத்த 3 பந்துகள் டாட் பாலானது. 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐபிஎல் 2024இன் முதல் சூப்பர் ஓவர் ஆகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், கடைசி பந்தில் படலர் சிங்கிள் எடுக்க ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

சிறப்பாக ஆடிய பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது “ நீங்கள் நம்பிக்கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் திறவுகோல். நான் எனது பேட்டிங்கில் தடுமாறும்போது எனக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதை எதிர்த்து என் எண்ணங்களை மாற்ற முயற்சிப்பேன். பொறுமையுடன் தொடர்ந்து முயற்சி செய்யும் போது சரியாக நடக்கும். இது மாதிரி ஐபிஎல்லில் எனக்கு நிறைய முறை நடந்துள்ளது. தோனி மற்றும் கோலி, இது போல் பல முறை ஆடியதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போல் இறுதி வரை நம்பிக்கையுடன் தொடர்ந்து போராட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். சங்கக்கராவும் அதைத்தான் சொல்வார். பேட்டிங் செய்ய தடுமாறும்போது நாம் அழுத்தத்திற்கு உள்ளாகி தவறான ஷாட் மூலம் விக்கெட்டை பறிகொடுப்போம். கொஞ்சம் நிதானமாக் யோசித்து பொறுமையாக ஆடினால் நமக்கான ஒரு ஷாட் கிடைக்கும். அது நம்பிக்கையைக் கொடுக்கும் என்று. ஒரு பெரிய சேசிங்கில் கடைசி பந்தில் ரன் எடுத்து வெற்றி பெறுவது மனதுக்கு நிறைவானது” என்றார்.

Next Story

மனம் ஒரு சக்திவாய்ந்த விஷயம் - வெற்றியின் ரகசியம் குறித்து பட்லர்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
The mind is a powerful thing - Butler says on the secret of success

மனம் ஒரு சக்திவாய்ந்த விஷயம் என தனது ஆட்டம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 19ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளசிஸ், கோலி இணை சிறப்பான ஆடினர். மிகவும் சிறப்பாக ஆடிய கோலி ஐபிஎல்-இல் தனது 8ஆவது சதத்தைப் பதிவு செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 113 ரன்கள் குவித்தார். 

பின்னர், 184 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் ஏமாற்றினாலும், கேப்டன் சாம்சன், பட்லர் இணை அட்டகாசமாய் ஆடியது. சாம்சன் அரை சதம் அடித்து 69 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதி வரை களத்தில் நின்ற பட்லர் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இறுதியில் அணி வெற்றி பெற 1 ரன்னும், பட்லர் சதம் அடிக்க 6 ரன்களும் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸ் அடித்து சதம் கடந்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார். இதன் மூலம் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆட்டத்தின் முடிவைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் கடந்த சில ஆட்டங்களாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த பட்லர், இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி சதம் கடந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியதால் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

அப்போது பேசிய பட்லர் “இன்றைய ஆட்டத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது, கடந்த ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. அதையெல்லாம் தாண்டி தற்போது பெற்றுள்ள வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கிரிக்கெட்டை எவ்வளவு காலம் விளையாடியிருந்தாலும், அந்த ஆட்டத்தில் கவலைகள் மற்றும் அழுத்தங்கள் உங்களுக்குள் எப்போதும் இருக்கும். அதைப் போக்க மனம்தான் ஒரு சக்திவாய்ந்த விஷயம், மனதைத் தோண்டிக்கொண்டே இருங்கள், கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள். அதோடு உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. ஒரு கட்டத்தில் அது சரியாகிவிடும், சில சமயங்களில் அது சரியாகிவிடும் என்று நீங்களே உங்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டும். நான் கடந்த ஆட்டத்தில் 13 ரன்களைப் பெற்றிருந்தாலும், மிகவும் நன்றாக உணர்ந்தேன். தென்னாப்பிரிக்காவில் நான் சிறப்பாக ஆடியிருந்தேன், அதைப் போல் ஆட எனக்கு ஒரு இன்னிங்ஸ் தேவை என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். நாங்கள் இந்த சீசனை நன்றாகத் தொடங்கி இருக்கிறோம். நாங்கள் இப்போது மூன்று சீசன்களாக இணைந்து ஆடி வருகிறோம், எங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது, ஆனால் ஒரு அணியாக தொடர்ந்து கடினமாக உழைத்து இதே மாதிரியான சிறப்பான ஆட்டத்தைத் தொடர வேண்டும்" என்றார்.