Skip to main content

பெஸ்ட் பேட்டிங், மாஸ் பவுலிங்... இந்தியாவுக்குத்தான் உலகக்கோப்பை!!!

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
akashchopra
                                                                                    ஆகாஷ் சோப்ரா


2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக் கோப்பையில் இந்தியாதான் வெற்றிபெறும் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
 

"இந்தியஅணிக்கு சாதகமாக நிறைய விஷயங்கள் உள்ளன. பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. மிகச்சிறந்த சில பேட்ஸ்மேன்கள்கிடைத்துள்ளனர்.இங்கிலாந்தில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வென்றது. அங்கு 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. எனவே, நாம் உலகக்கோப்பையை வெல்ல முடியும்” என்று ஐசிசி உலக கோப்பை டிராபி டூர் நிகழ்ச்சியின்போது அவர் தெரிவித்துள்ளார்.
 

ஆகாஷ் சோப்ரா மட்டுமல்ல. இதற்கு முன்னரும் பல முன்னாள் இந்திய வீரர்களும், சில வெளிநாட்டு வீரர்களும் இதே கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது கோலி தலைமையிலான அணியின் சமீப காலங்களில் பிரமிக்க வைக்கும் ஆட்டங்கள்தான்.
 

2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் இந்திய அணி 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35 வெற்றிகளை பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 13 ஒருநாள் தொடர்களில் 11 தொடர்களை வென்றுள்ளது. 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் 1 –2 என தோற்றது. இந்த இரண்டு தொடர்களை தவிர, மற்ற அனைத்து தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது கவனிக்கத்தக்கது.
 

ரோகித் சர்மா, தவான், கோலி, தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ்/சஹால், புவனேஷ் குமார் மற்றும் பும்ராஹ் ஆகியோர் அணியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஆனால் நான்காம் மற்றும் ஆறாம் இடத்தில் விளையாடும் வீரர், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இடங்களில் யார் விளையாடுவார்கள் என்பது கேள்விகுறியாகவே உள்ளது. இந்த இடத்தை யார் பிடிப்பார்கள் என்பது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில்தெரியவரும்.
 

நான்காவது இடத்திற்கு ராயுடுவிற்கு வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் அதே இடத்திற்கு கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரஹானே ஆகியோரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆறாவது இடத்திற்கு கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் படேல், குருனல் பாண்டியா ஆகியோரில் ஒருவர் இடம்பெறுவார். தாகூர், கலீல் அஹமது, உமேஷ் யாதவ், சமி, தீபக் சஹார், முஹமது சிராஜ் ஆகியோரில் ஒருவர் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற வாய்ப்புண்டு.
 

அம்பதி ராயுடு


இந்த நிலையில் "நான்காவது இடத்தில் விளையாட நாம் பல பேட்ஸ்மேன்களை முயற்சித்தோம். ஆனால் அம்பதி ராயுடு மட்டுமே அதற்கான திறன்களை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவர் அந்த இடத்தை நிரப்பியுள்ளார் என்று நினைக்கிறேன்.” என்று ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நீண்டநாள் பிரச்சனையாக உள்ள நான்காவது இடம் பற்றி சோப்ரா கருத்து கூறியுள்ளார்.
 

வரும் ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த கோலியின் பரிந்துரை பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் ஆகாஷ்சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் பேட்ஸ்மேன்களையும் இதில் கணக்கில் எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 

"உலகக் கோப்பையை வெல்லும் அனைத்து தகுதிகளையும் கோலி தலைமையிலான அணிகொண்டுள்ளது.” என டேரன் சமியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலுவாக உள்ளன. அடுத்த வருடம்  மே 30–ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்தும், தென் ஆப்ரிக்காவும் மோதுகின்றன. ஜூன்5-ல் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது.

 


 

Next Story

6 நிமிடங்களில் 50 ரன்கள்! அதிசயிக்க வைத்த ஆர்.சி.பி.வீரர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
50 runs in six minutes! Amazing RCB player will jacks

ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் அடித்து ஆர்.சி.பி.வீரர் ஒருவர் அதிரடியில் அதிசயிக்க வைத்துள்ளது சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024இன் 45ஆவது லீக் ஆட்டம் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றிய போட்டி முத்ற்கொண்ட், இனி ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பில் கொஞ்சமாவது நிலைத்திருக்க முடியும் என்பதால் பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. குஜராத் அணியும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பு வலுப்பெறும் என்பதால் ஆரம்பம் முதலே விறுவிறுப்பு தொடங்கியது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. சஹா, கில் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் பொறுப்பான அதே நேரத்தில் அதிரடியான பேட்டிங்கால் குஜராத் அணி சரிவில் இருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய ஷாருக்கான் ஐபிஎல்-இல் தனது முதலாவது அரை சதத்தை பதிவு செய்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மில்லர் வழக்கம் போல அதிரடியாக 26 ரன்கள் எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய சுதர்சன் அரைசதம் கடந்து 84 ரன்கள் குவித்தார். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. சிராஜ், ஸ்வப்னில் சிங், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 201 ரன்கள் என்பது கடின இலக்கு போலத் தோன்றினாலும், எல்லா ஆட்டங்களிலும் எளிதில் அடிக்கப்படுவதால் நம்பிக்கையுடன் பெங்களூரு அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெங்களூரு அணிக்கு டு பிளசிஸ் நல்ல தொடக்கம் கொடுத்து 24 ரன்களில் வழக்கம் போல நடையைக் கட்டினார். எப்போதும் போல பொறுப்புடன் ஆடிய கோலியுடன் அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் இணைந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடித்தார்.

50 runs in six minutes! Amazing RCB player will jacks

கோலி அரைசதம் கடந்து 70 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். மறுபுறம் வில் ஜேக்ஸ் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அடுத்த ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் எடுத்து 41 பந்துகளில் சதமடித்தார். இதில் 10 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல்-இல் இது 5ஆவது அதிவேக சதமாகும். மாலை 6.41 க்கு அரை சதம் கடந்த வில் ஜேக்ஸ் 6.47 க்கு சதம் கடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.சி.பியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர்கள் வெளியிட்ட பதிவும் வைரலாகி வருகிறது.  

Next Story

ட்விஸ்ட் இருக்கு... சன் ரைசர்ஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

ஐபிஎல் 2024இன் 41 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி, அனுபவ கோலி, டு பிளசிஸ் இணை ஹைதராபாத் பந்து வீச்சை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைத்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டு பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜேக்ஸும் 6 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த பட்டிதார், கோலியுடன் இணைந்து அசர வைக்கும் விதத்தில் ஆடினார். மார்கண்டேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து ஹைதராபாத் பவுலர்களை திகைக்க வைத்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். க்ரீனின் 20 பந்துகளுக்கு 37 எனும் கடைசி கட்ட அதிரடி கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்து வீசிய உனாத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும், மார்கண்டே, கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 207 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தியது. கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து வரும் ஹைதராபாத் அணி இந்த இலக்கை எளிதில் அடித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் தைரியமாக முதல் ஓவரை ஸ்பின்னரான வில் ஜேக்ஸுக்கு கொடுக்க, சிக்சர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ட்விஸ்ட் நடந்தது. தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை மிரட்டி வந்த ஹெட் 1 ரன்னில் அவுட் ஆனார்.

There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

பின்னர் சிறிது அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஸ்வப்னில் சிங் சுழலில் மார்க்ரம் 7, கிளாசென் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நித்திஷ் ரெட்டியும் 13 ரன்களில் கரன் ஷர்மா பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத்தும், கரன் ஷர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

85-6 என்ற இக்கட்டான சூழலில் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். அவருடன் இணைந்து சபாஸ் அஹமதுவும் இணைந்து எவ்வளவோ முயன்றும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. கம்மின்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் நின்ற சபாஸ் அஹமது 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா, க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், யாஸ் தயால், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். அட்டகாசமாக ஆடி 20 பந்துகளில் அரை சதம் அடித்த பட்டிதார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 புள்ளிகள் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து பெங்களூரு அணிக்கு கொஞ்சம் பிளே ஆஃப் வாய்ப்பு எஞ்சியுள்ளது. அதனால் இந்த வெற்றியானது 6 ஆட்டங்களாக தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.