Skip to main content

ஆசிய கோப்பை 2023: நடப்பு சாம்பியனை வீழ்த்தி வெற்றி பெறுமா இந்தியா?

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

Asia Cup 2023 Will India beat defending champions and win

 

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 30 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.

 

சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தி இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், இரண்டாவதாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் அணி யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி கடந்த 14 ஆம் தேதி இலங்கை - பாகிஸ்தான் இடையே நடைபெற்றது. போட்டி சமனில் முடிந்த நிலையில், DLS முறைப்படி இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. ஆசிய கோப்பையில் இந்திய அணி அதிகபட்சமாக 7 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இலங்கை 6 முறை வென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையே நடந்த இறுதிப்போட்டிகளில் இந்தியா 5 முறையும், இலங்கை 3 முறையும் வென்றுள்ளது.

 

இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டும் வலுப்பெற்றுள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கில் முக்கிய வீரர்களான ரோஹித், கோலி, கில், ராகுல் ஆகியோர் ஃபார்முக்கு திரும்பி இருப்பதாலும், பவுலிங்கில் பும்ரா, குல்தீப் கலக்கி வருவதாலும் இந்திய அணிக்கே வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் சொந்த மண் மற்றும் இளம் வீரர் வெல்லாலகேவின் மாயாஜாலப் பந்து வீச்சு கொடுத்த நம்பிக்கையில் இலங்கை அணியும் புதிய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது. வங்கதேச அணிக்கு எதிராக கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அக்சர் படேல் காயம் காரணமாக விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நடப்பு சாம்பியனான இலங்கையை வீழ்த்தி ஆசிய கோப்பையில் அதிக முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற வரலாற்றைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியாவும், நடப்பு சாம்பியன் என்ற பெருமையைத் தக்கவைத்துக்கொள்ளவும், இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று அதிக முறை சாம்பியன் என்ற இந்திய அணியின் சாதனையை சமன் செய்யவும் போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. உலகக்கோப்பை - 2023 தொடருக்கு முன் நடக்கும் போட்டி என்பதால் வெற்றியுடன் முடிக்க இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையே இவ்விரு அணிகளும் ஆசிய கோப்பை 2023ன் இறுதி போட்டியில் விளையாடவுள்ளது. இந்த ஆட்டம் பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. 

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

IND VS AUS : இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 IND VS AUS : India won the final

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 21 ரன்களும் ருதுராஜ் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து வந்த சூரியகுமார் 5 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இவருடன் கூட்டணி சேர்ந்த அக்சர்பட்டேல் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

 

இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ராவிஸ் ஹெட் 28 ரன்களும், ஜோஸ் பிலிப் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. முகேஷ் குமார் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தியது. மேலும் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கேப்டனாக ஷைன் ஆன சூர்யா! தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Surya shines as captain! India won the series!

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் சிறப்பான துவக்கம் தந்தனர். வழக்கம்போல அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த அனுபவ வீரரான ஸ்ரேயாஸ் 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமாரும் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

 

பின்னர் ருதுராஜ் உடன் இணைந்த ரிங்கு சிங் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நன்றாக ஆடிக் கொண்டிருந்த ருதுராஜ் 32 ரன்களில் சங்கா பந்தில் ஆட்டம் இழந்தார். பின்பு ரிங்கு சிங்குடன் இணைந்த ஜித்தேஷ் சர்மா அதிரடியாக ஆடத் தொடங்கினார். ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ஜித்தேஷ் ஷர்மா 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்களான அக்சர் பட்டேல் மற்றும் தீபக்சகர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ஆஸி சார்பில் ட்வார்சுயிஸ் 3 விக்கெட்டுகளும், பெஹ்ரெண்டார்ஃப் மற்றும் சங்கா தலா 2 விக்கெட்டுகளும், ஹார்டி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பிலிப்பே நிதானம் காட்ட, டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். பந்துகளை பௌண்டரிகளாக பறக்க விட்டார். ஆனால் இவர்கள் இணையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி புஷ்னோய் பிரித்தார். இவரது வந்தில் பிலிப்பே 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து அதிரடியாக ஆடி வந்த ஹெட்டை அக்சர் பட்டேல் 31 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து வந்த வீரர்களின் பென் 19 ரன்களிலும், ஹார்டி 8 ரன்களிலும், டிம் டேவிட் 19 ரன்களிலும், ஷார்ட் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் கேப்டன் வேட் மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று 36 ரன்கள் எடுத்தார் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், தீபக் சகர் 2 விக்கெட்டுகளும், பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

 

சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே வெற்றி பெற்று சூரியகுமார், ஒரு சிறந்த கேப்டனாக தன்னை நிரூபித்துள்ளார். ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. 

- வெ.அருண்குமார்  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்