8 people thrash in stampede during RCB's victory celebration

இந்த ஆண்டுக்கான 18வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (03-06-25) இரவு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாததால், எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. இறுதியாக யாரும் எதிர்பார்க்காத வகையில், பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. கடந்த 17 சீசன்களிலும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணி, இந்தாண்டு முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதனால், ஆர்.சி.பி ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். கர்நாடகாவில் நேற்று இரவு முதல் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

18 ஆண்டு கால கனவை கோப்பையை வென்று நனவாக்கிய ஆர்.சி.பி அணியை வரவேற்க பெங்களூருவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின் போது ஆர்.சி.பி அணி வீரர்கள் வெற்றி பேரணி நடைபெற இருந்தது. அதன்படி, அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் இன்று ஆர்சிபி வீரர்கள் பெங்களூரு வந்தனர். அப்போது கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அவர்களுக்கு பூங்கொடுத்து வரவேற்றார்.

Advertisment

இதற்கிடையில், ஆர்சிபி வெற்றி பேரணியை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இன்று காலை முதல் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு திரண்டனர். மைதானத்தின் வாசல் அருகே ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில், ஆண்கள் பெண்கள் என 8 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த ரசிகர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் அணியை வரவேற்க ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.