Skip to main content

கழுத்து எலும்பு தேய்மானம் வரக் காரணம் என்ன? - ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்கம்

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

 What causes bone loss? - Explained by Homeopath Aarti

 

கழுத்து எலும்பு தேய்மான நோய் குறித்து நமக்கு ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்.

 

வயது ஆக ஆக கழுத்து எலும்பில் தேய்மானம் அதிகரிக்கும். ஒரு காலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கே இந்த நோய் ஏற்பட்டது. இப்போது 30 வயதிலேயே இந்த நோய் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கும் இது ஏற்படுகிறது. தொடர்ந்து கழுத்துக்கு நாம் அதிகம் வேலை கொடுப்பது, அதிகமாக மொபைல், லேப்டாப் பயன்படுத்துவது, கனரக வாகனங்கள் ஓட்டுவது ஆகியவற்றின் மூலம் கழுத்து எலும்பில் தேய்மானம் அதிகரிக்கும். கழுத்து பகுதியில் ஏற்கனவே அடிபட்டிருந்தாலும் இந்தப் பிரச்சனை ஏற்படும். 

 

வயதானவர்கள் வலி நிவாரணத்துக்காக தைலம் தேய்ப்பார்கள். சிறுவயதில் இந்த நோய் ஏற்படும்போது பிசியோதெரபி எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக இதில் கழுத்து வலி இருக்கும், கழுத்தைத் திருப்புவதற்கு கடினமாக இருக்கும், கழுத்தைச் சுற்றியுள்ள எலும்புகள் கடினமாக இருக்கும். அந்த சமயங்களில் ஒரு பொருளைக் கையில் பிடிப்பது கூட கடினமாக இருக்கும். கையில் ஆரம்பித்து கால் வரை கூட வலி ஏற்படும். ஆரம்பக் கட்டத்திலேயே இதற்கான சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். 

 

ஹோமியோபதி மூலம் இதனை முழுமையாக குணப்படுத்தலாம். நோயாளிகளுக்கு ஏற்படும் அறிகுறிகளை அறிந்து அதற்கேற்ற வகையில் சிகிச்சை வழங்கப்படும். நிச்சயமாக பிசியோதெரபி செய்ய வேண்டும். வலி ஏற்படும் இடத்தில் ஒருமுறை ஐஸ் பேக், ஒரு முறை ஹாட் பேக் என்று வைக்கலாம். தூங்கும் முறையும் இதில் முக்கியமானது. கை தூக்குவதில் ஏற்படும் சிக்கல், கழுத்தைத் திருப்புவதில் ஏற்படும் சிக்கல், கை உணர்ச்சியற்றுப் போதல், நடப்பதில் ஏற்படும் சிரமம் ஆகியவையே இதற்கான முதற்கட்ட அறிகுறிகளாக இருக்கும். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் நோயாளியின் நிலை கண்டறியப்படும். 

 

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கையான பசும்பால் எடுத்துக்கொள்ளலாம். கீரை வகைகள், நட்ஸ், காய்கறிகள், பழங்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். வயது ஆக ஆக எலும்பு சுருங்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. முதலில் வலி ஏற்படும்போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் செய்து சரியான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது அப்போதைக்கு வலி குறையும். ஆனால் அது சிறுநீரகத்தை பாதிக்கும்.

 

 

Next Story

மூல நோய்க்கு என்னதான் தீர்வு? - ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி  விளக்கம்

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

homeopathy Doctor Arthi health tips

 

பைல்ஸ் பிரச்சனை குறித்தும் அதற்கான சிகிச்சை வழிமுறைகளைப் பற்றியும் ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்.

 

ஆசனவாயில் உள்ள நரம்பு வீக்கத்தினால் ஏற்படுவது தான் பைல்ஸ் என்கிற மூல நோய். உள்ளுக்குள் இருக்கும் பைல்ஸ் நோயில் நமக்கு எந்த அறிகுறியும் தெரியாது. வெளியேற்றத்தின் போது ரத்தம் வெளிவரும். வெளியே ஏற்படும் பைல்ஸ் நோயில் அதிகமான எரிச்சல் இருக்கும், உட்காரும்போது வலி ஏற்படும். வெளியேற்றத்தின் போது கொஞ்சமாகவோ அதிகமாகவோ ரத்தம் வெளிவரும். பலருக்கு ஏற்படும் பைல்ஸ் என்பது வெளியே ஏற்படுவது தான். 

 

பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு பைல்ஸ் பிரச்சனை ஏற்படும். அதிகமான பளுவைத் தூக்குபவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படும். கர்ப்ப காலத்தில் இருப்பவர்கள், வயதானவர்கள், குறைவான அளவில் தண்ணீர் குடிப்பவர்கள் ஆகியோருக்கு பைல்ஸ் பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் மருந்துகளின் விளைவுகளினால் கூட இது ஏற்படும். குழந்தைகளைப் பொறுத்தவரை மலச்சிக்கல் மட்டுமே இதற்கான அறிகுறியாக இருக்கும். 

 

30 வயதுக்குப் பிறகு பலருக்கு பைல்ஸ் பிரச்சனை ஏற்படும். ஹோமியோபதியில் இதற்கான நல்ல மருந்துகள் இருக்கின்றன. ஆரம்ப கட்டத்திலேயே நம்மிடம் வரும்போது இதை முழுமையாக குணப்படுத்த முடியும். பைல்ஸ் பரிசோதனைக்காக மருத்துவரை அணுகுவதற்கு நாம் கூச்சப்படக்கூடாது. காலம் தாழ்த்தி மருத்துவரிடம் சென்றால் நோயை குணப்படுத்துவது கடினமாகிவிடும். ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொண்டால் மீண்டும் பைல்ஸ் நோய் வராது. 

 

ஹோமியோபதியில் உடனடியாக நோய் குணமாக வேண்டும் என்கிற எண்ணத்தில் பலர் நம்மிடம் வருகின்றனர். ஆனால் முழுமையாக குணமடைய நிச்சயம் காலம் எடுக்கும். இனிப்பு உணவுகள், மைதா, கோதுமை, கேக் போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். கீரை, காய்கறிகள், பழங்களை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பாத்ரூமில் நீண்ட நேரம் செலவழிக்கக் கூடாது. உணவு உண்ணுவதற்கு சற்று இடைவெளி விட வேண்டும்.

 

நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டும். வயிற்றுக்கு அழுத்தம் கொடுப்பதுபோல் உடை அணியக்கூடாது. தண்ணீரால் ஆசனவாயை சுத்தப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் நிச்சயமாக சுத்தப்படுத்தலாம். மருந்துகளோடு சேர்த்து நாம் சுத்தமாக இருப்பதும் முக்கியம்.

 

 

Next Story

செரிமான கோளாறுக்கும் கேன்சருக்கும் என்ன சம்பந்தம்? - ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்கம்

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

 Dr.Arthi |Homeopathy| Digestive disorder

 

செரிமான கோளாறுக்கான காரணங்கள் குறித்து ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்

 

நெஞ்சு எரிச்சல் என்பது பலருக்கும் நிகழக்கூடிய ஒன்று. நேரம் தவறி சாப்பிடுவது இதற்கான முக்கியமான காரணம். நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, அதிகமான அளவில் உண்ணுவது, இரவு நேரங்களில் மிகத் தாமதமாக சாப்பிடுவது, சாப்பிட்ட உடனேயே படுப்பது, ஆல்கஹால் எடுத்துக்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் இது ஏற்படும். முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே வந்த இந்தப் பிரச்சனை, இப்போது இளைஞர்களுக்கும் வருகிறது. இதற்கான காரணம் நம்முடைய உணவு முறைதான்.

 

ஆரோக்கியமான உணவு முறை என்பதையே நாம் மறந்துவிட்டோம். எண்ணெய் நிறைந்த உணவுகள், காரமான உணவுகள், துரித உணவுகள் என்று இவற்றைத் தான் நாம் அதிகமாக உண்ணுகிறோம். இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதும் தவறு. உணவில் எதையுமே அதிகமாக எடுத்துக்கொண்டால் பிரச்சனை தான். உடலுக்கென்று ஒரு கடிகாரம் இருக்கிறது. அதை நாம் மாற்றாமல், செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டும். 

 

நடைமுறையை நாம் மாற்றும்போது, உணவு வயிற்றுக்குள் செல்லாமல் மேலே வரும். இதனால் ஏப்பம் உள்ளிட்டவை ஏற்படும். இதனால் இதயத்துக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் அதிகமான எண்ணெய் உணவுகளை நாம் பயன்படுத்தினால், இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உணவுக்குழாய் தான் முதலில் பாதிக்கப்படும். இது கேன்சர் வரை கூட கொண்டுபோய் விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வது தவறு.

 

மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். குப்பை போல் வயிற்றுக்குள் அனைத்தையும் நாம் அடைக்கக் கூடாது. ஆரோக்கியமாக நம்முடைய வாழ்க்கை முறையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். செரிமான கோளாறு பிரச்சனைக்கு ஹோமியோபதி சிகிச்சை முறையில் நிறைய மருந்துகள் இருக்கின்றன. அறிகுறிகளை வைத்து சரியான சிகிச்சை வழங்கப்படும். இதில் முழுமையான தீர்வு கிடைக்கும்.