Skip to main content

குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு இதுதான் - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

 Siddha Dr. Arun  - infertility 

 

குழந்தையின்மை பிரச்சனைக்கு  தீர்வினையும், பின்பற்ற வேண்டிய சில விசயங்களையும்  சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்

 

குழந்தை பெற்றுக் கொள்ளுதல் என்பது மிகவும் இயல்பான விசயமாக இருந்த தலைமுறையில் இருந்து வந்தவர்கள் நாம். குறைந்த பட்சம் ஒரு குடும்பத்தில் 5 முதல் 10 குழந்தைகள் பெற்றிருந்தார்கள். ஆனால் இன்றோ திருமணத்திற்கு முன்பே குழந்தை பெறும் வாய்ப்பு இருக்கிறதா என்று யோசிக்கும் அளவிற்கான அழுத்தத்தை இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. கருத்தரித்தல் மையம் என்பது எதாவது ஒரு மாவட்டத்தில் இருக்கும்; இப்போது மாவட்டத்திற்கு 5 என்று பெருகி இருக்கிறது. 

 

எல்லா உயிரினங்களிலும் குழந்தைப் பேறு என்பது மிகவும் சாதாரண விசயமாக இருக்கும் போது, மனிதருக்கு மட்டும் ஏன், இது நோய் போல மாற்றப்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். கல்யாணமாகிடுச்சே எதுவும் விசேசமில்லையா என்று அடுத்தடுத்த கேள்விகளால் தடுமாறுகிற இளைய தலைமுறை இதற்கு ஒரு முறை சிகிச்சைக்கு சென்று விடுவோமா என்கிற அளவுக்கு அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

 

நமது உணவு, உடை, கலாச்சாரம் எல்லாம் மாறியிருக்கும் போது நமது உடலிலும் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அதற்கு லட்சக்கணக்கில் தான் செலவு செய்து சிகிச்சை எடுக்க வேண்டுமா என்று கேட்டால் பதில் இல்லை என்பது தான். சித்தமருத்துவ முறைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியத்தை பெற்றிருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட விசயம். செலவு இதில் பெருசாக ஒன்றும் ஆகாது. சித்த மருத்துவமுறைப்படி உணவில் பெரிய மாற்றத்தையும், பழக்கவழக்கங்களில் சில திருத்தங்களையும் கொண்டு வருவோம். 

 

பஞ்சபூதங்களோடு நேரடியான தொடர்புடைய வாழ்வியலை மீட்டு உருவாக்க வேண்டும். மண் பானையைப் பயன்படுத்தி தண்ணீர் குடித்தோம். மண் பாத்திரங்களில் சமைத்தோம். அதை மீண்டும் செய்யுமாறு சித்த மருத்துவத்தில் வலியுறுத்துவோம். நிலத்தில் ஏதாவது விளைய வேண்டுமென்றால் மண் நன்றாக இருக்க வேண்டும். அதே போல கருவில் உயிர் உருவாக உடலும் மண்ணோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஆரோக்கியமாக எளிதில் கிடைக்கக் கூடிய நாட்டு காய்கறிகள், அசைவப்பிரியர்கள் ஆட்டுக்கறி, கோழிக்கறியை நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும். கீரை வகைகள், முளைக்கட்டிய பயிர்கள், சோற்றுக் கற்றாழையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் கருப்பையில் ஏதேனும் சிக்கல் இருக்கும் பட்சத்தில் சரி செய்யும். எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கத்தினை கொண்டு வர வேண்டும். உடல் சூடு இயல்பாக இருந்தால் கரு உற்பத்தி இயல்புநிலைக்கு வந்து விடும்.  உயிர் உருவாகுதல் நடைபெறும்.

 

 

 

Next Story

குழந்தைகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கலாமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 22/12/2023 | Edited on 26/12/2023
 Dr Arun | Cold | Fever | Child | Siddha | Recap |

சித்த மருத்துவ மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு பிரபல சித்த மருத்துவர் அருண் விளக்கமளிக்கிறார்.

இன்றைய இளம் தாய்மார்களுக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வருகிறது. முதலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நோய் உருவாகிறது என்று பார்ப்போம். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு இதற்கெல்லாம் உடனடியாக பெரிய எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

பூமிக்கு வந்த உயிர் இங்குள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும்போது சில எதிர்வினை நடக்கத்தான் செய்யும். அதுதான் மேலே சொன்ன சிறிய அளவிலான நோய்களாகும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கத்தான் செய்யும், எங்கேயாவது சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ, பேருந்துகளில் பயணிக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு தொற்று இருந்தால் கூட சளி பிடிக்கத்தான் செய்யும். சக குழந்தைகளோடு விளையாடும்போது கூட யாராவது ஒருவருக்கு சளி இருந்தால் கூட மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

யாரோடும் பழகாமலும், பார்க்காமலும், தொடாமலும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். சிறுவயதிலேயே தாய்ப்பாலுடன் இணைத்து உரை மருந்து கொடுப்பார்கள், அதை ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது குழந்தைக்கு உரை மருந்தின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். 12 வயது வரை கொடுக்கலாம். 

இந்த உரை மருந்தில் சுக்கு, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், திப்பிலி, பெருங்காயம், பூண்டு அனைத்தும் கலந்து இருக்கும். முன்னெல்லாம் இதை வீட்டிலேயே தயாரிப்பார்கள், இப்பொழுது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் காக்கலாம். இந்த சித்த மருந்துகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் நோயின் தன்மை தீவிரமடைந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.

Next Story

நன்றாக தூங்குவதற்கு இதை பின்பற்றுங்க - சித்த மருத்துவர் நித்யா விளக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Siddha doctor Nithya - Sleeping tips

 

நன்றாக தூங்குவதற்கு சித்த மருத்துவர் நித்யா சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.

 

தூக்கமின்மையால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்று முந்தைய பகுதியில் பார்த்தோம். எனவே இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறவர்கள் ஒரு வாரம் சித்த மருத்துவ குறிப்பின்படி சொல்கிற சில டிப்ஸ்களை பின்பற்றினாலே உடனடியாக சரி செய்ய முடியும்.

 

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இரவு முழுவதும் வயிறு நீரற்று உஷ்ணமாக இருப்பதால் முதற்கட்டமாக நீர் அருந்த வேண்டும். இரவே வெந்தயம் ஊறப்போட்டு அதை பருகலாம். அல்லது சீரகம் ஊற போட்டு குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி, தேர்த்தாங்க் கொட்டை, வெட்டி வேர் போன்றவற்றை வாங்கி தேவையான அளவு எடுத்துக் கொண்டு இரவே ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். 

 

இது குடிப்பதால் உடல் உஷ்ணம் நீங்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு உங்களை உடல் தயார்ப்படுத்திக் கொள்ளும். கசகசாவை பாலில் கலந்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில் அதிமதுரம் சூரணம் வாங்கி இளம் சூடான பாலில் கலந்து குடிக்கலாம். அதிமதுரம் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் சரிசெய்து தூக்கம் அதிகரிக்கும். இரவு நேர உணவை சீக்கிரம் முடித்துவிட்டு தூங்க வேண்டும். போனை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் இரவு நேர உறக்கத்தினை பெறலாம்.