Skip to main content

படிக்காமலே முன்னோர்கள் எப்படி பிரசவம் பார்த்தார்கள்? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

DrArunachalam | Pragnancy | Health tips

 

பிரசவம் பார்க்கும் சரியான முறை குறித்து டாக்டர். அருணாச்சலம் விளக்குகிறார்

 

குழந்தை பிறப்பு என்பது ஒரு நோய் கிடையாது. அது ஒரு சாதாரண நடைமுறை. அந்தக் காலத்தில் பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் படித்தவர்களாக இல்லாவிட்டாலும், பல பிரசவங்களைக் கையாண்ட அனுபவம் அவர்களிடம் இருந்தது. நவீன மருத்துவம் வளர்ந்த பிறகு, ஒவ்வொரு வாரமும் கரு எந்த அளவுக்கு வளர்கிறது என்பது கண்காணிக்கப்படுகிறது. சில நேரங்களில் கருவின் தலை பெரிதாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுப்பார்கள்.

 

பிரசவம் நல்லபடியாக அமைய வேண்டும் என்பது மட்டும்தான் அறுவை சிகிச்சை செய்வதற்கான நோக்கம். தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது இப்போது குறைந்துவிட்டது. அரசு மருத்துவமனைகளில் தான் இப்போது அதிகம் பிரசவம் பார்க்கப்படுகிறது. அங்கு நல்ல முறையிலேயே வைத்தியம் பார்க்கப்படுகிறது. அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்காக குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இறக்கும் சம்பவங்கள் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் குறைவாகவே நடைபெறுகின்றன.

 

பெண்களைக் காக்கவும், மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் அனைவரும் முயற்சி செய்வதற்கு முக்கியமான காரணம், இந்த பிரசவ நேரம் என்பது அவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மறுபிறவி போன்றது என்பதால் தான். பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதமும் தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது. விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும், மருத்துவர்கள் எவ்வளவு பயிற்சி பெற்றிருந்தாலும், மருத்துவ கட்டமைப்பு எந்த அளவுக்கு முன்னேறியிருந்தாலும், தாய் மற்றும் குழந்தையின் இழப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. 

 

தாய் மற்றும் குழந்தையின் இறப்பைத் தவிர்க்கவே மருத்துவமனைகள் பயன்படுகின்றன. கர்ப்ப காலத்தில் மருத்துவர்களை நிச்சயம் தவிர்க்கக் கூடாது. செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும். பல ஆண்களுக்கு இதன் முக்கியத்துவம் புரிவதில்லை. பெண்களின் கர்ப்பகால வேதனைகள் அவர்களுக்குத் தெரிவதில்லை. மருத்துவரின் உதவி இல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் விபரீதத்தை நிச்சயம் அனைவரும் தவிர்க்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் முன்னேறிய நாம், மருத்துவ விஷயத்தில் பின்னோக்கி செல்வது தவறு. நவீன மருத்துவர்களின் கைப்பிடித்து நாம் செல்வதுதான் நம் நாட்டின் வளர்ச்சிக்கான பாதையாக இருக்க முடியும்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மலத்தை வைத்தே நோயினை கண்டறியலாமா? - பிரபல மருத்துவர் சந்திரசேகர் விளக்கம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

  Dr Chandrsekar | Hemorrhoids | Constipation | Motion Problem |

 

மலச்சிக்கலால் உருவாகும் மூல நோயின் தன்மைகள் பற்றி தொடர்ச்சியாக நமக்கு விழிப்புணர்வு தகவல்களை டாக்டர் சந்திரசேகர் அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக உணவு முறையினால் ஏற்பட்ட மாற்றத்தால் ஏற்படும் சிக்கல் பற்றியும், வெளியேறும் மலத்தினை வைத்தே நோயின் தன்மையை கண்டறிவது பற்றியும் விளக்குகிறார்.

 

நமது உணவு முறையே சரிவிகித உணவாகத்தான் இருந்து வந்தது. அதாவது கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கும், செரிமானத்திற்கு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள், புரதத்திற்கு பருப்பு கூட்டு இருக்கும், நார்ச்சத்திற்கு பொரியல் இருக்கும் இவ்வாறாக அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை நாம் எடுத்துக் கொண்டோம். தண்ணீரும், மோரும் இறுதியாக எடுத்துக் கொள்ளுதல் எளிமையாக செரிமானம் அடைந்து சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உணவு முறை காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

 

ஆனால், இப்போதெல்லாம் எல்லா காய்கறிகளையுமே ஒன்றாக சேர்த்து சமைத்து கொடுக்கிறார்கள். உணவில் கறியை வேக வைத்து பிரியாணியாக கொடுக்கிறார்கள். பக்கெட் சிக்கன் என்று வெறும் சிக்கனை மட்டுமே வாங்கி வைத்து உண்ணுகிறார்கள். இது சரியாக செரிமானம் அடையாமல் மலச்சிக்கலை உருவாக்குகிறது. முந்தைய காலங்களில் மலம் வெளியேறிய பிறகு பரிசோதிப்பார்கள், கருப்பாக இருந்தால் உள் உறுப்புகளில் இரத்த கசிவு இருக்கிறது, வெள்ளையாக வெளியேறினால் மஞ்சள் காமாலை இருக்கிறது, ரத்தக்கசிவு வெளியேறினால் மூலம் இருக்கிறது என்பதை கண்டறிந்து சொல்வார்கள்.

 

இன்றைய வெஸ்டர்ன் டாய்லெட் முறையில் எப்படி மலம் வெளியேறுகிறது என்று அவரவர்களுக்கே தெரியாத நிலையில் தான் இருக்கிறார்கள். அதற்கு பிறகு எப்படி நோய் என்ன இருக்கிறது என்பது கண்டறிய முடியும்? நோயினை கண்டறிய முடியாத சாத்தியமற்ற நிலையில் தான் இந்த வாழ்க்கை முறை இருக்கிறது. வலியே இல்லாமல் இரத்தம் வருகிற மலச்சிக்கலால் மூல நோய் உருவாகும். ஆரம்பத்திலேயே மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மருந்து, மாத்திரை, உணவு பழக்க வழக்க மாற்றங்களால் மூல நோயைச் சரி செய்ய முடியும். நோயின் தன்மை முற்றும் போது அறுவை சிகிச்சையால் தான் மூல நோயைச் சரி செய்ய முடியும்.

 


 

Next Story

ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Dr Arunachalam | Breast Cancer | Women | man

 

நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்கும் போது மருத்துவரைப் பார்ப்பது எந்த வகையிலும் பலனளிக்காது, நோய்க்கான அறிகுறி ஆரம்பித்ததுமே மருத்துவரை அணுக வேண்டிய தேவையையும் அவசியத்தையும் டாக்டர் அருணாச்சலம் நமக்கு விரிவாக விளக்குகிறார்.

 

என்னிடம் சிகிச்சைக்காக ஒரு பெண்மணி வந்தார், மார்பக புற்று நோயா என்று பரிசோதித்து இருக்கிறார். பரிசோதனையின் முடிவில் மார்பக புற்றுநோய் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அதற்கான சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை, கிட்டத்தட்ட ஆறுமாதம் அப்படியே விட்டிருக்கிறார். இப்பொழுது திடீரென வலியின் தன்மை அதிகரித்ததும் எங்களை அணுகினார். 

 

பரிசோதித்தால் மார்பகமே கருப்பு நிறமாக மாறிவிட்டது. நோயின் தன்மை நான்காவது நிலைக்கு போய் ஆறு மாதத்திற்குள் இறந்து விடுவார்கள் என்ற நிலையில் சிகிச்சை அளித்தோம். ஆனால் புற்றுநோயின் ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு மார்பகத்தை நீக்கி 20 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்ந்தவர்களெல்லாம் உண்டு என்பதை மருத்துவத்துறையில் நிரூபித்திருக்கிறார்கள்.

 

விரல்களை குவித்துக் கொண்டு மார்பகத்தில் வலது புறத்தில் ஆரம்பித்து இடதுபுறமாக சுற்றி சுற்றி அழுத்தி சுயமாகவே பரிசோதனை செய்து பார்க்கலாம். பரிசோதனையின் போது எதாவது வலியோ, வேதனையோ, கட்டி போன்று தோன்றினாலோ மருத்துவரை அணுகி மம்மோகிராம் பரிசோதனை செய்து புற்றுநோயா அல்லது சாதாரண வலி தானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

 

பாரம்பரியமாக நோய் இருந்தவர்களுக்கு தொடர்ச்சியாக வர வாய்ப்பு உள்ளது. நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுக்கு மார்பக புற்று நோய் வந்து சிகிச்சை அளித்திருக்கிறோம். மார்பகம் என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவானது தான். பெண்ணுக்கு வளர்ந்து விடுகிறது. ஆணுக்கு வளர்ச்சியற்று இருக்கிறது. ஆணுக்கும் மார்பகத்தை சுற்றி வலியோ, கட்டியோ இருந்தால் பரிசோதித்து புற்றுநோயா என்று பார்த்துக் கொள்ளவும். மார்பக புற்றுநோய்க்கு ஆண், பெண் வேறுபாடெல்லாம் தெரியாது. இருவருக்கும் வரக்கூடியதே

 

அதிகப்படியான புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உணவு முறையில் சீரற்ற தன்மை உள்ள அனைத்து ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது. ஆரம்பத்தில் சுயபரிசோதனை செய்து பார்த்துவிட்டு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டு சரி செய்து ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.