Skip to main content

பெண்கள் மார்பக சுய பரிசோதனையை ஏன் செய்ய வேண்டும் - விளக்குகிறார் டாக்டர் கல்பனா 

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

 Dr Kalpana | Breast Self checkup

 

பெண்களின் மார்பகங்களில் ஏதேனும் வலியோ கட்டியோ ஏற்பட்டால் அவர்கள் தாங்களே முதற்கட்டமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மார்பகப் புற்றுநோய் குறித்தும் டாக்டர்  கல்பனா விளக்குகிறார்.

 

பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இந்த நோய் ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய நிறைய பரிசோதனை முறைகள் இருக்கின்றன. 40 வயதுக்கு மேல் பெண்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம். மார்பகக் கட்டி இருக்கிறதா என்பது பரிசோதனையில் தெரிந்துவிடும். இதைவிட சுயபரிசோதனை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியம். மார்பகக் கட்டி பற்றி வெளியில் பேசவே நாம் யோசிக்கிறோம். அந்த நிலையில் தான் சமூகம் இருக்கிறது. 

 

ஆரம்ப நிலையில் வெளியே சொல்ல வெட்கப்படுவதால், மிகுந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இப்போது கல்வியறிவு அதிகமாகியுள்ளதால் இதுகுறித்த புரிதல் அதிகரித்துள்ளது. இதனால் பலர் பரிசோதனைகள் செய்துகொள்கின்றனர். புற்றுநோய் அல்லாத கட்டி, புற்றுநோய் உள்ள கட்டி என்று இருவகையான கட்டிகள் இருக்கின்றன. இதை நாம் சுயபரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். மாதவிடாய் காலத்தில் மார்பகங்களை நாம் சுயபரிசோதனை செய்துகொள்ளலாம். இதில் எந்தவிதமான தவறும் இல்லை. குளிக்கும்போது இதைச் செய்வது எளிதானது.

 

புற்றுநோய் வந்துவிட்டாலே வாழ்க்கை அவ்வளவுதான் என்று எண்ணிய காலம் ஒன்று இருந்தது. இப்போது அப்படியில்லை. நோயை நாம் கண்டறிந்து நம்மால் மருத்துவம் செய்து கொள்ள முடியும். ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொரு வகையான சிகிச்சை இருக்கிறது. சிகிச்சை முடிந்த பிறகு நிச்சயமாக சாதாரண வாழ்க்கையை நம்மால் தொடர முடியும்.

 

சமுதாயத்தின் தவறான புரிதல்களுக்கு நாம் ஆளாகிவிடக்கூடாது. இப்போது நிறைய அறுவை சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இதன் மூலம் நம்முடைய ஆயுளையும் அதிகரிக்க முடியும். நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது தான் அவசியம். இதற்கு சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். மம்மோகிராம் பரிசோதனை என்பது நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான இடைவெளியில் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். உணவே இப்போது விஷமாக மாறி வருவதால் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். கீமோதெரபியில் மட்டும் தான் சற்று வலி இருக்கும். ரேடியோதெரபி சிகிச்சையில் வலி குறைவு அதைக் கூட எடுத்துக்கொள்ளலாம்.
 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் குறட்டைக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா? - மயக்க மருந்து நிபுணர் கல்பனா விளக்கம்!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Dr Kalpana | Snoring | Child |

 

குறட்டையால் பாதிக்கப்படுகிற குழந்தைகளை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் என்ன நடக்கும், குறட்டையால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும் போது, மயக்கமருந்து நிபுணர்களின் அவசியம் குறித்து மயக்கவியல் நிபுணர் டாக்டர் கல்பனா நமக்கு விளக்குகிறார்.

 

குறட்டை பிரச்சனையால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இரவில் குறட்டை விடுகிற குழந்தைகளுக்கு பல பிரச்சனைகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதை சரியாக கவனிக்க வேண்டும். 

 

ஒரு குழந்தை தூங்கும் போது குறட்டை விடுகிறாள் அவளுக்கு எதாவது மருந்து கொடுங்கள் என்று மருத்துவரை அணுகியிருக்கிறார். குழந்தையை நேரில் பார்க்காமல் மருந்து கொடுக்க இயலாது. நேரில் அழைத்து வாருங்கள் என்று வரச்சொல்லி பரிசோதித்தால் மூக்கின் உட்புறத்தில் இயல்பான அளவை விட அதிகமாக சதை வளர்ந்திருக்கிறது. குழந்தைகளுக்கு அரிதாக வரக்கூடிய பிரச்சனையாகும். 

 

13 வயது குழந்தை பல நாட்களாக வாயில் தான் மூச்சு விட்டு இருந்திருக்கிறாள். யாருமே இதை கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள். பிறகு அறுவை சிகிச்சையின் மூலம் தான் இதை சரி செய்ய முடியும் என்றும், அதற்கு முன் மயக்கமருந்து கொடுப்பதற்கு நிபுணரை அணுகினர். மயக்க மருந்து நிபுணர்கள் பரிசோதித்து அறுவை சிகிச்சையின் போது வலி ஏற்படாமல் இருப்பதற்கும், இதய துடிப்பின் அளவினை பரிசோதித்தும் மயக்க மருந்து அளவு எடுத்து கொடுப்பார்கள். 

 

இந்த குழந்தைக்கு முழு மயக்க மருந்து தேவைப்பட்டது. குழந்தையை முழுமையான மயக்க நிலைக்கு கொண்டு போய் அறுவை சிகிச்சை செய்தனர், இரண்டு மூக்கு துவாரத்திலும் சதை வளர்ந்திருந்தது. அதை நீக்கி அறுவை சிகிச்சை செய்தனர். சில நாட்களுக்குப் பிறகு தன்னால் மூக்கின் வழியாக சுவாசிக்க முடிகிறது என்று மகிழ்ச்சியோடு அந்த குழந்தை சொன்னது.

 

சில சமயம் குறட்டைக்கு உடற்பருமன் காரணமாக சொல்லப்படும். ஆனால் சில குழந்தைகள் ஒல்லியாக இருப்பார்கள், அவர்களும் குறட்டை விடுவார்கள், தூங்கும் போது சுவாசிக்க உகந்தவாறு படுத்து இருக்க வேண்டும், அப்போது குறட்டையிலிருந்து விடுதலை அடையலாம். எல்லா விதமான குறட்டைக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு குறட்டையின் தன்மை தீவிரம் அடைந்த பிறகு மருத்துவரை அணுகும் போது நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை தேவையா அல்லது வெறும் மருந்து மாத்திரையால் குணப்படுத்தி விடலாமா என்பது பரிசீலிக்கப்படும். 

 

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Dr Arunachalam | Breast Cancer | Women | man

 

நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்கும் போது மருத்துவரைப் பார்ப்பது எந்த வகையிலும் பலனளிக்காது, நோய்க்கான அறிகுறி ஆரம்பித்ததுமே மருத்துவரை அணுக வேண்டிய தேவையையும் அவசியத்தையும் டாக்டர் அருணாச்சலம் நமக்கு விரிவாக விளக்குகிறார்.

 

என்னிடம் சிகிச்சைக்காக ஒரு பெண்மணி வந்தார், மார்பக புற்று நோயா என்று பரிசோதித்து இருக்கிறார். பரிசோதனையின் முடிவில் மார்பக புற்றுநோய் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அதற்கான சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை, கிட்டத்தட்ட ஆறுமாதம் அப்படியே விட்டிருக்கிறார். இப்பொழுது திடீரென வலியின் தன்மை அதிகரித்ததும் எங்களை அணுகினார். 

 

பரிசோதித்தால் மார்பகமே கருப்பு நிறமாக மாறிவிட்டது. நோயின் தன்மை நான்காவது நிலைக்கு போய் ஆறு மாதத்திற்குள் இறந்து விடுவார்கள் என்ற நிலையில் சிகிச்சை அளித்தோம். ஆனால் புற்றுநோயின் ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு மார்பகத்தை நீக்கி 20 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்ந்தவர்களெல்லாம் உண்டு என்பதை மருத்துவத்துறையில் நிரூபித்திருக்கிறார்கள்.

 

விரல்களை குவித்துக் கொண்டு மார்பகத்தில் வலது புறத்தில் ஆரம்பித்து இடதுபுறமாக சுற்றி சுற்றி அழுத்தி சுயமாகவே பரிசோதனை செய்து பார்க்கலாம். பரிசோதனையின் போது எதாவது வலியோ, வேதனையோ, கட்டி போன்று தோன்றினாலோ மருத்துவரை அணுகி மம்மோகிராம் பரிசோதனை செய்து புற்றுநோயா அல்லது சாதாரண வலி தானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

 

பாரம்பரியமாக நோய் இருந்தவர்களுக்கு தொடர்ச்சியாக வர வாய்ப்பு உள்ளது. நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுக்கு மார்பக புற்று நோய் வந்து சிகிச்சை அளித்திருக்கிறோம். மார்பகம் என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவானது தான். பெண்ணுக்கு வளர்ந்து விடுகிறது. ஆணுக்கு வளர்ச்சியற்று இருக்கிறது. ஆணுக்கும் மார்பகத்தை சுற்றி வலியோ, கட்டியோ இருந்தால் பரிசோதித்து புற்றுநோயா என்று பார்த்துக் கொள்ளவும். மார்பக புற்றுநோய்க்கு ஆண், பெண் வேறுபாடெல்லாம் தெரியாது. இருவருக்கும் வரக்கூடியதே

 

அதிகப்படியான புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உணவு முறையில் சீரற்ற தன்மை உள்ள அனைத்து ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது. ஆரம்பத்தில் சுயபரிசோதனை செய்து பார்த்துவிட்டு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டு சரி செய்து ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்