Skip to main content

மண்தான் நமக்கு நன்மை செய்யும்! வழியெல்லாம் வாழ்வோம் #6

Published on 04/04/2018 | Edited on 07/04/2018

 

Valiyellam vaalvom 6

 


உங்கள் குழந்தைகள் நலமா - பாகம் 4

 

வழியெல்லாம் வாழ்வோம் மருத்துவத் தொடரின் சென்றவார அத்தியாயத்தில், நம் பாரம்பரிய உலோகத்திலான கொள்கலன்களின் பயன்களைப் பட்டியலிட்டிருந்தோம். இந்த வாரம் மிக எளிய கொள்கலனான மண்பானை, மண்சட்டிகளின் பயன்களைக் காண்போம்.

 

மண்பானைகளில் நன்மைகள்:

 

மண்பானை என்பது ஓர் இயற்கை குளிர்சாதனப்பெட்டி என்ற அளவில் நாம் அனைவரும் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நீரில் நல்ல மற்றும் கெட்ட கிருமிகள் உண்டு. குடிநீரைக் காய்ச்சும்போதோ அல்லது அதை மினெரல் வாட்டராக (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில்) மாற்றும்போதோ, கெட்ட கிருமிகளோடு, நல்ல கிருமிகளும் அழிந்துவிடுகின்றன. ஆனால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு நீரில் இருக்கும் நல்ல கிருமிகள் கட்டாயம் தேவை. இதற்கு மண்பானை பயப்படுகிறது. அதாவது நல்ல வகை கிருமிகளை மட்டும் வைத்துக்கொண்டு, கெட்ட வகை கிருமிகளை அகற்ற வல்லது மண்பானை.

 

நாகரிக வாழ்வியலில் நாம் பயன்படுத்தும் மினெரல் வாட்டரில் நல்ல கிருமிகளும் இல்லை, சரியான விகிதத்திலான தாதுக்களும் இல்லை. இந்த தாதுக்கள் குறைபாட்டால் தான் குழந்தைகள் உடல் பலவீனமாக, சோர்வுடன் காணப்படுகின்றனர். ஆனால், மண்பானையில் நீர் ஊற்றி வைக்கப்பட்ட ஆறு மணி நேரத்தில், நீரில் உள்ள கெட்ட கிருமிகள் மட்டும் நீக்கப்படுகின்றன. ஆனால், அத்தனை தாதுக்களும் அப்படியே இருக்கும். எனவே, இப்படி மண்பானையில் ஊற்றிவைத்த குடிநீரைக் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை தாதுக்களும் அவர்களுக்கு கிடைக்கின்றன.

 

clay pots1

 

மண்சட்டிகளின் பயன்கள்:

 

குடிநீர் சேகரிக்கும் கொள்கலனாக மட்டுமல்லாமல், சமையல் பாத்திரமாகவும் மண்பானையைப் பயன்படுத்தலாம். மண்பானை சமையலின் சுவையின் அடர்த்தியும்,  மணமும் நாம் அனைவரும் அறிந்ததே. மண்பானைகளில் மிக நுண்ணிய துளைகள் இருக்கும். மண்பானைகளில் சமைக்கும்போது இத்தகைய துளைகளின் வழியே நீராவி வெளியேறுவதால், உணவு அவித்ததைப்போல் இருக்கும். சமைக்கப்படும் உணவில் இருக்கும் சத்துகள் வெளியேறாமல் இருக்கும். குழந்தைகளுக்கு இந்த உணவுகளைக் கொடுக்கும் போது செரிமானம் சார்ந்த எந்த தொந்தரவுகளும் வர வாய்ப்பில்லை. மேலும் மண்பானைகளை சமையலுக்குப் பயன்படுத்துகையில் அதிக எண்ணெய் தேவைப்படுவதில்லை.

 

மேலும், நம் பாட்டன்மாரும் பாட்டிகளும் காலகாலமாய்ப் பயன்படுத்திய இரும்பு தோசைக்கல்லை பயன்படுத்துவதை அவமானமென்று கருதும் காலம் இது. இரும்புக்கு கல் சூடேறும்போது, அதன் இரும்புத்தன்மை உணவோடு சேரும். இது இரும்புச்சத்தை குழந்தைகளுக்கு உணவோடு உணவாக அளிக்க உதவுகிறது. இதனால் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவில் தக்கவைக்கப்படுகிறது. ஆனால், இன்றோ நான்-ஸ்டிக் எனப்படும் பாத்திரங்களில் உணவு சமைப்பது மட்டுமே நாகரீகமாக மாறிவிட்டது. வீட்டில் நான்-ஸ்டிக் பயன்படுத்துவது மட்டுமே கவுரவமான விடயமாகக் கருதப்படுகிறது.

 

நான்-ஸ்டிக் பாத்திரங்களின் தன்மைகள், தீமைகள்:

 

non stick tawa

 

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உணவு சமைக்கையில் உணவுகள் அமிலத்தன்மை உடையவையாக மாறுகின்றன. நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள டெப்லான் எனும் வேதிப்பொருளின் தன்மை சமைக்கப்படும் உணவுகளோடு சேர்ந்துவிடுகிறது. இது பலநேரங்களில் உணவை அமிலத்தன்மை உடையதாக மாற்றுகிறது. இது பெரும் ஆபத்து.

 

ஓர் ஆய்வில் நான்-ஸ்டிக் வடைச்சட்டிகள், தோசைக்கற்களில் பூசப்படும் பாலிடெட்ரா புளுரோ  எத்திலீன் [Polytetrafluoroethylene (PTFE)] அல்லது பெர்புளுரோ ஆக்டனாயிக் அமிலம் [Perfluorooctanoic acid (PFOA)] ஆகியவற்றிலிருந்து வரும் புகையை பறவைகளை உட்கொள்ள வைத்து சோதனை செய்யப்பட்டது. இந்தப்புகையை சுவாசித்த பறவைகளின் நுரையீரலில் புண்கள் உருவாக்கி மூச்சுத்திணறலுக்கு உள்ளாகின. இதிலிருந்தே இதன் தீமைகள் நம் குழந்தைகளை எப்படிப் பாதிக்கும் என்பதை நாம் அறியலாம். மேலும், புளூரைட் என்னும் வேதிப்பொருள்  உடம்பில் உள்ள தைராய்டின் அளவைக் குறைத்து, ஹைப்போ தைராடிசம் எனும் நோயை ஏற்படுத்துகிறது. இதுவும் மோசமான விளைவாகும்.

 

நான்-ஸ்டிக் பாத்திரங்களை உருவாக்க பல நாடுகளில் அமலில் இருக்கும் தரக்கட்டுப்பாட்டு முறைகள் இந்தியாவில் பின்பற்றப்படுவதாக, நாமறிந்த வரையில் தெரியவில்லை. எனவே, இந்த செயற்கை பாத்திரங்களை பயன்படுத்தாமல் நம் பாரம்பரிய மண் மற்றும் இரும்புச் சட்டிகளைப் பயன்படுத்தல் நலம்.

 

இவை தவிர, உணவு உண்ண வாழையிலையை மட்டுமே பயன்படுத்தலாம். வாழையிலையில் சூடான உணவை இட்டு உண்பதால், இலையின் பசுமைத்தன்மையில் உள்ள குளோரோபில், நம் உடலுக்குள் சென்று கல்லீரல் முதல் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்படுகின்றது.

 

1.    உடலின் செரிமாணத்திறன் அதிகரிக்கிறது.

2.    உடலின் மறுசீரமைப்பிற்கு (Healing) உதவுகிறது.

3. ஆன்டி-ஆக்சிடண்ட் ஆக செயலாற்றி, உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றி குடலை சுத்தம் செய்து குடல் சார்ந்த தொந்தரவுகளிலிருந்து காக்கிறது.

4. முக்கியமாக புற்றுநோய் வராமலும், வந்துவிட்ட புற்றுநோயின் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் குளோரோபில் உதவுகிறது.

 

வாழையிலை குறைந்த ஆயுள் கொண்டது. ஆனால் நம்மை நீண்ட ஆயுளோடு வாழ வைப்பது. ஆனால் நெகிழி போன்ற பொருட்கள் அதிக ஆயுள் கொண்டவை. ஆனால் நம்மை அதிவிரைவில் அழிக்கக்கூடியவை. எனவே, வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ வாழையிலையில் உணவருந்துவோம்.