Skip to main content

சுதந்திரத்தின் பலனை அரசியல்வாதிகள் 74 வருடங்களாக அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள் - நடிகர் ராஜ்கிரண்

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
fd


நாம் பெற்ற சுதந்திரம்  என்ற தலைப்பில்  நடிகர் ராஜ்கிரண்   எழுதிய வரிகள் வருமாறு,

நம் இந்திய தேசத்தின்
சுதந்திர வரலாறு,
மிக நீளமானது, மிக ஆழமானது....

 

பளபளப்பான மேடைகள் போட்டு,
கவர்ச்சிகரமான வசனங்கள் பேசி,
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துக்
கிடைத்ததல்ல, சுதந்திரம்...

 

நம் முன்னோர்களின்
செல்வங்களையும், உடைமைகளையும்,
உறவுகளையும், உதிரங்களையும்,
உடல்களையும், உயிர்களையும்
இந்த மண்ணில் விதைத்துக்
கிடைத்தது, சுதந்திரம்...

 

சுதந்திரத்தின் பலனை,
அரசியல்வாதிகள் 74 வருடங்களாக
அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்

 

விதைத்தவர்களின் சந்ததிகள்
தெருவில் நிற்கிறார்கள்...

 

விதைக்கப்பட்டவர்களின் ஆன்மாக்கள்,
எல்லாவற்றையும்
கவனித்துக்கொண்டு தான் இருக்கின்றன....

 

நம் தேசியக்கொடியின் "காவி நிறம்",
பெரும்பான்மையான இஸ்லாமியர்கள்
உட்பட, சுதந்திரத்துக்காகப்போராடிய
அனைத்து மக்களும் சிந்திய ரத்தத்தையும், அவர்களின் தியாகத்தையும் குறிக்கிறது...

 

வெள்ளை நிறத்தின் நடுவில் இருக்கும்
"சக்கரம்", அதன் ஆரங்கள் அனைத்தும்
சமமாக இருப்பதைப்போல, இங்கு
அனைத்துப்பிரிவு மக்களும், சமத்துவத்தோடும், சமநீதியோடும்
நடத்தப்பட வேண்டும் என்ற, நமது
அரசியல் சாசனத்தை குறிக்கிறது...

 

அப்படி நடத்தப்பட்டால் தான்,
நாட்டில் அமைதி நிலவும் என்பதை,
"வெள்ளை நிறம்" குறிக்கிறது...

 

அப்படியான அமைதி நிலவினால் தான்,
நாடு சுபிட்சம் அடையும் என்பதை,
"பச்சை நிறம்" குறிக்கிறது...

 

இதையெல்லாம்,
வருடத்திற்கு ஒரு முறையாவது,
ஒவ்வொரு இந்தியக்குடிமக்களும்
நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும்
என்பதற்காகத்தான்,
தேசியக்கொடி ஏற்றப்பட்டு, "சுதந்திரம்"
கொண்டாடப்படுகிறது...

 

சட்டைப்பையில் மூவர்ணக்கொடி குத்தி,
குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து, ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதோடு நின்று விடாமல்,

 

நம் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம்
செய்தவர்களின் வாழ்க்கையும்,
போராட்டங்களும், வளரும் குழந்தைகளுக்கு, பாடப்புத்தகங்கள்
வழியாக போதிக்கப்பட வேண்டும்...

 

இந்தியா நமது தேசம்.
ஹிந்துஸ்தான் ஹமாரா...

 

Next Story

'கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும்' - எழும் கோரிக்கை

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Mani Mandapam for Kodikatha Kumaran - the demand that arises

கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும் என கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சமுதாய அமைப்பு அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக குமரன் பிறந்தார். இவருடைய இயற்பெயர் குமாரசாமி.

தன் குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாகப் பள்ளிப் படிப்பை ஆரம்பப் பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். பின்னர் அவர் கைத்தறி நெசவு தொழிலை செய்து வந்தனர். 1923ல் ராமாயி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு இருக்கும் ஈஞ்சையூரில் ஒரு மில்லில் எடை போடும் வேலையில் சேர்ந்தார்.

திருப்பூரில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய சிப்பாய்களால் அடிபட்டு கையில் இந்திய தேசியக் கொடியுடன் மயங்கி விழுந்து இறந்ததால் இவருக்கு கொடி காத்த குமரன் என்ற பெயர் வந்தது. இவருக்கு சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக  சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது. இதுகுறித்து செங்குந்த மகாஜன சங்க தலைவர் நந்தகோபால் மற்றும் செயலாளர் ஆசை தம்பி ஆகியோர் கூறும்போது, "அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த கொடிகாத்த குமரனுக்கு மட்டும் அரங்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  தேச விடுதலைக்காகப் போராடிய கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் அவர் பிறந்த சென்னிமலையில் கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னிமலையில் விரைவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

Next Story

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Two days holiday for schools in Puducherry

 

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழா ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் அறுபது ஆண்டுகால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 1ஆம் தேதியை புதுவை மாநில அரசு தங்களின் விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.  1673 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் காலூன்றியதும், அதே ஆண்டில் தங்களின் வணிகத்தை துவங்கிய இடம் புதுச்சேரிதான். அதன் பிறகு 1721 ம் ஆண்டு மாஹியையும், ஏனாமையும், காரைக்காலையும், சந்திரனாகூரையும் அடுத்தடுத்து தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.

 

இந்தியா முழுவதும் பல்வேறு கோணங்களில் விடுதலைப் போராட்டங்கள் எழுந்து கிளர்ச்சியை உண்டாக்கியதால் 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு மட்டும் சுதந்திரம் அளித்தனர். ஆனால் புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று புதுச்சேரியிலும் போராட்டம் வெடித்தது. அதன் காரணமாக புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது.  

 

புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்து விட்டதால் இந்தியாவின் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மறுநாள் 16-ம் தேதியை புதுச்சேரியின் சுதந்திர தினமாக புதுச்சேரி அரசு கொண்டாடி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் பல அறுபது ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தினர், தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக, நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாட அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பயனாக நவம்பர் 1-ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக அறிவித்து சுதந்திரத்தை கொண்டாடி வருகின்றனர். வருடா வருடம் புதுச்சேரி விடுதலை தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாளை நவ.1 மற்றும் 2 தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .