Skip to main content

காமம் புனிதமே! உண்மையை உணர்த்தும் உறுப்பு வழிபாடு!

Published on 11/02/2018 | Edited on 12/02/2018


பட்டாசு நிறுவனம் ஒன்றின் முகவரான அந்த நண்பர், தீபாவளி பட்டாசுகளுக்கான ஆர்டர் எடுப்பதற்காக, சிவகாசியிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்வது வழக்கம். ஊர் திரும்பியதும், நண்பர்களைச் சந்தித்து, சுவாரஸ்யமான பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். 
 

lust 2


உடல் உறுப்புக்களின் சிறப்பு!

இந்த முறை, நண்பர்கள் சந்திப்பின்போது,  “இந்தியாவும் சரி.. இந்திய மக்களும் சரி.. ரொம்ப ரொம்ப கிரேட்..” என்று ஏதோ சொல்வதற்கு ஆயத்தமானார். அவரைக் கலாய்க்கும் விதமாக குறுக்கிட்ட இன்னொரு நண்பர் “அதெல்லாம் எங்களுக்கும் தெரியும்.. விஷயத்துக்கு வா..” என்றார். “அந்தக் காலத்துலயே இந்த மாதிரி சிந்தனையெல்லாம் நம்ம முன்னோர்களுக்கு எப்படி வந்துச்சுன்னு தெரியல. சத்தியமாச் சொல்லுறேன். ஆணோ, பெண்ணோ,  மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தரும், தன்னோட சிறப்பை உணரணும். தன்னோட உடலையும், உடல் உறுப்புக்களோட அற்புதமான செயல்பாட்டையும், அணுஅணுவா அனுபவிச்சு தெரிஞ்சிக்கணும். ஆண் குறியோ, பெண் குறியோ,  காமமோ, கலவியோ, பலரும் வெளிப்படையா பேசத் தயங்குற சமாச்சாரங்களெல்லாம், ஆபாசமோ, அருவருப்போ கிடையாது.

உறவின் உச்ச நிலையில் மட்டும்தான் மனிதன் தன்னையே மறக்கிறான். சில நொடிகளோ, நிமிடமோ,  ஆண்-பெண் உறவின்போதுதான்,  ‘நான்’ என்பது அறவே மறைந்த,  எந்த சிந்தனையும் இல்லாத நிலையை, அவனால் அடைய முடிகிறது. அது ஒரு அழகிய தருணம். அற்புதமான உணர்வு. அதனால்தான், மனம் திரும்பத் திரும்ப அதைக் கேட்கிறது.” என்று அந்த நண்பர் கண்களை மூடியபடி கூற, பொறுமை இழந்த இன்னொரு நண்பர் “எப்பவோ இதை ஓஷோ சொல்லிட்டாரு.. நீ இப்ப என்ன சொல்ல வர்ற.. அதைச் சொல்லு..” என்று அவசரப்படுத்தினார். “ஒரு பெரிய சப்ஜெக்டுக்குள்ள போகணும்னா.. அதுல உங்களுக்கு ஒரு ஈடுபாட்டை உண்டாக்கணும். அதற்காக உங்களைத் தயார்ப்படுத்துறேன். பொறுமை அவசியம்.” என்று பீடிகை போட்டார் பட்டாசு நண்பர்.  

உலகெங்கிலும் குறி வழிபாடுகள்!
 

lust 1



“உறவின் மூலம் கருத்தரித்து, குழந்தையை ஒரு பெண் பிரசவிப்பது அற்புதமான நிகழ்வு. காமம்தான் இதற்கு அடிப்படை. அதனால்தான், நம் முன்னோர்கள் காமத்தை புனிதமாகப் பார்த்தார்கள். இனப்பெருக்கத்துக்கு காரணமான ஆண்குறி, பெண்குறியை, தெய்வீக சக்தியாகக் கருதினார்கள். காமம் சார்ந்த விஷயங்களை மரியாதையோடு அணுகினார்கள். அதன் வெளிப்பாடுதான் ஆண்குறி, பெண்குறி வழிபாடுகள். இந்தியாவில் மட்டுமல்ல.. மெக்சிகோ, கிரீஸ், ரோம்,  பாபிலோனியா, ஆஸ்திரியா, எகிப்து, என உலகம் முழுவதும் இத்தகைய வழிபாடுகள் நடந்திருக்கின்றன. இடைக்கால கத்தோலிக்கக் கிறிஸ்தவர்ளும் பாலியல் உறுப்புக்களை வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதற்கான  சான்றுகள் நெதர்லாந்து கலாச்சாரத்தில் உள்ளன. குளிர் பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் பாலியலில்  அதிகமாக ஈடுபட்டனர். அதனாலேயே, அத்தகைய எண்ணங்கள்.. இலக்கியம், சித்திரம், சிற்பம் என எல்லாவற்றிலும் வெளிப்பட்டன.
 

ஐரோப்பாவில், வெள்ளை இன நாகரீகம் முதலில் தோன்றிய பல்கேரியாவில், பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய புதைகுழிகளில், ஆண்குறிக்கு தங்கக் கவசம் அணிந்திருந்த மதகுரு ஒருவரின் எலும்புக்கூட்டை கண்டெடுத்திருக்கின்றனர். இத்தாலியில் உள்ள பாம்ப்பேயில் நடத்திய அகழ்வாய்வின் போது, இரண்டு விரைகளுடன் கூடிய ஆண் குறிகளின் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன. ஜப்பானில் கானயாமா என்ற கோவில் இருக்கிறது. அங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமையில், ஆண்குறி திருவிழாவே நடத்துகிறார்கள்.
  

சிந்துவெளி நாகரிக காலத்திலேயே இந்தியாவில் லிங்க வழிபாடு இருந்திருக்கிறது. லிங்க வழிபாடும் பெண்குறி  வழிபாடும் தமிழர் மரபிலும் உண்டு. லிங்கம் என்பது ஆண் வடிவமும், பெண் வடிவமும் இணைந்தது. ஆண் வடிவம் என்பது தண்டு போன்ற தோற்றத்துடன் இருப்பது. ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் ஆண் வடிவம் அமைந்திருக்கும் நிலையே லிங்கம் ஆகும். அன்றைய நிர்வாண உலகத்தில், ஆண்குறி பெண்குறி குறித்த எண்ணங்கள், அவர்களை ஆக்கிரமித்து, சிலைகளாகி, பின்னாளில் கடவுளாகி இருக்கின்றன. 
 

எங்கெங்கோ இருந்தாலும், எவ்வளவு தொலைவில் இருந்தாலும், குறி வழிபாடு விஷயத்தில், ஒரே மாதிரியான சிந்தனை உலக மக்களுக்கு எப்படி வந்தது? மனித இனத்தை உருவாக்கும் அடையாளமாகக் குறிகளைக் கருதிய எண்ணம் அனைவருக்கும் பொதுவானதாக இருந்திருக்கிறது. இதற்கெல்லாம்,  ஒரு நாட்டைப் பார்த்து இன்னொரு நாடு கற்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று தான் படித்தறிந்ததையும் கேட்டறிந்ததையும், பட்டாசு நண்பர் அப்படியே ஒப்பிக்க.. “பாலியல் பாடம் நடத்தும் இந்த திடீர் ஞானோதயம் உனக்கு எப்படி வந்தது? புத்தருக்கு போதிமரம்.. உனக்கு?” என்று சீண்டினார்கள் நண்பர்கள்.
 

மனதை மாற்றும் வலிமை காமத்துக்கு உண்டு!
 

lust 4

 

“புத்தர்ன்னு நீங்க சொன்னதும் துறவியாகும் முடிவில் இருந்த ஒருவர்  குறித்த விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அத்தனை வசதிகளையும் விட்டுவிட்டு கிளம்பும்போது,   தனது குழந்தையை கடைசியாக ஒரு முறை தொட்டுப் பார்க்க விரும்பினார் அவர். குழந்தையை நெருங்கியபோது, மனைவியின் புடவை விலகியிருந்தது. அதைக் கண்டதும், குழந்தையிடம் விடைபெறும் எண்ணத்தைக் கைவிடுகிறார்.  துறவற சிந்தனையும் அந்த நேரத்தில்  இல்லாமல் போய்விடுகிறது. காமம் அத்தனை வலிமை படைத்தது. இதனை உணர்ந்ததால்தான்,  காமத்தை.. காமம் வெளிப்படுகின்ற முக்கிய உறுப்புக்களான ஆண், பெண் குறிகளைக் கோவில்களில் வைத்துக் கும்பிட்டிருக்கின்றனர். ஆண் பெண்ணை முழுமையாக்குகிறான். பெண் ஆணை முழுமையாக்குகிறாள். இருவரும் இணைந்து உலகத்தை முழுமையாக்குகிறார்கள். சரி.. சரி.. இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்றால்.. அசாமில் உள்ள கோவில் ஒன்றுக்கு நான் போய்விட்டு வந்ததால்தான்..” என்று, தான் வியந்ததை விவரித்தபோது பரவசமானார்.   
 

யோனி வழிபாட்டுக்கென்றே ஒரு கோவில்!
 

lust 3


 

அந்தக் கோவில் குறித்து பட்டாசு நண்பர் கூறிய தகவல்கள் இதோ –
 

அசாமில் கவுகாத்தி நகரின் மேற்கு பகுதியில் உள்ள நீலாச்சல் குன்றில் அமைந்திருக்கிறது காமாக்யா கோவில். இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் மிக உயர்வான சக்தி பீடமாக காமாக்யா விளங்குகிறது. காளிகா புராணம், தேவி பாகவதத்திலெல்லாம் மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோவில் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன.  வெளித்தோற்றத்தில் கோவிலாகத் தெரிந்தாலும்,  உள்ளே போகும்போது,  இருண்ட பாதாள குகைக்குள் செல்வது போலவே இருக்கும்.
 

காமாக்யா கோவிலின் தலபுராணம் இப்படிச் சொல்கிறது -  
 

தட்சனின் மகளான தாட்சாயிணி கடும் தவம் செய்து சிவனைக் கணவனாக அடைகிறாள். உடலில் சாம்பலைப் பூசிக்கொண்டு சுடுகாட்டில் திரியும் சிவனை தட்சன் அவமானப்படுத்துகிறார். அதனால், தட்சன் நடத்தும் யாகத்தை அழிப்பதற்காக, யாக குண்டத்தில் விழுந்து எரிந்துவிடுகிறாள் தாட்சாயிணி. மனைவியின் உடலைத் தன் தோள்களில் சுமந்துகொண்டு தாண்டவமாடுகிறார் சிவன். விஷ்ணு செலுத்திய சுதர்சன சக்கரம் தாட்சாயிணியின் உடலைத் துண்டு துண்டாக்குகிறது. அப்போது அவளது கர்ப்பம் கலைகிறது. துண்டுகளான உடல் வெவ்வேறு இடங்களில் விழுகிறது. யோனிப் பகுதி விழுந்த இடம்தான் காமாக்யா. இங்கு யோனிப் பகுதியை கடவுளாகப் பாவித்து, தினமும் பூஜை செய்து  சக்தியாக வழிபடுகிறார்கள்.  வருடத்தில் மூன்று நாட்கள் கோவில் கதவை மூடிவிடுவார்கள். அந்த 3 நாட்களையும் சக்தி தேவியின் மாதவிடாய் சுழற்சி நாட்களாக கணக்கில் கொள்கிறார்கள். அம்புபாச்சி மேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களில், இக்கோவிலின் நீரூற்று சிவப்பு நிறமாக மாறுவதை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள்.
 

அம்புபாச்சி மேளா 
 

-பட்டாசு நண்பர்  இப்படிச் சொல்லிக்கொண்டே போக, இடைமறித்த மற்றொரு நண்பர்  “அந்தக் கால வழிபாட்டுல, காற்றையும் மழையையும் கும்பிட்டிருக்காங்க. இந்த மாதிரி வழிபாடுகளும் இருந்திருக்கு. அதுக்காக, இப்பவும் அதே மாதிரி வழிபாட்டைத் தொடரணுமா? செக்ஸ் பற்றி தெரிஞ்சிக்கிறதுக்கு கோயிலுக்கு போகணும்கிற அவசியம் இப்ப இல்லியே?” என்றார்.

உடல்கள் மட்டுமல்ல! மனதும் சீராக இருக்க வேண்டும்!
 

lust 5

 

பட்டாசு நண்பர் அமைதியாக “உறவு என்பது ஆண்-பெண் இரு உடல்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.   மனசும் சரியாக இருந்தால்தான்,  தாம்பத்திய உறவு நல்ல முறையில் நடக்கும். உடம்பை என்னதான் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டாலும், மனசு குப்பையாக இருந்தால், சீராக இல்லாமல், அதற்கு தயார் நிலையில் இல்லாமல் இருந்தால், உறவில் நிச்சயம் திருப்தி அடைய முடியாது. கடவுள் இருக்கிறாரோ? இல்லையோ? கோவில்களோ, இதுபோன்ற வழிபாடுகளோ, நல்ல நம்பிக்கையோ? மூடநம்பிக்கையோ? எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில், தாம்பத்யத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு காரியத்திலும் வெற்றி அடைய வேண்டுமென்றால்,  மனதை ஒருநிலைப்படுத்துவது மிக மிக முக்கியம். அதற்கு, மக்களில் பலருக்கும் கோவில்களும், வழிபாடுகளும் அவசியமாகின்றன. சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதும்,  இளம் பெண்களிடம் அத்துமீறுவதும், முதியவர்களைக் கூட ஆதாயத்துக்காக பலாத்காரம் செய்து கொல்வதும் சர்வ சாதாரணமாக இப்போது நடக்கிறது. காமம் புனிதமானது என்பதை உணராததால்தான், இத்தகைய கொடுமைகள் அரங்கேறுகின்றன. கோவில்கள் மற்றும் கோபுரங்களில்  சிலைகள் அமைத்து, அதன் மூலம் பாலியலைக் கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் நம் முன்னோர்கள்.

நல்லவற்றை நல்லதாகவே பார்க்க வேண்டும்!  

பெண்களுக்கு மாதவிடாய் என்பது அருவருப்பான நிகழ்வு அல்ல. அதுவும் மிகப் புனிதமானதுதான் என்பதை மக்களுக்கு உணர்த்திட, இங்கே வழிபாடெல்லாம் நடத்துகிறார்கள். அதற்கு விழாவும் எடுக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது, இது மாதிரியான செயல்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்க முடியும். நுட்பமாக உணர்ந்து பார்க்கும்போதுதான், பாலியல் குறித்த விழிப்புணர்வை, வருங்கால சந்ததியினரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தாங்கள் வாழ்ந்த காலங்களில் என்னவெல்லாம் செய்துவிட்டுப் போயிருக்கின்றார்கள் என்பதை அறியமுடியும். ச்சீச்சீ.. இதற்கெல்லாம் ஒரு கோவிலா? டெக்னாலஜி வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் இப்படியெல்லாம்  ஒரு வழிபாடு நடத்த வேண்டுமா? என்று கேலி பேசுபவர்களும் அனேகம் பேர் இருக்கிறார்கள். எனக்கென்னமோ, காமாக்யா கோவில் மனதுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால்தான், இந்த அளவுக்குப் பேசுகிறேன். என்னைப் பொறுத்தமட்டிலும், நல்ல விஷயங்களை நல்லதாகவே பார்க்க வேண்டும். என் பேச்சை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.” என்று கண் கலங்கினார். நண்பர்கள் உடனே அவரது கைகளைப் பற்றிக்கொண்டு “நல்ல விஷயத்தைத்தானே இத்தனை மெனக்கெட்டு எங்ககிட்ட சொல்லிருக்க. இதுக்காக ஏன் அழணும்?” என்று ஆசுவாசப்படுத்த முயற்சிக்க, “நம் முன்னோரை  நினைத்துப் பார்த்தேன். நன்றியுணர்வு மேலிட்டது. என்னையும் அறியாமல் கண்ணீர் கசிந்துவிட்டது.” என்று விளக்கம் தந்தார். 
 

ஒரு பெண் மூலம்தான் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. தாயின் வயிற்றிலிருந்து குழந்தை வெளிவரும்  யோனிப் பகுதியை  புனிதமான அடையாளமாகப் பார்ப்பதும், வழிபட்டு வருவதும், நம் முன்னோர்கள் பெண்களை எந்த அளவுக்கு மதித்து வந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
 

பெண்மையைப் போற்றுவோம்! உடல் உறுப்புக்கள் விஷயத்தில் அக்கறை கொள்வோம்! நெறிமுறையோடு வாழ்வோம்!

   

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.