Skip to main content

செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை - வீட்டு பூஜை குறிப்புகள்: 02

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Things to do; Don't - Home Pooja Tips : 2

 

*பூஜையின் போது விபூதியை நீரில் குழைத்துப் பூசக்கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்துப் பூசலாம்.

 

*பூஜையறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும் போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

 

*பூஜையறையில் தெய்வப் படங்களை வடக்கு பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

 

*விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

 

*ஈர உடையுடனும், ஓராடையுடனும், குடுமியை முடியாமலும், தலையிலும் தோளிலும் துணியைப் போட்டுக் கொண்டோ, கட்டிக்கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

 

*ஈர ஆடையுடன் வழிபட நேருமானால், ஈர உடையை, "ஓம் அஸ்த்ராய பட்' என்று ஏழு முறை கூறி உதறி உடுத்தலாம்.

 

*சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்கவேண்டும். அவ்வாறு கேட்கமுடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதல்ல எனப்படுகிறது.

 

*பகவானின் மந்திரத்தைச் சொல்லி பிரார்த்திக்கத் தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும், இரவு தூங்கும் முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

 

*கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபமேற்றுவது தான். தீபவொளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபமேற்றி வைக்கலாம்.

 

*தீபத்திலுள்ள எண்ணெய்தான் எரிய வேண்டுமே தவிர, திரியல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

*விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின்வாசல் இருந்தால் அதன் கதவை சாத்திவிட வேண்டும்.

 

*காலையில் நின்றுகொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்துகொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

 

*விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியைத் தூண்டுவதோ கூடாது.

 

*எரிந்துகொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

 

*ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக்கூடாது.

 

*ஈரத்துணியை உடுத்திக்கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

 

*வாழைப்பழத்தில் வத்தியை செருகி வைக்கக்கூடாது.

 

*தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

 

*புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

 

*மாவிலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மாவிலைத் தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

 

*தெய்வப் படம், குத்துவிளக்குகளில் மின் ஒயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

 

*தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடிவரும் தெளிந்த ஆறு போன்றது. யாரொருவர் அதில் தன்னை சுத்தி செய்துகொள்கிறாரோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

 

*‘வீட்டில் பூஜைசெய்து முடித்ததும் துளசியைக் கையில் வைத்துக்கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப் பின்தொடர்ந்து செல்வேன்’ என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும்வரை விஷ்ணுவின் துணை அவருக்குண்டு.

 

*தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்கவேண்டும்.

 

*பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை, அனைத்துவகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், சமித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக்கூடாது. தட்டுபோன்ற பொருட்களின்மீது வைக்க வேண்டும்.