Skip to main content

‘ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா’ - ரெங்கா! ரெங்கா! எனப் பக்திப் பரவசமான பக்தர்கள்

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

srirangam ranganaathar temple  vaikunta ekadasi festival celebration 

 

பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் நம்பெருமாளைச் சேவித்தனர்.

 

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப் பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த டிசம்பர் 22 ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி நேற்று வரை வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து எனப்படும் திருமொழித் திருநாள் நடைபெற்றது.

 

இந்நாளில் நம்பெருமாள் (உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு அலங்காரங்களில் ஆழ்வார்கள், ஆச்சாரியார்களின் கோயில் பிரகாரங்களில் வலம் வந்து பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இராப்பத்து திருவிழாவின் முதல்நாளான (02-01-2023) இன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4.45 மணியளவில் விருச்சிக லக்னத்தில் புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தைச் சுற்றி வந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாகக் கடந்து வந்தார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா! ரெங்கா! எனப் பக்தி கோஷமிட்டவாறு பரமபத வாசலைக் கடந்து சென்றனர்.

 

பின்னர் நம்பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சி தரும் திருகொட்டகை பிரவேசம் கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தடைந்து பக்தர்களுக்கு பொதுஜன சேவை கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை இன்று இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதனைத் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை நீண்ட வரிசையில் நின்று பக்திப் பரவசத்துடன் சேவித்து வருகின்றனர்.

 

srirangam ranganaathar temple  vaikunta ekadasi festival celebration 

 

பக்தர்கள் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம், மாநகராட்சியுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. கடந்த வருடம் சொர்க்கவாசல் திறப்பின் போது வைரஸ் தொற்று காரணமாக நம்பெருமாளுடன் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு சென்றதற்குப் பிறகு தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த வருடம் நம்பெருமாளுடன் பக்தர்களும் சொர்க்கவாசலைக் கடந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்று முதல் இராப்பத்து உற்சவம் தொடங்கி வருகிற ஜனவரி 12 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா இனிதே நிறைவடைகிறது. ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ,மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.