Skip to main content

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டி கும்பகோணத்தில் சிறப்பு பூஜை! 

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

Special puja at Kumbakonam to pray for rain in Cauvery catchment areas!

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் வகையில், காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டி, வேப்பத்தூர் காவிரி ஆற்றங்கரையிலுள்ள அகத்தியர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த வேப்பத்தூர் காவிரி ஆற்றங்கரையில், அரச மரத்தின் நிழலில் பழமையான சிவலிங்கமும், அகத்தியர் திருமேனியும் ஒருசேர அமையப்பெற்ற இயற்கை எழில் கொஞ்சும் தெய்வீகச் சூழலில், பல ஆண்டுகளாகக் கிராம மக்கள் தொடர்ந்து  வழிபாடு செய்து வருகின்றனர்.

 

காவிரியில் தண்ணீர் பற்றாக்குறையோ அல்லது வறட்சியோ ஏற்படும் சமயங்களில் இங்குள்ள சிவபெருமான், அகத்தியருக்கும் சிறப்பு வழிபாடு செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் உடனடியாக உரியப் பலன் கிடைப்பதைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

 

"ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டலம்..." என்பது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.

 

எந்தச் சூழலிலும் குரு பக்தியையும் சிவ வழிபாட்டையும் விடுதல் கூடாது. உள்ளன்போடு ஊன்றி பக்தி செலுத்தும் போது அனைத்து நல்ல விஷயங்களும் கைகூடும். மேற்காணும் திருப்புகழ் இதற்கு எடுத்துக்காட்டு. கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நூறு அடிக்கு குறையாமல் இருந்து, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்கி வந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 57 அடியாகக் குறைந்துள்ள நிலையில், வரக்கூடிய நாட்களில் குடிநீர் தேவைக்கும்  விவசாயத்திற்கும் போதுமான அளவு தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. காவிரி வழக்கு, போராட்டம் என்பது மீண்டும் தொடர்கதை ஆகியுள்ளது.

 

கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்து மேட்டூருக்குத் தண்ணீர் வரவேண்டும் என்கின்ற பிரார்த்தனையை முன்வைத்து, இன்று 08.08.2023 செவ்வாய்க்கிழமை காலையில், வேப்பத்தூர் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சிவலிங்கத்திற்கும் அருட்திரு. அகத்திய முனிவர் மூர்த்திக்கும் காவிரி நீரைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, திருமுறை பாராயணம் செய்யப்பட்டது.

 

இதில் கும்பகோணம், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர், தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் கலந்து கொண்டு இந்த பிரார்த்தனையை  முன்வைத்தும் உலக நலன் வேண்டியும் சங்கல்பம் செய்து கொண்டார்கள்.

 

மனித வளம் மற்றும் சுற்றுச்சூழல் மலர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் திரு. சபாபதி அவர்கள், திரு. முருகன் அவர்கள், திரு. ராஜா அவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

ஆணவக் கொலை! - பெண்ணின் தந்தை கைது

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
tanjore girl passes away case father arrested by police

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். 

இந்த நிலையில், இவர்களது காதல் ஐஸ்வர்யாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. மேலும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையோடு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். 

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

Next Story

மனைவியை வெட்டிவிட்டு தப்பியவர் விபத்தில் பலி 

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
person passes away in accident near tanjore

தஞ்சையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி உள்ளிட்ட மூன்று பேரை அரிவாளால் வெட்டி விட்டு காரில் தப்பிய கணவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரை சேர்ந்தவர் நித்தியா. ஐ.ஓ.பி. மண்டல மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சுந்தர் கணேஷ். வங்கி ஒன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையின் காரணமாக அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இரண்டு மாதமாக வேலைக்கு செல்லாமல் சுந்தர் கணேஷ் வீட்டிலேயே இருந்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த தனது மனைவி நித்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது காரில் வெட்டிய அரிவாளுடன் தப்பி சென்றார். பிறகு யாகப்பா நகர் பிரதான சாலையில் உள்ள பால் டிப்போவில் இருந்த கடை உரிமையாளர்கள் கோபி மற்றும் தாமரை ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றுள்ளார். தப்பிச் செல்லும் போது தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றபோது டிப்பர் லாரி மீது பக்கவாட்டில் மோதியதில் கார் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது காரில் இருந்த அரிவாள் மற்றும் அவரது கை துண்டாக கீழே விழுந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அரிவாள் வெட்டு சம்பந்தமாகவும் விபத்தில் உயிரிழந்தது சம்பந்தமாகவும் தஞ்சை நகர தெற்கு காவல் துறை, தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் மற்றும் செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளனர். ஆனால், கணவரின் விருப்பம் இல்லாமல் இந்த வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் பால் டிப்போவில் இருந்த இருவரை ஏன் தாக்கினார் எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.