Skip to main content

நீலமேகப் பெருமாள் கோவில் வைகாசி விசாக பிரமோற்சவ தேரோட்டம் நிகழ்ச்சி! 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

Nilameka Perumal Temple Vaikasi Visakha Pramorsava festival

 

கரூர் மாவட்டம், குளித்தலையில் 500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி  விசாக பிரம்மோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கரோனா  தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு கடந்த ஜூன் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன்  திருவிழா துவங்கியது.

 

அதனைத் தொடர்ந்து நாள்தோறும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா கண்டார். வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் 9-வது நாளான இன்று, முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவ பெருமாள் அம்பாள்களுடன்  எழுந்தருளிய திருத்தேரினை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று நாமம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

 

Nilameka Perumal Temple Vaikasi Visakha Pramorsava festival

 

இந்நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். தேரானது பழைய ஆஸ்பத்திரி சாலை, பஜனை மடம், ஆண்டார் வீதி, அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

 

 

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.