Skip to main content

நூறாண்டுகளுக்கு ஒரு கொள்ளை நோய்; பதிகம் பாடி மக்களை குணப்படுத்திய திருஞானசம்பந்தர் 

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மக்களின் காய்ச்சலை பதிகம் பாடி திருஞானசம்பந்தர் குணப்படுத்தியது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

கரோனா என்ற கொள்ளை நோயினால் லட்சக்கணக்கான மக்கள் மரணத்தின் மடியில் விழுந்துவிட்டார்கள். இன்னார் இனியார் என்ற பேதமில்லாமல் இந்த நோய்க்கு ஆளாகி அஸ்தமானவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக வரவில்லை. நூறாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கொள்ளை நோய் வருவதையும் மக்கள் கொத்துக்கொத்தாக மடிவதையும் வரலாற்றில் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் காலரா வந்தது. ஒரு காலத்தில் ஃபிளேக் வந்தது. இப்படி கொள்ளை நோய் வருவதும் மக்கள் சாவதும் இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இப்போது வந்த கொள்ளை நோய் வெறும் காய்ச்சல்தான். காய்ச்சல் வந்தவுடன் இருமல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறுகிறான். நுரையீரல் பழுதுபடுகிறது. செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டும் பயனில்லாமல் உயிர் போய்விடுகிறது. 

 

சமயக்குறவர்களில் முதல் குறவரான திருஞானசம்பந்தர், கொங்கு நாட்டில் உள்ள திருச்செங்கோடு என்ற இடத்திற்கு செல்கிறார். அங்கே இருக்கும் இறைவன் அர்த்தநாரியாக இருக்கிறான். சிவபெருமான் அம்பாளுக்கு உடலில் பாதி இடத்தை கொடுத்தார். பிரம்மா நாக்கிலே இடம் கொடுத்தார். திருமால் மார்பில் இடம் கொடுத்தார். இப்படி பக்தியிலும் இடஒதுக்கீடு இருந்தது. அர்த்தநாரீஸ்வரரை வணங்கிய திருஞானசம்பந்தர், கோவிலிலேயே அமர்ந்திருக்கிறார். அங்கு யாரையும் காணவில்லை. பின் விசாரித்ததில் ஊரில் உள்ளவர்கள் அனைவருக்கும் சுரம் வந்திருக்கிறது. அதனால் அவர்களால் கோவிலுக்கு வரமுடியவில்லை என்பது தெரிகிறது.

 

இந்த ஊர் மக்களுக்கு இருக்கும் நோய் உடனே தீரவேண்டுமென திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார். 


"அவ்வினைக் கிவ்வினை யாமென்று 
  சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் 
  உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் 
  போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ
  றாதிரு நீலகண்டம்..."

 

இந்தப் பதிகத்தை அவர் பாடியதோடு மட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களையும் பாடச் சொல்கிறார். பின்னர், சுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு, ஆரோக்கியம் பெற்றுவிட்டார்கள் என்று செய்தி திருஞானசம்பந்தருக்கு வருகிறது. காய்ச்சல் வந்தால் இந்தப் பதிகம் பாடினால் காய்ச்சல் தீரும் என்ற நம்பிக்கை சைவர்கள் மத்தியில் இன்றைக்கும் உள்ளது. அதை அவர்கள் மேற்கொண்டும் வருகிறார்கள். திருஞானசம்பந்தர் நின்று பதிகம் பாடிய இடத்தில் உள்ள இறைவனை ஜுரேஸ்வரர் என்று அழைக்கின்றனர். கரோனா என்பது கொள்ளை நோயாக இருந்தாலும் சம்பந்தர் பாட்டு பாடினால் காய்ச்சல் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை சைவ பெருமக்கள் மத்தியில் இன்றும் உள்ளது.

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.