Skip to main content

"நல்ல நேரம் பார்ப்பதை ஆறாம் நூற்றாண்டிலேயே எதிர்த்த திருஞானசம்பந்தர்" - நாஞ்சில் சம்பத் பகிரும் தமிழர் வரலாறு 

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நல்ல நேரம் பார்ப்பதை 10 வயது சிறுவனாக இருந்தபோதே திருஞானசம்பந்தர் எதிர்த்தது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

தமிழர்களின் வரலாற்றில் சமயகாலம் என்கிற காலம் கல்வெட்டுபோல பல செய்திகளை உலகத்திற்கு தந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு அவை நடைமுறைக்கு வருமா என்று யோசித்துப் பார்ப்பதற்கு முன்னால் அந்தச் சமய கால சரித்திரத்தில் என்ன நிகழ்ந்தது என்று எண்ணிப் பார்ப்போம். இன்றைக்கு குறி கேட்காத ஆட்களே இல்லை. ஜாதகம் பார்ப்பதற்கு என்று ஜோதிடசாலைகள் இன்று நிறைந்துள்ளன. காலையில் தொலைக்காட்சியை ஆன் செய்தால் ஜோதிடர் என்ற பெயரில் நமக்கு நல்ல நேரம் இருக்கிறதா இல்லையா என்று சிலர் சொல்கிறார்கள். இதைப் பார்ப்பதற்கென்று அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் பிரத்யேகமாக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதை நம்பலாமா என்று கேட்டால் அது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. நல்ல நாள் பார்ப்பதும், நல்ல நேரம் பார்ப்பதும் வாழ்க்கைமுறை ஆகிவிடும் என்றால் இன்றைக்கு உள்ள உலகத்தில் வாழ்வதற்கே நாம் தகுதியற்றவர்களாக மாறிவிடுவோம். அடிபட்டு ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபோது அறுவை சிகிச்சை செய்வதற்கு நல்ல நேரம் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. 

 

இறைவன் மீது நம்பிக்கை வைத்து இயங்கியவர்கள் நல்ல நாள் பார்த்துதான் அனைத்தையும் செய்தார்களா என்றால் இல்லை. நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டியதில்லை என்று அன்றைக்கே அவர்கள் புரட்சி செய்துள்ளார்கள். இன்றைய வேதாரண்யமும் அன்றைய திருமறைக்காடுமான திருத்தலத்தில் பாட்டு பாடினால் கதவு திறக்கிறது. திறந்த கதவை மூடுவதற்கு மீண்டும் பாட்டு பாடினார்கள். அந்தப் பாடலைப் பாடியவர்கள் அப்பரும் சம்பந்தரும்தான். அப்போது திருஞானசம்பந்தர், நான் மதுரைக்கு புறப்படுகிறேன் என்று திருநாவுக்கரசரிடம் கூறுகிறார். அதற்கு திருநாவுக்கரசர் இன்றைக்கு நாளும் கோளும் சரியில்லை என்பதால் மதுரைக்கு போகவேண்டாம் என்கிறார். 

 

'வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே னுளமே புகுந்தவதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே' என்ற பதிகத்தை பாடிவிட்டு புறப்பட்டால் நாளும் கோளும் என்னை எதுவும் செய்யாது என்று ஞானசம்பந்தர் கூறுகிறார். இறைவனை நம்பி பயணத்தை தொடங்கியவனுக்கு எதிரில் வருவதெல்லாம் வெளிச்சமாகத்தான் இருக்குமேயொழிய இருள் சூழ்வதற்கு வாய்ப்பேயில்லை என்று அவர் நம்பினார். 

 

 

 

மதுரைக்கு போகாதே என்று சொல்லும் திருநாவுக்கரசருக்கு வயது 90. மதுரைக்கு கிளம்பிய திருஞானசம்பந்தருக்கு வயது 10. இறைவன் மீது கொண்ட நம்பிக்கையின் உச்சமாக திருஞான சம்பந்தர் இருந்திருக்கிறார். விண்ணிலிருந்து மண்ணுக்கும் மண்ணிலிருந்து விண்ணுக்கும் ஏவுகணையை ஏவுகின்ற இன்றைய காலத்திலும்கூட, செவ்வாய் கிரகத்தில் வாழ முடியும், வசிக்க முடியும் என்று அறிவியல் நிரூபித்துக்கொண்டிருக்கிற இன்றைய காலத்திலும்கூட நாம் நாளும் கோளும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வெளியே செல்வதற்கு நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், ஆறாம் நூற்றாண்டிலேயே நாளும் கோளும் எதுவும் செய்யாது நான் பயணத்தை தொடங்குகிறேன் என்று ஞானசம்பந்தர் புறப்பட்டார் என்றால் அதற்கு இறைவன் மீது அவர் கொண்ட நம்பிக்கைதான் காரணம்.

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.