
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தின் எல்லையில் பெரிய குளத்திற்குள் எழுந்தருளியுள்ள கிராமத்தின் காவல் தெய்வங்களில் ஒன்றான பிடாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. மொத்த கிராமமும் ஒன்று கூடி எல்லைக் காவல் தெய்வம் பிடாரியம்மனை குளிர்விக்க வேண்டும் என முடிவு எடுத்தனர். அதன்படி, மண்சட்டிகளில் நவதானிய விதை தூவி விரதமிருந்து வளர்க்கப்பட்ட முளைப்பாரியை ஆயிரக்கணக்கான பெண்களும் ஒன்றாக பிடாரியம்மன் கோயிலுக்குக் கொண்டு வந்து குளத்தில் விட்டு அம்மனை வழிபடும் நிகழ்வு கடந்த வாரம் நடந்தது.

அதே போல திங்கள்கிழமை(5.8.2024) இரவு கால்நடைகளை நோய்நொடியிலிருந்து காக்க வேண்டும் என்று வேண்டுதல் உள்ள கிராமத்தினர் பலர் ஆண்கள் மட்டும் இரவு நேரத்தில் பொங்கல் வைத்துப் படையலிட்டு மது எடுத்து கோயிலைச் சுற்றி வரும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மொத்த கிராமத்தினரும் தங்கள் வீடுகளில் அலங்கரித்து வைத்திருந்த பாளைக்குடங்களில்(நெல் நிரப்பி) தங்கள் குலதெய்வம் கோயில்களில் வைத்துக் கும்மியடித்து மங்கல வாத்தியங்கள், வானவேடிக்கை என ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாகக் கொண்டு வந்தனர்.

இதே போல கிராமத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பாளைக்குடங்கள் கொண்டுவரபட்டது. அவற்றை எல்லாம் ஒன்றிணைத்து பெண் வேடமணிந்த பூசாரி ஒருவர் பாளைக்குடத்தை தூக்கிக்கொண்டு முன்னே வர, ஆயிரக்கணக்கானோர் பெண்கள் பாளைக்குடங்களை தூக்கிக்கொண்டு பின்னால் வந்தனர். உற்சாக முழக்கங்களோடு ஆடிப்பாடி கோயில் குளக்கரையைச் சுற்றி வந்து பெண்கள் கோயிலைச் சுற்றி பாளைகளை வைத்து வழிபட்டுச் சென்றனர்.

கோயிலைச் சுற்றிப் பல இடங்களிலும் பெண்கள் பாளைக்குடங்களுடன் கும்மியடித்தது நிகழ்வு பொதுமக்களைக் கவர்ந்தது. மேலும், பிடாரியம்மனுக்கு சந்தனக்காப்பு வைத்துச் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.