Skip to main content

சித்திரைத் திருவிழாவிற்கு பிடிமண் எடுத்துக் கொடுத்த யானை; தென் மாவட்ட அதிசயம்!

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

elephant that took soil to Chithirai festival

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரில் ஸ்ரீசங்கரநாராயண சுவாமி உமாமகேஸ்வரி கோமதியன்னை அருள் பாலிக்கிற பிரசித்தி பெற்ற சங்கரநாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது. மூன்று மிகப் பெரிய சன்னிதானங்களுடன் கூடிய சங்கரநாராயணர் ஆலயம் தென் மாவட்டத்தில் சிறப்புகளைக் கொண்டது.

 

ரத்தக் களறியாய் மோதிக் கொண்டிருந்த சைவ வைணவ பக்தர்களுக்கு, அரியும் சிவனும் ஒன்றே என்பதை உணர்த்த தன் உடலில் ஒரு பகுதி சங்கரராகவும் மறு பகுதி நாராயணராகவும் ஒருசேர உருவெடுத்து பக்தர்களுக்கு சிவபெருமான் திருக்காட்சி கொடுத்து ஒற்றுமைப்படுத்திய தலம் சங்கரன்கோவில். இந்த ஆலயத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம், சித்திரை பிரமோற்சவ திருவிழா வெகு விமரிசையாக 48 நாட்கள் நடைபெறுவது வழக்கம் அனுதினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில்.அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவது சிறப்பு.

 

சித்திரைத் திருநாளின் முக்கிய நிகழ்வாக நேற்றைய தினம் திருக்கோயில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி. இதையடுத்தே முக்கிய நிகழ்வுகள், விழா நடக்கும். யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு திருக்கோவிலிலிருந்து கோமளாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி அலங்காரத்துடன் பெருங்கோட்டூரிலுள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலுக்கு எழுந்தருளினார். பின்னர் சிறப்பு அலங்காரம். அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடந்தது. அதன் பின் மதியம் ஒரு மணிக்கு திருக்கோவில் யானை கோமதி அங்கு பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

 

யானை பிடிமண் கொடுத்த வரலாறு;

பரணி நதிக்கரையின் நெல்லையின் மேற்குப் புறமுள்ள மணலூரில் அரசாண்ட உக்கிரபாண்டிய மன்னர் அடிக்கடி மதுரை சென்று அன்னை மீனாட்சியையும் சொக்கநாதரையும் வழிபடுவது வழக்கம். சங்கரன்கோவிலிருந்த புன்னைவனத்தை காவல் காத்த காவற்பறையன் ஒரு தடவை அங்கிருந்த புற்றை அகற்றும் பொருட்டு வெட்டியபோது அதிலிருந்த பாம்பின் வால் அறுபட, புற்றினுள்ளே இருந்த சிவலிங்கத்தையும் கண்டார். அதே சமயம் மதுரை சென்று கொண்டிருந்த உக்கிரபாண்டியரின் யானை மேற்கொண்டு நகராமல் தன் கொம்பினால் தரையைக் குத்திக் கொண்டு புரள அது கண்டு மன்னர் புரியாமல் திகைத்தார். அதே சமயம் காவற்பறையனும் அரசரிடம் நடந்ததை தெரிவிக்க, பதற்றமாய் புன்னைவனம் வந்த மன்னர் சிவலிங்கத்தையும் வால் அறுபட்ட பாம்பினையும் கண்டார் அது சமயம் சங்கரனார் அசரீரியாய் ஆணையிட உக்கிரபாண்டிய மன்னர் புன்னைவனத்தை செம்மைப்படுத்தி கோயில் கட்டி சங்கரன்கோவில் ஊரையும் தோற்றுவித்திருக்கிறார். யானை கொம்பினால் குத்திய இடம் பெருங்கோட்டூர் என்று உருவானது.

 

இதையடுத்தே சித்திரை மாதத்திலே இறைவனைக் காண காரணமாயிருந்த பெருங்கோட்டூர் சென்று யானை மூலம் பிடிமண் எடுத்து தரவைத்து அதனைக் கொண்டு வந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்து வழிபட்டார். அந்த அரிய அதிசய நிகழ்வே சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.