Skip to main content

பக்தர்களுக்குத் தடை! அடிவாரத்தில் வழிபட்டு செல்லும் முருக பக்தர்கள்!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

Ban on devotees! Murugan devotees worshiping at the foothills!

 

தமிழகத்தில் கரோனா மீண்டும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டு தலங்களில் மக்கள் ஒன்றாக சேர்ந்து வழிபட தடை விதித்துள்ளது. வருகிற 30ஆம் தேதி வரை இந்த தடை இருக்கும் என்றும், கோயில்களின் தினசரி பூஜைகளை கோயில் ஊழியர்கள் செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் அனுமதி தடை செய்யப்பட்டு, பூஜைகள் மட்டும் நடந்துவருகிறது. 

 

இந்தநிலையில், ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி, கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக காவடி எடுத்தும், தீர்த்தக் கலசம் எடுத்தும் வருகை தருவார்கள். ஆனால், அரசின் வழிகாட்டுதல் படி தற்போது கரோனா காரணமாக பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகிய பகுதிகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், பழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடனுடன் வந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே முக்கிய நாட்களில் மட்டும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. 

 

அதேபோல், நேற்று (26.04.2021) சித்ரா பவுர்ணமி நாள் என்பதால் பழனி கோவிலுக்கு அதிகமாக முருக பக்தர்கள் வந்தனர். அவர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபட்டுச் சென்றனர். மேலும் அங்கேயே தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி செல்கிறார்கள். இதனால் தினசரி அடிவாரப் பகுதியில் காலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

 

 

Next Story

'பஞ்சாமிர்தத்தில் அரசியல்' - குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கோவில் நிர்வாகம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 'Politics in Panjamirtham'-Temple administration responds to allegation

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தத்தை கோவில் நிர்வாகம் விற்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயிலில் தொடர்ந்து சர்ச்சையான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கோவிலைச் சுற்றியுள்ள சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகற்றப்பட்டதால் போராட்டம், நீதிமன்ற வழக்குகள் என அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலாவதியான பஞ்சாமிர்தம், கோவில் நிர்வாகத்தாலே விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் கோவில் மலை மீதுள்ள விற்பனை நிலையங்களில் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான லாரியில் 30க்கும் மேற்பட்ட  கேன்களில் அடைத்து வைக்கப்பட்ட பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதனை பார்த்த ஒரு தரப்பினர் லாரியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்படுகிறதா? அல்லது வேறு இடங்களுக்கு பஞ்சாமிர்தம் கடத்தப்படுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். உடனடியாக அங்கு வந்த அடிவாரம் காவல் நிலைய போலீசார், லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், 'விழாக் காலங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அதிகப்படியான பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் மீதமான காலாவதியான பஞ்சாமிர்தங்களை பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கக் கூடாது என்பதால் பெரிய கேன்களில் நிரப்பி அதை கோசாலைகளுக்கு எடுத்துச் சென்று அழிப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இதை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற சிலர், குறிப்பாக ஆக்கிரமிப்பு காரணத்தால் அகற்றப்பட்டவர்கள் கோவில் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

“பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வோம்” - மிரட்டலால் கதறும் குடும்பம்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
 owner who imprisoned and tortured family members who came to work in Palani

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ளது மேலச்சேரி. இந்தப் பகுதியில் உள்ள மதுரா இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கு 26 வயதாகிறது. இவரது மனைவி ரேணுகா. இவருக்கு 20 வயது ஆகிறது. செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் இந்தத் தம்பதிகள், வெளியூருக்குச் சென்று செங்கல் தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, பார்த்திபன், ரேணுகா, ரேணுகாவின் தந்தை நாகப்பன் இவர்களுடன் அவரது உறவினரான சித்தி, சித்தப்பா மேலும் ஒருவர் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்டோர் செங்கல் தயாரிக்கும் பணிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, இந்த 6 பேரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான சேம்பரில் வேலையில் சேர்ந்துள்ளனர். இந்தச் சேம்பரில் நாள் ஒன்றுக்கு கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து 800 ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதற்கு தம்பதியரும் சம்மதம் தெரிவித்து வேலை செய்து வந்துள்ளனர். 

இப்படியே கடந்த ஐந்து மாதங்களாக 6 பேரும் கடுமையாக வேலை செய்துள்ளனர். இந்நிலையில், செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த ரேணுகாவின் சித்தப்பா மற்றும் சித்தி இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஊருக்கு சென்று உடம்பை கவனித்து விட்டு வருவதாக கூறிவிட்டு ஊருக்கு சென்றுள்ளனர். ஊருக்குச் சென்றவர்கள் ஒரு வார காலமாகியும் செங்கல்சூளை வேலைக்கு திரும்ப வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த செங்கல் சூளை உரிமையாளர், பார்த்திபன் மற்றும் அவரது மனைவி ரேணுகா இருவரையும் அழைத்து, ஊருக்கு சென்ற உங்களின் உறவினர்கள் உடனடியாக வரவேண்டும். இல்லை என்றால், உங்களை உண்டு இல்லையின்னுனு பண்ணிடுவோம் என மிரட்டியுள்ளார். ஆனால், அவர்கள் இவ்வாறு கூறிய மறுதினமும் ஊருக்கு சென்றவர்கள் வரவில்லை. இதனால், மேலும் ஆத்திரமடைந்த செங்கல் சூளை உரிமையாளர், மறுபடியும் ரேணுகாவை அழைத்து, உடனே உங்களின் சித்தப்பா, சித்தி வேலைக்கு வரவில்லை என்றால் உங்களை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வோம் என்று கூறி மிரட்டியுள்ளார்.

மிரட்டியதோடு இல்லாமல், அவர்களுடன் வேலை பார்க்கும் அஜித் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் ஏவி விட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ரேணுகா முகம் முழுவதும் வீக்கத்தோடும், கண் திறக்கமுடியாத அளவுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது கணவரான பார்த்திபனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அங்கிருந்து தப்பித்து மருத்துவமனைக்கு சென்ற தம்பதிகள், போகும் வழியில் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற தங்களை, உறவினர்கள் ஊருக்கு சென்று விட்டார்கள் எனக் காரணம் காட்டி கொடூர தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அழுதுகொண்டே வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியிருக்கிறது. அப்போது, இந்த வீடியோவைப் பார்த்த  கொத்தடிமைகள் மீட்பு குழுவைச் சேர்ந்த கோவிந்தராஜ் அவர்களுக்கு தொடர்பு கொண்டுள்ளார். பின்னர், அவர்களை முதலில் அங்கிருந்து மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். 

இதற்கிடையில் இந்தத் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற செங்கல் உரிமையாளர், மறுபடியும் தம்பதியரை விரைவில் வேலைக்கு வரவேண்டும் எனக்கூறி மிரட்டியிருக்கிறார். இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் பலத்த காயத்தோடு சிகிச்சைப் பெற்று வரும் ரேணுகாவிடம் கேட்ட போது, நடந்த அனைத்தையும் விபரமாக கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நான் இந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் போதும், அரசு மருத்துவ மனைக்கு வந்த உரிமையாளர், விரைவில் பணிக்கு வரவில்லை என்றால் பண்ணை வீட்டில் வைத்து மீண்டும் சித்திரவதை செய்வோம் என்று தைரியமாக மிரட்டிச் சென்றதாக கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். இது குறித்து சாமிநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.