Skip to main content

திருச்செந்தூர் கோயில் சேர்மனாக அருள்முருகன் தேர்வு

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

Arulmurugan chosen as chairman of Tiruchendur Temple!

 

தமிழகத்தின் பிரபலமான கோயில்களில் ஒன்று திருச்செந்தூர் முருகன் கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் மிக முக்கியமானது திருச்செந்தூர். இந்தக் கோயிலின் அறங்காவலர் பதவிகள் நிரப்பப்படாமல் இருந்தன. 

 

இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலின் அறங்காவலர்களாக 5 நபர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பாக இழுபறி இருந்த நிலையில், அதனை முடிவுக்கு கொண்டு வர அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி, தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில்முருகன், அனிதாகுமரன், ராமதாஸ், கணேசன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அருள்முருகன் ஆகியோரை நியமித்து அதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார் இந்து சமய அறநிலைய துறையின் முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ்.

 

இந்து சமய அறநிலைக் கொடைகள் சட்டத்தின்படி இவர்களது பதவி காலம் 2 ஆண்டுகள். அறங்காவலர்களாக பதவியேற்றதற்கு பிறகு 30 நாட்களுக்குள் தங்களுக்கான தலைவர் ஒருவரை (ட்ரஸ்டி சேர்மன்) தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், சேர்மன் பதவியைக் கைப்பற்ற 5 பேரும் பல்வேறு முயற்சிகளில் இறங்கினர். இந்த நிலையில், அறங்காவலர் குழுவின் தலைவராக (ட்ரஸ்டி சேர்மன்) சென்னையைச் சேர்ந்த அருள் முருகனை ஒருமனதாக தேர்வு செய்திருக்கிறார்கள் ட்ரஸ்டி உறுப்பினர்கள். 

 

 

Next Story

திருச்செந்தூரில் கொட்டித்தீர்த்த மழை

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
 Heavy rain in Tiruchendur

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வரலாறு காணாத அதி கன மழைப்பொழிவை ஏற்படுத்திய வளிமண்டல சுழற்சி தற்பொழுது விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி காயல்பட்டினத்தில் 21 சென்டிமீட்டர் மழை இன்று பதிவாகியுள்ளது. நேற்று 95 சென்டி மீட்டர் மழை காயல்பட்டினத்தில் பதிவாகிய நிலையில் இன்று 21 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 23.1 சென்டி மீட்டர் மழையும், குலசேகரப்பட்டினம் 18.4 சென்டி மீட்டர், ஸ்ரீவைகுண்டம் 17.4 சென்டி மீட்டர், சாத்தான்குளம் 15.6  சென்டி மீட்டர் தூத்துக்குடி 13.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Next Story

தொடர் கனமழை; 1000க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் அவதி

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Continuous heavy rain; More than 1000 train passengers suffered

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நேற்று சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அதே சமயம் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், தண்டவாளம் சேதம் காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதியடைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ரயிலில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரயில்வே தரப்பில் இருந்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.