![world peace nobel prize for 2020](http://image.nakkheeran.in/cdn/farfuture/6j33XR8Qcum_JLOWcuTW1nce8mm0AxY-XK2OzURSUrw/1602236003/sites/default/files/inline-images/hjcg.jpg)
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்துக்கு பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் விருதில், இந்த ஆண்டு 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் விருதிற்காக போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இத்தாலி நாட்டின் ரோம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் 83 நாடுகளில் 91 மில்லியன் மக்களுக்கு இந்த அமைப்பு உணவு உதவி வழங்குகிறது.
இதேபோல இந்த ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு வழங்கப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இமானுவேல் சர்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டோட்னா ஆகியோருக்கு மரபணு திருத்த முறையை உருவாக்கியதற்காக வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை ஹார்வே ஜே ஆல்டர், மைக்கேல் ஹாங்டன், சார்லஸ் எம் ரைஸ் ஆகியோரும், இயற்பியலுக்கான நோபல் பரிசை ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்ட் ஜென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோரும் பெறுகின்றனர்.