Skip to main content

“மாநில முதல்வர்கள் இருவர் இலங்கைக்கு வருவதை உறுதி செய்துள்ளனர்” - இலங்கை துணைத் தூதர் வெங்கடேஸ்வரன்! 

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

"Two Chief Ministers have confirmed their arrival in Sri Lanka" - Sri Lankan Deputy Ambassador Venkateswaran!

 

இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார் டி. வெங்கடேஸ்வரன். இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவருக்கும் நெருங்கிய நண்பர் இவர். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரனின் இந்த நியமனமும், தமிழ்நாட்டில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்ததை நக்கீரன் விரிவாக எழுதியிருந்தது.

 

இந்த சந்தேகங்கள் தொடர்பான கேள்விகளை வெங்கடேஸ்வரனிடமே முன்வைத்தோம்.

 

இந்தியாவிற்கான துணைத்தூதர் என்கிற முக்கியப் பதவியில் நீங்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் அடிப்படை நோக்கம் என்ன?
 

நான் ஒரு தமிழன். என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகள் அனைத்தும் தமிழகத்தில்தான். இலங்கை அரசு நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பும் எனக்கு கொடுக்கப்பட்டது. தற்போது, இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலிமைப்படுத்தவும், வர்த்தக ரீதியிலான முன்னேற்றத்தை மேம்படுத்துவதுமே எனது நியமனத்தின் அடிப்படை நோக்கம்.

 

துணைத் தூதர் என்பவர் வர்த்தகரீதியிலான உறவுகளை மேம்படுத்துவது எப்படி சாத்தியம்?
 

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் இலங்கைக்கான துணைத்தூதராக நான் பொறுப்பில் இருக்கிறேன். பொறுப்பேற்றுக்கொண்ட 6 மாதங்களில் மேற்சொன்ன 5 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் அரசு முறையாக பயணம் செய்து இலங்கையில் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளை துவக்கியிருக்கிறேன். இதற்காக மாநில முதல்வர்களையும், மாநில ஆளுநர்களையும் சந்திக்கும் எனது முயற்சி வெற்றியடைந்துவருகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். விரைவில் பல வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வர்த்தக உறவுகளைக் கடந்து அரசியல் ரீதியிலான உறவுகளும் வலிமை பெறும். அரசு பங்களாவில் அமர்ந்து கொண்டு தொலைபேசி அழைப்புகளை ஏற்பது மட்டுமே எனது பணி அல்ல!

 

இந்தியா - இலங்கைக்கான நல்லுறவை வளர்ப்பதற்கு என்ன செயல் திட்டம் உங்களிடம் இருக்கிறது?
 

தென்னிந்தியாவின் வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் காலூன்றும்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அரசியல் உறவும் புரிந்துணர்வும் பலமாகும். தென்னிந்தியத் திருத்தலங்களைத் தரிசிக்க இலங்கை மக்கள் விரும்புகின்றனர். அதேபோல, இலங்கையில் தமிழ்க் கடவுள் முருகனின் திருத்தலமான நல்லூர், கதிர்காமத்திற்கு யாத்திரை வர தமிழகம் விரும்புகிறது. அதனடிப்படையில் அரசியல், வர்த்தகம், ஆன்மீகம், கல்வி, சுகாதாரம் சார்ந்த பணிகளுக்கான திட்டங்களை செயல்படுத்துவதே இலங்கையின் நோக்கம். 

 

வெளியுறவுத்துறையில் அனுபவமிக்க அரசு அதிகாரிகளைத்தான் துணைத்தூதராக நியமிப்பது வழக்கம். ஆனால், சிலபல அரசியல் காரணங்களுக்காக வர்த்தகப் பின்னணி கொண்ட உங்களை நியமித்ததில் சட்ட நெறிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

இந்தியாவில் இலங்கைக்கான 3 உயர் தூதரகங்களில் பிரதான தூதரகம் டெல்லியிலும், துணைத்தூதரகம் சென்னை, மும்பை நகரங்களிலும் இயங்குகின்றன. இந்த 3 தூதரகங்களிலுமே அரசியல் ரீதியிலான செயல்பாடுகளில் அனுபவமிக்கவர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நான் ஒரு தமிழன். அந்த வகையில் தமிழகம் உள்ளடக்கிய தென்னிந்தியாவின் அரசியலையும், வர்த்தகச் சூழல்களையும் புரிந்துகொண்டவன் என்ற அடிப்படையில் இந்தப் பதவியில் என்னை நியமித்திருக்கிறார்கள். இதில், எந்த சட்டநெறிமுறைகளும் மீறப்படவில்லை.

 

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுற்று கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள், வாழ்வாதார பிரச்சனைகளுக்கான தீர்வு இன்னும் மறுக்கப்பட்டே வருகிறதே? 
 

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு தமிழினத்திற்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் மாகாணத் தேர்தல்கள் நடக்கும். தமிழர்களுக்கான அரசியல் ஜனநாயக உரிமைகள் கிடைக்கும். ஐ.நா. பொதுச்செயலாளரை ஜனாதிபதி சந்தித்தபோது கூட தமிழர்களுக்கான உரிமைகள் குறித்து உறுதி செய்திருக்கிறார்.


இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் சீனாவிடம் இலங்கையின் இறையாண்மை அடகு வைக்கப்பட்டிருப்பதாக வரும் குற்றச்சாட்டுகளில் உங்கள் பார்வை?


ஒப்பீட்டளவில் கணக்கிட்டால், கரோனாவால் பொருளாதார பாதிப்பு இல்லாமல் செயல்பட்டிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி. மக்களுக்கான அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதில் இருந்த தடைகளும் தகர்க்கப்பட்டன. போர்ச் சூழலில் கூட பொருளாதாரம் பாதிக்காத நிலையில், இப்போது எந்த நெருக்கடியும் இலங்கைக்கு இல்லை. அதனால் சீனாவிடம் அடகு வைக்கப்பட்டதாகச் சொல்வது ஏற்புடையதல்ல.

 

ad

 

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவது இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என்கிறார்களே?
 

சீனா மட்டுமல்ல கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் வர்த்தகம் இலங்கையில் உண்டு. இந்தியாவும் பல ஆண்டுகாலமாக இலங்கையில் வர்த்தக உறவை வலிமையாகத்தான் வைத்திருக்கிறது. நான் சந்தித்த இந்திய மாநில முதல்வர்களும் கவர்னர்களும் கூட இலங்கை - சீனாவிற்கான உறவுகளைப் பற்றி என்னிடம் விவாதித்தனர். அவர்களிடம், வர்த்தக உறவுகளைக் கடந்து சீனாவிடம் எந்த நெருக்கமும் இலங்கைக்கு இல்லை, சீனாவை போலவே இந்தியாவின் முதலீடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்பதைச் சொல்லியிருக்கிறேன். அதனையேற்று, மாநில முதல்வர்கள் இருவர் இலங்கைக்கு வருவதை உறுதி செய்துள்ளனர். ஆக, இந்திய - சீன உறவுகள் சுமுகமாக இல்லாததால்தான் அச்சுறுத்தலாக தோற்றமளிக்கிறதே தவிர, இலங்கையிலுள்ள சீனாவின் முதலீடுகளால் எந்த அச்சுறுத்தலும் இந்தியாவுக்கு கிடையாது.

 

சீனாவிற்காக இந்தியாவை உளவு பார்க்கவே இலங்கையால் நீங்கள் நியமிக்கப்படுவதாக சொல்லப்படுகிறதே?


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான் இந்தியாவை உளவு பார்ப்பதாகச் சொல்வது கற்பனைக்கும் எட்டாத ஆதாரமற்ற பொய்யான பரப்புரை. அந்தப் பொய்களை வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய - இலங்கை உறவை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது மட்டுமே எனது பணி. இலங்கை - இந்திய உறவு வலுப்பெறும்போது எனது நியமனத்தின் பொருளை உணர்வீர்கள்.

 

அனல்மின் நிலையங்களையும் துறைமுகங்களையும் நீங்கள் ஆய்வு செய்ததிலிருந்துதான் உளவு விவகாரம் தலைதூக்குகிறது?
 

காரைக்கால் - தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்து, வர்த்தகரீதியாக வெற்றிபெறாததால் அந்த திட்டம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் இலங்கை பிரஜைகள் தாயகம் திரும்ப கப்பல் போக்குவரத்தை எதிர்பார்க்கிறார்கள். வர்த்தகரீதியிலான சரக்கு போக்குவரத்தும் சுற்றுலா வர்த்தகமும் அதிகரிக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. அதனால், இடைநிறுத்தம் செய்யப்பட்ட கப்பல் போக்குவரத்தை துவக்க முடியுமா என புதுச்சேரி முதல்வர் மற்றும் ஆளுநரின் அனுமதியின் பேரிலேயே துறைமுகத்திற்குச் சென்று பார்த்தேன். அதேபோல, தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான ஒரு அனல்மின் நிலையத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக முந்தைய பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையை நடத்த அங்கு சென்றேன். மற்றபடி, அரசு துறைமுகத்தை நான் ஆய்வு செய்யவில்லை. அதேபோல, இலங்கை ஜனாதிபதியின் இயற்கை உரம் பற்றிய அக்கறையால், அந்த தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனமான கோத்தாரி சுகர்ஸில் சிறப்பாக இருப்பதையறிந்து பார்வையிடச் சென்றேன். அதனால், தமிழகத்தில் எனது ஆய்வு என்பது வர்த்தகம் தொடர்பானதே தவிர வேறு எந்த காரணங்களுக்கும் கிடையாது.

 

கோவை வேளாண் பல்கலையிலும் இலங்கையின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
 

விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகிய வேளாண் தொடர்பான விசயங்களில் சர்வதேச தரத்திலான தொழில்நுட்பம், தென்னிந்தியாவில்தான் இருக்கிறது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருக்கும் தொழில்நுட்பங்களை இலங்கை தொழிலதிபர்களுக்கு அறிமுகப்படுத்தும் கலந்துரையாடல்களுக்கு தமிழக ஆளுநரின் அனுமதி பெறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வல்லுநர்கள் இலங்கைக்கு வந்து அங்குள்ள விவசாய வல்லுநர்களுக்கு வகுப்புகள் எடுக்க அனுமதி தந்துள்ளார் தமிழகத்தின் முன்னாள் ஆளுநர். தற்போது புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றிருப்பதால் அவரை சந்தித்து இதனை வலியுறுத்தவிருக்கிறேன்.  

 

உங்களின் எதிர்கால செயல் திட்டங்கள் என்ன?


தென்னிந்தியாவின் முதலீட்டாளர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு ஏதுவாக, முதலீட்டாளர் குழு ஒன்றை எனது தலைமையில் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளேன். இதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தொழில் துவங்குவதற்கான சூழல்களை உருவாக்க வேண்டும். இலங்கையின் ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டுதலில் இதனை செய்துவருகிறேன். தொழில் துவங்க இலங்கை ஒரு வளமான நாடு என்பதை நிலைநிறுத்துவதே எனது செயல்திட்டம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.