
டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள உலகில் சக்தி வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில் ஷாஹீன்பாக் போராட்டத்தில் பங்கேற்ற 82 வயதான மூதாட்டி பில்கிஸ், பிரதமர் மோடி உட்பட ஐந்து இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற டைம்ஸ் இதழ், ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சக்திவாய்ந்த 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, நடிகர் ஆயுஷ்மான் குரானா, சுந்தர் பிச்சை ஆகிய பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களைத் தவிர, எய்ட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் எய்ட்ஸ் நோயாளி ஒருவரைக் குணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய மருத்துவர் ரவீந்திர குப்தா இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மேலும், இந்தப் பட்டியலில் ஷாஹீன்பாக் போராட்டத்தில் பங்கேற்ற 82 வயதான மூதாட்டி பில்கிஸ் இடம்பிடித்துள்ளார். டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.