Skip to main content

லண்டன் ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு! 

Published on 18/09/2022 | Edited on 18/09/2022

 

President Draupadi Murmu pays tribute to Queen Elizabeth of London!

 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் உயிரிழந்துள்ளார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர். பிரிட்டன் ராணி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு உலகத் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

ராணி எலிசபெத்தின் மறைவு குறித்தான இரங்கல் பதிவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எலிசபெத் ஒரு சகாப்தத்தைக் காட்டிலும் மேலானவர் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டாம் எலிசபெத் அவரின் தைரியம் மற்றும் கருணைக்காக உலகம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அந்த வகையில் இந்தியா சார்பில் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்கிறார். 

 

இதற்காக லண்டன் கிளம்பிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் லண்டனுக்கு சென்றடைந்தார். குடியரசுத் தலைவருடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினே குவாத்ரா உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இரங்கல் குறிப்பு புத்தகத்தில் கையெழுத்து இடுகிறார். அதன்பின்னர் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அளிக்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சி பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை நடக்கவிருக்கும் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே நாடு ஒரே தேர்தல்; குறைக்கப்படுகிறதா சட்டமன்ற ஆயுட்காலம்?

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Report recommendation for One Country One Election

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ளது. 

அந்த அறிக்கையில், ஒரே நேரத்தில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதில் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்தல்களை நடத்தும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மாநில அரசின் அனுமதி தேவை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

ஒரே நாடு ஒரே தேர்தலை வரும் 2029ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களின் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு உபகரணங்கள், மனிதவளம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுமாறு குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், ஒரே நேரத்தில் நடக்கும் முதல் தேர்தலுக்கு பிறகு, அனைத்து மாநில சட்டசபைகளின் பதவிக்காலம், அடுத்த மக்களவைத் தேர்தல் வரை இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்தப்பட்ட பின், மக்களவைத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கும் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, ஒற்றை வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் தயாரிக்க குழு பரிந்துரைத்துள்ளது. 

தொங்கு சட்டசபை, அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆட்சி கவிழ்ந்தால் மீதமுள்ள பதவிக் காலத்திற்கு இடைத் தேர்தல் நடத்தப்படும். மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல் முடிந்த அடுத்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. இது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒரு வேளை 2029ஆம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படுமானால், 2026, 2027 மற்றும் 2028ல் சட்டசபைத் தேர்தலை எதிர்க்கொள்ளும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளின் பதவிக்காலம் 3 ஆண்டு வரை மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story

புதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக குடியரசுத் தலைவர்; துவங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர்!

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
President for the first time in the new Parliament and Budget session started

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31-01-24) தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (01-02-24) மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ராமர் கோயில் திறப்பு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், குளிர்கால கூட்டத் தொடரின்போது 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அமலாக்கத்துறையினர் மீதான புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த வேண்டும் என எதிர்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, கடந்த ஆண்டு மே மாதம் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது. மேலும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதமர் மோடியே கட்டிடத்தை திறந்து வைத்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடியினர் என்பதாலேயே பாஜக தலைமையிலான மத்திய அரசு அவருக்கு அழைப்பு கூட விடுக்காமல் இருந்தது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர். அது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முதல் முறையாக புதிய நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார். மேலும், பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை வந்த குடியரசுத் தலைவரை பிரதமர் மோடி வரவேற்றார். மேலும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் முன்பு நாடாளுமன்ற ஊழியர்கள் செங்கோலை ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அலுவல்கள் தொடங்கப்பட்ட நிலையில், இன்று தான் முதல்முறையாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகை புரிந்து உரையாற்றினார். 

அப்போது அவர், “ புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தியது. நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது. அனைத்து கட்சியினரும் ஒத்த கருத்துடன் பயணிப்பார்கள் என நம்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டது பெருமைக்குரியது. வறுமையில் இருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கத்துடன் பயணித்து வருகிறோம்” என்று கூறினார்.