Skip to main content

நம்பர் - 1 பாடகியின் நாய்க் குட்டிகள் திருட்டு; திருடனுக்கு 21 ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்த நீதிமன்றம் 

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

- தெ.சு.கவுதமன்

Number 1 singer's puppies stolen; The court sentenced the thief to 21 years in prison

 

கடந்த 2018 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கான பாடலைப் பாடியவர்களில் ஒருவரான பிரபல பாப் பாடகி லேடி காகாவின் வளர்ப்பு நாய்களைத் திருடிய நபருக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி நீதிமன்றம், 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

 

ஃப்ரெஞ்ச் புல்டாக் வகை நாய்க்குட்டிகளுக்கு மவுசும் விலையும் அதிகம். இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதானால் நாய் ஒன்று 75,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகக்கூடியது. இந்த வகை நாய்கள் பெரிய பெரிய மில்லியனர்கள் வீடுகளில் மட்டுமே அவ்வளவு விலை கொடுத்து வாங்கி வளர்க்கப்படுகின்றன. இவற்றின் விலை காரணமாக, இவற்றைத் திருடி விற்பதற்கென்று திருட்டுக்கும்பல்களும் உண்டு.

 

Number 1 singer's puppies stolen; The court sentenced the thief to 21 years in prison

 

பிரபல பாடகி லேடி காகா தனது வீட்டில் ஆசியா, கோஜி, கஸ்டவ் என மூன்று ஃப்ரெஞ்ச் புல்டாக் வகை நாய்க்குட்டிகளை வளர்த்துவருகிறார். அந்த நாய்க்குட்டிகளைப் பராமரிப்பதற்கென ரேயான் பிஷ்சர் என்ற ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார். அவர் வழக்கம்போல், 2021 பிப்ரவரி 24ம் தேதி அதிகாலையில், லேடி காகாவின் வீட்டருகே, பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் வாக்கிங் அழைத்துச் சென்றபோது, ஜேம்ஸ் ஹோவர்ட் ஜாக்சன் என்பவர், அவரது இரண்டு நண்பர்களோடு சேர்ந்து அந்த நாய்களைத் திருட முயன்றுள்ளார். 

 

ஹோவர்ட் ஜாக்சன் வாக்கிங் செல்லும் பாதையிலேயே காரில் பின் தொடர்ந்து சென்றவர்கள், திடீரென காரிலிருந்து இறங்கி இரண்டு நாய்க்குட்டிகளை முதலில் பிடித்து காருக்குள் திணித்தனர். உடனே அவர்களை ரேயான் பிஷ்சர் தடுக்க முயலவே, அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவரது நெஞ்சின் ஓரத்தில் துப்பாக்கிக் குண்டு பாய, அலறித் துடித்தபடியே "யாராவது உதவுங்கள்... என்னைச் சுட்டுவிட்டார்கள்... நாய்களைக் கடத்திச் செல்கிறார்கள்" என்று கதறியிருக்கிறார். நிலைமை விபரீதமானதால், இரண்டு நாய்க்குட்டிகளோடு அவர்கள் எஸ்கேப்பானார்கள். ஆனால், இந்த திருட்டுச் சம்பவம் முழுவதும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. 

 

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிஷ்சர், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார். அவர்மூலமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போதுதான் கடத்தப்பட்ட நாய்க்குட்டிகள், பிரபல பாடகி லேடி காகாவுக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது. உடனே காவல்துறையினர் நாய்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துத் தேடியதில், ஜெனிபர் மெக்ப்ரைட் என்ற பெண்மணி, காணாமல்போன இரண்டு நாய்க்குட்டிகளையும் தானாகவே கொண்டு வந்து ஒப்படைத்ததோடு, தனக்கும் இந்த திருட்டுக்குமுள்ள தொடர்பை ஒப்புக்கொண்டார். அவர்மூலமாக, திருடர்கள் மூவரும் போலீசில் பிடிபட்டனர்.

 

இதுதொடர்பான வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி நீதிமன்றத்தில் நடைபெற்றதில், விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், முக்கிய குற்றவாளியான ஜாக்சனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர். அவருடன் வந்தவர்களான ஜெய்லின் வொய்ட் மற்றும் லாஃபயெட்டி வேலே என்ற இருவருக்கும் முறையே 6 ஆண்டுகள், 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 

நாய்க்குட்டிகளைத் திருடியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? பிரபலமானவங்க வீட்டு நாய்க்குட்டிகள்னா சும்மாவா பாஸ்?! 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்...” - எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
warns Donald Trump If I'm not elected president

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.