Skip to main content

18 பேர் பலி; அத்துமீறும் இராணுவம் - சர்வதேச சமூகத்தை வலியுறுத்தும் ஐ.நா!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

myanmar

 

மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது இராணுவம் கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இப்போராட்டத்தில் கலந்துகொள்ள முயன்ற உயர்நிலை கல்வி படிக்கும் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு சமூகவலைதளங்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தையும் மியான்மர் அரசு அறிவித்தது.

 

இந்தநிலையில், போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது, நேற்று (28.02.2021) மியான்மர் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம், மியான்மர் இராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரழந்ததாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம், "போலீஸ் மற்றும் இராணுவப் படைகள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு கிடைத்த நம்பகமான தகவல்களின்படி - குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது.

 

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளார், மியான்மர் இராணுவத்தை எச்சரிக்குமாறு, உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளர், "தேர்தல் மூலம் வெளிப்பட்ட மியான்மர் மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும், அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் ஒன்று கூடி இராணுவத்திற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்புமாறு பொதுச்செயலாளர் கேட்டுக்கொள்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தத் தாக்குதலில் பலியான இணைய நெட்வொர்க் பொறியாளர் ஒருவர், தாக்குதலுக்கு முதல்நாள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க எத்தனை இறந்த உடல்கள் தேவை எனக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்! 

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
worth Rs 280 crore seized in Chennai

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். இந்த சூழலில் அவர் போதைப்பொருள் கடத்த இருப்பதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தப் புகாரின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் விடுதியில் உதயகுமார் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பெரம்பூரில் உள்ள அக்பர் அலி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 280 கோடி மதிப்புள்ள 56 கிலோ போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருளை மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடந்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.