Skip to main content

எல்லை பிரச்சனை; “சீன அதிபர் இந்தியா வருவார்..” - ஜோ பைடன் நம்பிக்கை

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

 Joe Biden Hopes Chinese president will come to India

 

ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி 20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இந்த மாநாட்டை நடத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றது.

 

அதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்டோர் டெல்லியில், நடைபெறும் உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பங்கேற்கவில்லை என்றும் இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக விளக்கமளித்துள்ளார் என்றும் தகவல் வெளியானது. அவருக்குப் பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ் ரோவ் பங்கேற்க இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைமையில் சுமார் 25 க்கும் மேற்பட்ட அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

 

இந்த நிலையில், சமீப காலமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை சம்பந்தமாக உரசல்கள் இருந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் நடந்த ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட சில தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது,  பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சத்தித்து இது குறித்து உரையாடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக சீன வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், “பிரதமர் மோடி வேண்டுகோளின் பேரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது அதிபர் ஷி ஜின்பிங் மோடியுடன் பேசினார்” என்று தெரிவித்திருந்தது. அதே போல், இந்திய அதிகாரிகள் தரப்பிலும் தகவல்கள் வந்தன.

 

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பகுதியாக அறிவித்து உரிமை கொண்டாடி  சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த நிலையில், உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்பதை அந்த நாட்டு அரசு இதுவரை உறுதி செய்யவில்லை. எனவே, அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

 

இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம்  ‘சீன அதிபர் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறீர்களா?’ என்று செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் கலந்துகொள்வார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கார்கே இது போன்ற விஷயங்களில் பொறுப்புடன் பேச வேண்டும்” - மத்திய அமைச்சர் விமர்சனம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Union Minister pralhad joshi says Kharge should speak responsibly on such matters

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார் என்ற இடத்தில் கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியா காந்தியின் குடும்பத்தை வசைபாடுவதிலே முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மோடி தன்னை ‘56’ அளவு மார்பு கொண்டவன், பயப்பட மாட்டேன் என்று கூறுகிறார். நீங்கள் பயப்படாவிட்டால், சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை கொடுத்தது ஏன்?. சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? அல்லது அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா?” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (05-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பற்றி நான் இத்தகைய மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரபலமான பிரதமராக இருப்பதால், கார்கே எந்த வகையான மொழியைப் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கார்கே, மாபெரும் கட்சியின் தேசியத் தலைவர். 

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் இது போன்ற விஷயங்களில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை. சீனாவின் ஊடுருவல்களை நாங்கள் தடுத்துள்ளோம். 1962ஆம் ஆண்டில், 34,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கைப்பற்றியபோது அதை ஏன் காங்கிரஸ் தடுக்கவில்லை?. சீனாவை இந்திய எல்லைக்குள் நுழைய எங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறோம். ஒரு அங்குல நிலம் கூட யாராலும் அபகரிக்கப்படவில்லை” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்?” - கனிமொழி எம்.பி. கேள்வி

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
"When will PM Modi open his mouth on China border issue?" - Kanimozhi MP question

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

"When will PM Modi open his mouth on China border issue?" - Kanimozhi MP question

இந்நிலையில் இது குறித்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,  திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்களின் ஆதாயத்திற்காக, நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பா.ஜ.க.?. தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.