Skip to main content

ஈராக் பிரதமரைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

Published on 07/11/2021 | Edited on 07/11/2021

 

iraq pm

 

ஈராக் நாட்டின் பிரதமராக உள்ள முஸ்தபா அல்-காதிமியின் வீட்டின் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் பிரதமர்  முஸ்தபா அல்-காதிமி காயமின்றி உயிர் தப்பியுள்ளார். அதேநேரத்தில் பிரதமரின் பாதுகாவலர்கள் ஏழு பேர் இந்த ட்ரோன் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக  ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

முஸ்தபா அல்-காதிமியை கொலை செய்யவே இந்த தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ள ஈராக் ராணுவம், இந்த தோல்வியடைந்த முயற்சி தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படைகள் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

 

ஈராக் பிரதமரைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. அதேநேரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஈரான் ஆதரவு குழுக்கள் பெரிய தோல்வியைச் சந்தித்தன. இதனையடுத்து அக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம் ஒன்றில் வன்முறை வெடித்தது. இதில்  ஈராக் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஈரான் ஆதரவு குழுவினர் என இருதரப்பும் துப்பாக்கியால் தாக்கிக் கொண்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார்.  ஈராக்  பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பலர் காயமடைந்தனர். இந்த சூழலில் பிரதமரைக் கொல்ல தாக்குதல் நடைபெற்றுள்ளதால், ஈரான் ஆதரவு ஷியா போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் புதிய பிரதமர் பதவியேற்பு!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
New Prime Minister sworn in in Pakistan!

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. இருப்பினும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

அதே சமயம் தேர்தல் நடந்து நாட்கள் கடந்த பிறகும் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அதன்படி நவாஷ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் 33வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார். 

Next Story

ட்ரோன்களை பறக்கவிட்ட காவல்துறை; பட்டங்கள் மூலம் பதிலடி கொடுத்த விவசாயிகள்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Police Flying Drones Farmers reaction with kite

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நேற்று முன்தினம் (13.02.2024) பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கினர்.

அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் டெல்லி - பஞ்சாப் எல்லையில் பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விவசாயிகள் பட்டங்களை பறக்கவிட்டு டிரோன்களை தடுத்து நிறுத்தினர். ஹரியானா காவல்துறையினர் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கு பஞ்சாப் மாநில அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர். பஞ்சாப் பகுதிக்குள் டிரோன்களை அனுப்ப வேண்டாம் என பாட்டியாலா காவல் துறை ஆணையர் சவுகத் அகமது அம்பாலா காவல்துறை துணை ஆணையருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து பஞ்சாப்பில் விவசாயிகள் இன்று (15.02.2024) ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்த ரயில் மறியல் போராட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை  நடைபெற உள்ளதா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நேற்று (14.02.2024) இரவு 7 மணிக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவிருந்தது. இருப்பினும் நேற்றிரவு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.