Skip to main content

இளவரசர் சார்லஸை ஆயுர்வேத மருந்து குணப்படுத்தியதாக மத்திய அமைச்சர் பேச்சு... உண்மை என்ன..?

Published on 03/04/2020 | Edited on 03/04/2020


கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சை மூலமாகவே குணமடைந்துள்ளதாக மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் பேசியுள்ள நிலையில்,இது தவறான தகவல் என இளவரசரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

 

did charles takes ayurvedic medicines for corona

 

 

உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் குணமாகியுள்ளார். சர்வதேச அளவில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000-ஐ கடந்துள்ளது. 2,12,018 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் இளவரசர் சார்லஸை ஆயுர்வேத மருந்துதான் குணப்படுத்தியது என மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வியாழக்கிழமை கோவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், "பெங்களூருவில் சவுக்கியா ஆயுர்வேத ரிசார்ட்டை நடத்தி வரும் டாக்டர் ஐசக் மத்தாயிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மூலம் இளவரசர் சார்லஸுக்கு அவர் அளித்த சிகிச்சை வெற்றியடைந்துள்ளதாக அவர் என்னிடம் கூறினார். இளவரசர் சார்லஸ் தற்போது கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் லண்டனில் உள்ள இளவரசரின் செய்தித் தொடர்பாளர் இந்தத் தகவலை மறுத்துள்ளார்.இந்துஸ்தான் டைம்ஸ் சார்பாகச் சார்லஸின் செய்தித் தொடர்பாளரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, "இந்தத் தகவல் தவறானது. வேல்ஸ் இளவரசர் இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவையின் (என்.எச்.எஸ்) மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினார், அதற்கு மேல் எதுவும் இல்லை ” எனத் தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்