Skip to main content

பைக் திருடர்களை காட்டி கொடுத்த இளைஞர் கொடூர கொலை!

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

bike youngster incident in vilupuram

 

விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் அருண் (21). விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ வரலாறு படித்து வந்த அருணின் இருசக்கர வாகனம் காணாமல் போனது. இது தொடர்பாக அருண் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது இருசக்கர வாகனத்தை திருடியதில் தனது கிராமத்தைச் சேர்ந்த 4 பேரின் மீது சந்தேகம் இருப்பதாக கூறிய, அருண் அவர்களுடன் செல்போனில் பேசிய குரல் பதிவை போலீசாரிடம் ஆதாரமாகக் கொடுத்துள்ளார்.

 

இதனையடுத்து அந்த கிராமத்திற்குச் சென்ற போலீசார் வீரமணி, சத்தியா, சரத்ராஜ், கீர்த்தி வர்மன் ஆகிய நான்கு பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இரு சக்கர வாகனத்தை நாங்கள் திருடவில்லை என அவர்கள் போலீசாரிடம் கூறியதையடுத்து போலீசார் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். தங்கள் மீது புகாரளித்த அருண் மீது ஆத்திரம் கொண்ட நான்கு பேரும் மேலும் சில கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு 'இருசக்கர வாகனத்தை நாங்கள் தான் திருடினோம் அதைத் திருப்பி தருகிறோம் நாங்கள் சொல்லும் இடத்திற்கு வா' எனக் கூறியுள்ளனர்.

 

மாணவன் அருணும் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்ற நிலையில் பணப்பாக்கம் ஏரிக்கரையில் வைத்து அருணின் கழுத்தை நெரித்து கொலை செய்த அந்த கும்பல் அருணின் ஆடைகளைக்  களைந்து உள்ளாடைகளுடன் சடலத்தை பணப்பாக்கம் ஏரியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றனர்.

 

இக்கொலையில் ஈடுபட்ட கும்பலில் இருந்த சத்தியா என்ற இளைஞன் கிராமத்திற்கு வந்து போதையில் கொலை செய்ததை உளறியுள்ளான். உடனடியாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த கும்பலை அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கொலை செய்து பணப்பாக்கம் ஏரியில் வீசப்பட்ட அருணின் சடலத்தை போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டதில் இன்னும் பல நபர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை கைது செய்ய வேண்டும், அதுவரை மாணவனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.