விமானத்தில் பெட்டிகளை வைப்பது தொடர்பாக விமான பணியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஆஸ்திரேலியாவின் பிரபல பாப் இசை பாடகிகளான லிசா-ஜெசிகா சகோதரிகள் விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
![australian pop singers kicked off from a plane](http://image.nakkheeran.in/cdn/farfuture/tlw-XaQHXy8314kdaL0bHk6KCxg4FKJ2NTAZ_SX0pfM/1569300712/sites/default/files/inline-images/popsi.jpg)
இரட்டை சகோதரிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆஸ்திரேலியா நாட்டில் பிரபலமான பாடகிகள். இவர்கள் நேற்றுமுன்தினம் குயின்ஸ்லாந்து மாகாணம் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் இசைக்கச்சேரியில் பங்கேற்பதற்காக சிட்னி விமான நிலையம் சென்று, குவாண்டாஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ஏறினர். அப்போது தங்களது உடைமைகளை எங்கே வைப்பது என்பது தொடர்பாக விமான பணிப்பெண்ணிடம் அவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
வாக்குவாதம் பெரிதானதை அடுத்து விமான அதிகாரிகள், அவர்களை விமானத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் வெளியேறாததை அடுத்து விமானத்திற்குள் வந்த காவலர்கள், அவர்களை வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து வெளியேற்றினர். இதனையடுத்து குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.