கடந்த மூன்று மாதங்களாக ஆஸ்திரேலியா முழுவதும் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு பலத்த பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதமாக தெற்கு சவுத்வேல்ஸ் மாகாணத்தில் தொடங்கிய காட்டுத்தீயை அணைக்க ஆஸ்திரேலிய அரசு கடுமையாக போராடி வருகிறது. இருப்பினும் வறண்ட வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவு வேகமாக பரவி வருகிறது. தெற்கு சவுத்வேல்ஸ் மாகாணத்தில் தொடங்கிய காட்டுத்தீ தற்போது மெல்ஃபோர்ன் நகர் வரை பரவி உள்ளது. இந்தக் காட்டுத் தீயால் இதுவரை 1300 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த காட்டுத் தீயினால் இதுவரை 18 பேர் பலியாகி உள்ள நிலையில் 12 பேர் மாயமாகி உள்ளனர். இந்நிலையில், காட்டுத்தீயை அணைப்பதில் ஆஸ்திரேலிய அரசு போதிய வேகத்துடன் செயல்படவில்லை என கூறி பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனின் திட்டமிடுதலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் காட்டுத்தீ, பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்க கோரி சிட்னியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.