
தூத்துக்குடி மாவட்டம் கீழநம்பிபுரத்தைச் சேர்ந்தவர்கள் அய்யனார் - காளியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் 17 வயது சிறுமியும் பரமக்குடியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்குத் தெரியவர, அவர்கள் சிறுமியை அழைத்துக் கண்டித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமி சந்தோஷுடன் பேசுவதைத் தவிர்ந்துவந்துள்ளார். இந்த சூழலில்தான் சிறுமியை அவரது பெற்றோர்கள் பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது கடந்த 23 ஆம் தேதி சிறுமியின் பாட்டி வீட்டிற்கு வந்த சந்தோஷும் அவரது நண்பர் முத்தையா என்பவரும் சிறுமியின் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி தீ வைத்தது சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா என்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.