Skip to main content

வேலை தேடி வந்த இளைஞரை எரித்தவர்கள் கைது..! சி.சி.டிவி காட்சிகளை மீட்பதில் காவல்துறை மும்முரம்..! 

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

Youths arrested in job seekers issue Police busy in retrieving CCTV footage ..!

 

திருச்சி, ரெட்டியூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). இவரது மனைவி, சில காலம் முன்பாக இவரைப் பிரிந்து சென்றதால், சதீஷ்குமார் தாய், தந்தையுடன் வசித்துவருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலை தேடி புதுச்சேரிக்கு வந்துள்ளார். பல இடங்களில் முயன்றும் வேலை கிடைக்கவில்லை. கடந்த 26ஆம் தேதி இரவு மேட்டுப்பாளையம் சந்திப்பில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் வளாகத்தில் தூங்கச் சென்றுள்ளார். 

 

அப்போது அவரை, பங்க் ஊழியர்கள் விரட்ட முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு ஒரு மணிக்கு பங்க் உரிமையாளர்கள் மேட்டுப்பாளையம் ராஜமௌரியா (27), ராஜவர்மன் (26) உள்ளிட்டோர் சதீஷ்குமாரிடம், “பில்லி சூனியம் வைக்க வந்துள்ளாயா? திருட வந்துள்ளாயா? உன்னை யார் அனுப்பியது?” என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு சதீஷ், “நான் சூனியக்காரன் இல்லை” என்று மறுத்துள்ளார். ஆனாலும் ஆத்திரமடைந்த ராஜமவுரியா, ராஜவர்மன், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஆகியோர் சேர்ந்து சதீஷ்குமார் மீது பெட்ரோலை ஊற்றி, 'உண்மையைச் சொல்லாவிட்டால் எரித்துவிடுவோம்' என மிரட்டியுள்ளனர். 

 

அப்போது திடீரென சதீஷ்குமார் மீது தீப்பற்றி, உடல் முழுவதும் எரிந்த நிலையில் சாலையில் ஓடி வந்த சதீஷ்குமார், தரையில் விழுந்து புரண்டு தீயை அணைத்தார். பைக்கில் வந்தவரிடம் லிஃப்ட் கேட்டு மருத்துவமனையில் விட்டுவிடும்படி கேட்டு, அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றார். 60 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சையில் உள்ள அவரிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்றார். 

 

அதனடிப்படையில் மேட்டுப்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ராஜமௌரி, ராஜவர்மன் மற்றும் ஊழியர்கள் தட்சிணாமூர்த்தி நகர் சிவசங்கர் (19), அரசூர் குமார் (47) ஆகியோரை 26ஆம் தேதி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள வெற்றி நாராயணன், சீதாராமன் (எ) சிவா, பிரசாந்த் ஆகிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர். பங்க் உரிமையாளர்கள் இருவரும் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மகன்கள் என்பதும், ராஜமவுரியா பாஜக வர்த்தகப் பிரிவு நிர்வாகியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பெட்ரோல் பங்க்கில் சதீஷ்குமார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம், அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. போலீசாரிடம் அது சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அந்தக் காட்சிகள் உடனடியாக அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகும் வி.ஆர். பாக்ஸிலிருந்து, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வீடியோ காட்சிகளை மீட்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தக் காட்சி கிடைக்கப்பெற்றதும் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனிடயே தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சதீஷ்குமார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி பாட்டு பாடிய ஜப்பானிய ரசிகர் - வீடியோ வைரல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
japanese sing rajinikanth muthu movie song

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மாணவர்களுக்கான பன்னாட்டு வணிகத்துறை சார்பில் தொழிற்சாலை - கல்வி நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மொத்தம் மூன்று நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் கலந்து கொண்டார். 

அப்போது நடந்த கருத்தரங்கில் தமிழ் மொழி குறித்து பேசிய அவர், தமிழ் தனக்கு நன்றாகவே தெரியும் என்றும், தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இறுதியாக ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ பாடலை முழுவதுமாக பாடி அசத்தினார். அதை அங்கிருந்த மாணவர்கள் உள்பட அனைவருகளும் கைதட்டி ரசித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் ஜப்பானில் மட்டும் 180க்கும் மேற்பட்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அங்கு வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.