Skip to main content

காதல் மோதலில் கொலை? - உறவினர்கள் மறியலால் பரபரப்பு

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

youth passed away relatives involved in strike

 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ளது முன்னூரான்காடுவெட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பட்டுசாமி-கம்சலை தம்பதியரின் 19 வயது மகன் அழகேசன். இவரது தாய் தந்தை இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். அதன் பிறகு, தாய் தந்தையை இழந்த அழகேசனை அவரது பெரியம்மா கௌசல்யா தனது வீட்டிற்கு அழைத்து வந்து தன் பிள்ளையைப்போல வளர்த்து பி.இ. சிவில் படிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அழகேசன் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

 

இவர்களது காதலுக்கு பலத்த எதிர்ப்பு இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை அதே பகுதியில் உள்ள ஆசனேரி தண்ணீரில் அழகேசன் பிணமாக மிதந்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த அவரது உறவினர்கள், ஊர்மக்கள் அழகேசன் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். அதே போல் அழகேசன் காதலித்த அதே பெண்ணை மற்றொரு வாலிபர் காதலித்து வந்தததால் அவர்தான் அழகேசனை கொலை செய்திருக்கலாம் எனக் கூறியுள்ளனர். இருவருக்கு இடையே காதல் மோதல் இருந்ததால் அவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம். எனவே இந்தக் கொலைக்கு காரணமான அந்த இளைஞரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோரி விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில் அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

 

இந்தத் தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன், ஆண்டிமடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதோடு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் அழகேசன் காதலித்த பெண்ணை போட்டி போட்டு காதலித்த மற்றொரு இளைஞரைக் கைது செய்தால்தான் மறியலைக் கைவிடுவோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சந்தேகத்தின் பெயரில் அந்த இளைஞரைக் கைது செய்ய முடியாது எனத் தெரிவித்தனர்.  

 

அதே போல் இறந்துபோன அழகேசனின் பிரேதப் பரிசோதனையின் அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறுதலாக தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்தாரா என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சாலை மறியலைக் கைவிட வேண்டும் இல்லையேல் உங்கள் அனைவரையும் கைது செய்வோம் என்று காவல்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து அழகேசனின் உறவினர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.