கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது திருக்கூட்டம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 32 வயது கோவிந்தன். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் மோனிஷா என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. கோவிந்தன் கடந்த 5 ஆண்டுகளாக நான்கு சக்கர வாகனம் ஓட்டும் டிரைவராக வேலை செய்துவருகிறார். தற்போது கரோனா பரவல் காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று கீழ்குப்பம் ஆற்றங்கரையோரம் உள்ள அவருக்குச் சொந்தமான வயலில் பயிர் செய்யப்பட்டிருந்த மக்காச்சோளத்தைப் பார்ப்பதற்குச் சென்றுள்ளார்.
அங்கு மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது கை, கால்களில் தீக்காயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் உடனடியாக சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கிருந்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவர்கள் கீழ்குப்பம் பகுதியில் விசாரணை நடத்தி சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஊர் மக்கள் மத்தியில் கோவிந்தன் மின்சாரம் தாக்கி இறந்ததாக வதந்தியைப் பரப்பியுள்ளனர். காவல்துறையும் இதேபோன்று வழக்குப் பதிவுசெய்துவிடுமோ என்று கருதிய அவரது உறவினர்கள், கீழ்குப்பம் அருகே சேலம் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மர்ம மரணத்தில் உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று கூறினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்கில் முறையாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்குபுதூரைச் சேர்ந்த வேன்டிரைவர் முருகன் கடந்த மார்ச் 8 அன்று (மஹாசிவராத்திரி) அச்சம்பட்டியிலிருந்து பொது மக்களை வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்சஸ்தலங்கள் செல்வதற்காக சங்கரன்கோவில் டவுண் பஜார் வழியாக வந்திருக்கிறார். அதுசமயம் எதிர்பாராத விதமாக வேன் முன்னே சென்ற ஆட்டோ ஒன்றில் மோதியதால், வேன்டிரைவர் முருகனும் ஆட்டோ ஓட்டுனரும் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மெயின் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட தொலைவிற்கு ப்ளாக் ஆகியது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் முருகனை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த முருகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையறிந்த முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவு முழுக்க சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் தாக்கியதால்தான் முருகன் இறந்ததாகக் கூறி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அது வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் வடக்குபுதூர் கிராமத்தில் 6வது நாளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உடன் மார்க்சிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்டதன்படி மார்ச் 13 அன்று சங்கரன்கோவில் நகரின் தேரடித் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற வகையில் காலை 10.30 மணியளவில் நகரைச் சுற்றியுள்ள வடக்குபுதூர், காந்திநகர், அச்சம்பட்டி, புளியம்பட்டி நெடுங்குளம், அழகாபுரி, சீவலராயநேந்தல், அழகுநாச்சியார்புரம், அழகநேரி என 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பங்கேற்றனர். அதுசமயம் ஒரு பகுதியினர் நகரின் முக்கியத் தடுப்புகள், தடைகளைப் போட்டு வாகனங்களைத் தடுத்தும் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக பாதுகாப்பு பணிக்கென்று போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரம் இறுக்கமானது. இதனிடையே சங்கரன்கோவில் அருகேயுள்ள மருதப்பபுரம் கிராமத்தில் எதிர்பாராத வகையில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்ததால் அதனை அணைக்கிற வகையில் அந்த வழியாக வந்த சங்கரன்கோவிலின் தீயணைப்பு நிலைய வாகனத்தை நகருக்குள் விடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க தீயணைப்பு வாகனம் வேறு வழியாகச் சென்றது.
நேரம் செல்லச் செல்ல வேறு சில பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் பிரதானச் சாலையை நோக்கி திரண்டு வர அது சமயம் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி கற்களை வீசவே, பதற்றமடைந்த வியாபாரிகள் பீதியில் கடைகளை அடைத்தனர். ஆபத்தான நிலையை அறிந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார் மறியல் நடந்த பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வந்தவர் அவர்களை சமாதானப் படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஒரு பகுதியினர் அவரைச் சூழ்ந்து கொண்டவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து அவர்களிடம் பேசிய எஸ்.பி, முருகன் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக கூறியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மறியல், ஆர்ப்பாட்டம் என நகரம் துண்டிக்கப்பட, சுற்றுப்பட்டுக் கிராமங்களிலோ, பதற்றமும் பரபரப்பும் இறங்கியபாடில்லை.
திருச்சி பேட்டைவாய்த்தலை பெரியார் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (55). இவர் அரசுப்பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை, ராம்ஜி நகரில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் அரசு நகரப்பேருந்தில் பணியிலிருந்தார். அவருடன் குளித்தலையை சேர்ந்த நடத்துனர் முருகானந்தமும் (32) பணியிலிருந்தார். பேருந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வழியாக சென்ற போது, அதே வழியில் ஆட்டோவில் சென்ற 4 பேர், பேருந்தை மறித்து, அவர்களை முந்திச்செல்ல வழிவிடாமல் பேருந்தை இயக்கியதாக கூறி தகராற்றில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றியதில் ஓட்டுநர் சக்திவேலையும் தடுக்க முயன்ற நடத்துநர் முருகானந்தத்தையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் பேருந்து சாலையில் நிறுத்தப்பட்டதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சக ஓட்டுநர்களுடன் சக்திவேல் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கிய அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (36), சசிக்குமார் (32) இருவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.